உனை ஈர்க்காவொரு மழையின் பாடல்

This entry is part 20 of 42 in the series 22 மே 2011

நான் மழை

ஈரலிப்பாக உனைச் சூழப் படர்கிறேன்

உன் பழங்கால ஞாபகங்களை

ஒரு கோழியின் நகங்களாய்க் கிளறுகிறேன்

 

எனை மறந்து

சிறுவயதுக் காகிதக் கப்பலும், வெள்ள வாசனையும்

குடை மறந்த கணங்களும், இழந்த காதலுமென

தொன்ம நினைவுகளில் மூழ்கிறாய்

ஆனாலும்

உன் முன்னால் உனைச் சூழச்

சடசடத்துப் பெய்தபடியே இருக்கிறேன்

 

உனைக் காண்பவர்க்கெலாம்

நீயெனைத்தான் சுவாரஸ்யமாய்க்

கவனித்தபடியிருக்கிறாயெனத் தோன்றும்

எனக்குள்ளிருக்கும் உன்

மழைக்கால நினைவுகளைத்தான்

நீ மீட்கிறாயென

எனை உணரவைக்கிறது

எனது தூய்மை மட்டும்

 

இன்னும் சில கணங்களில்

ஒலிச் சலனங்களை நிறுத்திக்

குட்டைகளாய்த் தேங்கி நிற்க

நான் நகர்வேன்

 

சேறடித்து நகரும் வாகனச்சக்கரத்தை நோக்கி

‘அடச்சீ..நீயெல்லாம் ஒரு மனிதனா?’

எனக் கோபத்தில் நீ அதிர்வாய்

 

எனைத் தனியே ரசிக்கத் தெரியாத

நீ மட்டும் மனிதனா என்ன?

 

எம்.ரிஷான் ஷெரீப்,

இலங்கை

 

Series Navigationமுகபாவம்அகம்!
author

எம்.ரிஷான் ஷெரீப்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *