தொடு -கை

This entry is part 15 of 20 in the series 26 ஜூலை 2015

-எஸ்ஸார்சி

உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம் இதுவா பிரச்சனை ஆகிவிடும். ஆகிவிட்டதே.முதுபெருங்களத்தூரில் ஒரு பகுதி புதியதாகத்தோன்றி வளர்ந்து வரும் பகுதி.சென்னை மா நகரோடுல் எங்கோ ஒரு மூலையில் ஓரமாகத் தொத்திக்கொண்டு நிற்கிறது. பெயர் சூட்டும் பெரிய மனிதர்கள் அந்தப்பகுதிக்குப்பெயர் நன்றாகத்தான் வைத்திருக்கிறார்கள்.ரெங்கபுரி.உடனே இங்கு ரெங்க நாதருக்கு ஆலயம் ஏதேனும் உண்டா என்று கேட்டு வைக்காதீர்கள்.இது வரை அப்படி ஒரு கோவில் இல்லை. இனி வரலாம். எந்த சாமிக்கு எந்த ஊரில் எழுந்தருளப் பிராப்தமோ யார் கண்டார்கள்
.ரெங்கபுரியில் பிரதானமாக ஒரு தெருவின் முடிவில் ஒரு பிள்ளையார் கோவில்.பிள்ளையார்கோவில் என்று ஆரம்பித்து ஒவ்வொரு சாமியாக எல்லா சாமிகளும் கோவிலுக்குள் கொலு கொண்டுவிட்டார்கள். எல்லா சாமிகளும் என்றால் நவக்கிரகமும் தட்சிணாமூர்த்தியும் ஆஞ்சனேய சுவாமியும் அவசியம் உண்டு.அட்டமத்து ச்சனி ஏழரைச்சனி எட்டில்பாதிச்சனி சாதகத்தின் பன்னிரு கட்டங்களில் ரெண்டு ஏழு எட்டு இந்த இல்லங்களில் சனியார் உட்கார்ந்து மக்களைப் படுத்தும்பாடு சாதாரணமா ? அறிந்தவர்களுக்கு அனுபவப்பட்டவர்களுக்கு விஷயம் நான் சொல்ல வேண்டியதில்லை.அப்புறம் ஒரு சமாச்சாரம் ஞாயிற்றுக்கிழமை மாலை நாலரை ஆறு ராகு காலம் பகழ் துர்க்கையம்மனுக்கு அங்கு ஏற்றப்படும் திருப்பிப்போட்ட எலுமிச்சை த்தோல் விளக்குகள் யாரும் பார்த்தும் இருக்கலாம். அப்பேர்பட்ட துர்க்கை அம்மனுக்கு ஒரு சன்னதியும் இந்த பிள்ளையார் கோவிலில் உண்டு..
அது சரி கோவிலுக்கு பன்னிரெண்டு வயது ஆகிவிட்டதால் மீண்டும் ஒரு குடமுழுக்கு செய்தாகவேண்டும். சுவாமியின் சக்தி பன்னிரெண்டு வருடங்கள்தான் மூலவர் சிலைமீது அமர்ந்திருக்கும்.பிறகு அது கொடி மரம் மீது கொலுவிருக்கும் பிறகு கோபுரக்கலசம் மீது மட்டும் குடி இருக்கும் அதற்குப்பிறகு தல விருடசத்திற்கு வரும் அப்புறமாய் அது வானகம் சென்று விடும். இது எல்லாம் எழுதி வைத்துவிட்டுப்போயிருக்கிறார்களே. ஆக ரெங்கபுரி பிள்ளையார் கோவிலுக்கு க்கும்பாபிஷேகம் செய்தாக வேண்டும் என்று ரெங்கபுரி வாசிகள் முடிவுசெய்தார்கள்.பேருக்கு ஒரு வைஷ்ணவர் கூட இல்லாத ரெங்க்புரியில் எப்படி ஒரு பிள்ளையார்கோவில் சாத்தியம் என்று யோசிக்க வேண்டாம்.பிள்ளையார் கோவில் எல்லாம் பிற்பாடு வந்தது.இங்கு மண்ணிவாக்கம் பெரிய ஏரித்தண்ணீர் பாசனம்.நெல் கரும்பு விளைந்த அற்புதமான பூமிதான் ரெங்கபுரியாக மாறி இருக்கிறது. இந்த விளையும் பூமிக்குச்சொந்தக்காரர் திருப்பெயர் ரெங்கமன்னார்.சைவப்பிள்ளைதான் அவர். அவருக்கு எப்படி ரெங்க மன்னார் என்று பெயர் வந்தது என்று கேட்டால்.அவர் திருவில்லிப்புத்தூர்க்காரர் ஆக அப்படி என்பார்கள்.ரெங்க மன்னார் திருவீதி உலா வரும் சமயம் பிறந்த குழந்தை என்பதால் ரெங்க மன்னார் என்று திரு நாாமம் சூட்டித்தான் ஆகவேண்டும் என்று அவர்தாய்மாமா வகையறா அடம்பிடித்தனராம் மற்றபடி அதற்குள் நீட்டாக ஏன்போகவேண்டும் அய்யா விடுங்கள்.
ராஜகோபால் பிள்ளைதான். இங்கு பிள்ளையார் கோவிலில் தேவாரம் பாடிக்கொண்டிருந்த பெரிய மனிதர்.அவருக்கு ப்பிள்ளையார்கோவிலில்தான் படுக்கை. அவரைத்தருமங்குடி ப்பிள்ளை என்கிறார்கள்.மற்றபடி அவருக்கு க்குடும்பம் இத்யாதிகள் உண்டா என்று தெரியவில்லை. யார் இது எல்லாம் அவரிட்ம் கேட்டார்கள்.யார் எப்படி ப்போனால் என்ன.நமக்கு க்காரியம் அதாவது ஆக வேண்டியகாரியம் ஆனால் சரி என்பதாகத்தான் வாழ்க்கை வாழ பழகிக்கொண்டிருக்கிறோம்.
பிள்ளையார்கோவில் கும்பாபிஷேகத்திற்கு நாள் குறித்தாகிவிட்டது..கும்பாபிஷேஹ கமிட்டி போட்டு அது தன் பாட்டில் வேலை செய்து கொண்டிருந்தது. கோவில் கட்டிடத்தில் போனது வந்தது பார்த்து வர்ணமிட்டு சுதைவேலைகள் பாக்கி இருப்பது நேர்செய்து ஆசாரி வேலைகள் விட்டுப்போனது எல்லாம் முடித்துக்கொண்டே வந்தார்கள்.கோவி வாயிலில் இரண்டு கல் வெட்டு நல்ல உயரத்துக்கு நிறுவப்பட்டு இருந்தது.ஐயாயிரம் நன்கொடை வழங்கியவர்கள் ஒன்றிலும் பத்தாயிரத்துக்கு நன்கொடை அளித்தவர்கள் இன்னொன்றிலும் இடம் பிடித்துக்கொண்டார்கள். நன்கொடைகள் எல்லாம் கூட்டிப்பார்த்தால் பல லட்சங்கள் வந்தன. பிள்ளையார் கோவில் ஆராய்ச்சி மணியில் .குருமூர்த்திபுரம் ஆலூர் ஜெயராமன் உபயம் என்று எழுதியிருந்தது.பிள்ளையார் சன்னதியின் பிரதான கேட்டில் தியாகராய நகர் அட்வகேட் சந்திரசேகரன் மற்றும் அவர் மனைவி லதா என்று இரும்பு க்கம்பியால் வளைத்து வளைத்து எழுதியிருந்தார்கள்.சுதைவேலைகள் பெரிய மண்டபம் சுற்றிலும் அழகாகச்செய்து வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு சிலைக்கும் கீழாக அதன் உபயம் யார் என்று பெயர் எழுதியிருந்தார்கள். மின்சார விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. அந்த ஒளிக்குழாய்களுக்கு இடையில் பளிச்சென்று இது தருமங்குடி கார்கேய கோத்திரத்து சிட்ல சதாசிவ அய்யர் உபயம் என்று எழுதி இருந்தது.தரை கிரானைட் கற்கள் மட்டும் சும்மாவா என்ன குருகைகாவலப்பர்கோவில் முனிபல்ல மருத்துவர் உமாமகேசுவரன் சகுந்தலா தம்பதியர் உபயம் என்று எழுதிவைத்திருப்பதை க்கண்சிமிட்டி பார் பார் எனக்காட்டியது.
கும்பாபிஷேக ச்செலவுக்கு பணம் போட்டவர்கள் பெயர் ஒரு பெரிய டிஜிடல் பேனரில் எழுதி அருகே அவர்களின் போட்டோக்கள் அழகாக சிரித்துக்கொண்டு இருந்தன.கும்பாபிஷேக நோட்டிசு அடித்த வகையில் காசு கொடுத்து உதவிய பெரிய மனிதரின் திருப்யெர் நோட்டிசுக்கு அடியில் கடைசி வரியாக அமைந்து வாசிப்போர்க்குச் செய்தி சொன்னது.
ரெங்கபுரி சித்தி விநாயகர் பெயர்தான் எந்த மூலையில் எழுதி இருக்கிறது என்று கண்டுபிடிக்கமுடியவில்லை. ஆனால் மூலவர் பின்னே நிற்கும் பித்தளை திருவாட்சி ஆறுமுகம் பால் வியாபாரம் ரெங்கபுரி என்று எழுதியிருந்தது சேவார்த்திகள் அனைவ்ரின் கண்களிலும் பளிச்சென்று பட்டது.தீபாராதனை தட்டுகள் அனைத்தும் அதனை யார் யார் வாங்கிக்கொடுத்த பெரியவர்கள் என்பதனைச்சொல்லிக்கொண்டன.மனிதமனம் தன் இருப்பினை இந்த மண்ணில் விட்டுச்செல்லவே இத்தனை ஆசை.ஒன்று மட்டும் உறுதி தான் நாம் இல்லாதுபோய்விடுவோம்.இந்த உலகம் நாம் இல்லாது அதுபாட்டுக்கு இயங்கும்.சினிமாவுக்குப்போகிறவர்கள் அவர்கள் பாட்டுக்குப்போவார்கள் .சீட்டாடுபவர்கள் அவர்கள் பாட்டுக்கு ஆடுவார்கள்.சாராயம் குடிப்பவர்கள் கடை வாசலில் முண்டி அடித்துக்கொண்டு குடிப்பார்கள். இது சாராயம் இது கொடிய நஞ்சு இதனைக்குடிக்க குடிக்க தான் செத்துப்போவேன் இது உறுதி என் குழந்தை குட்டிகள் தெருவில் பிச்சைஎடுக்கும் எனக்குத்தெரியும் தெரிந்துதான் நான் குடிக்க்கிறேன் என்று பத்து தடவை சொல்லியபின்னர்தான் சாராயபாட்டில் கையில் கொடுப்பார்கள் என்று சொல்லுங்களேன்.அதனால் என்னவாம் பத்து தடவை என்ன நூறு தடவையானாலும் சொல்லிவிட்டு குடிப்பவர்கள் குடிப்பார்கள். ஆக ஒன்றும் ஆகிவிடாது.அயோத்தி ராமனும் மதுராவின் கிருட்டினனும் செத்துதானே போனார்கள்.உலகத்தில் செத்துப்போகாதவர்கள் யாருமில்லை.புத்தர் சொன்ன விஷயம்தான்.ஆக தான் இந்த உலகைவிட்டுப் போனபின்னரும் தன் பெயர் இருப்புக்கு இங்கு என்ன வழி என்பது சின்ன சிந்தனை ஆகிவிடுகிறது.தானிருக்கும் வரை தன் பெயர் பளிச் பளிச் என்று எழுதி த்தெருவெங்கும் தொங்க வேண்டும் சராசரி ஆசை.. கும்பாபிஷேகத்திற்கு டிஜிடல் பேனர் வைத்திருந்தார்கள்.விநாயகர் படத்தோடு போட்டி போட்டுக்கொண்டமாதிா தான் ரெங்க புரி வாழ் தலைவர் படங்கள்.தலைவர்களில் மூன்று ரகங்கள் இருந்தன..யோசனைக்கு ஒருத்தர்,அடிதடி குத்து வெட்டு என்றால் அதற்கு இன்னும் ஒருவர்.காசு பணம் புரட்டி க்கொடுக்கும் மற்றுமொருவர். இவர்களுக்கு கீழாக அப்படியே மூன்று வரிசை சின்ன தலைவர்கள்.மற்றவர்கள் எல்லாம் பேனரில் பெயர் வரும் வராமலிருக்கவும் செய்யவும் எதையும் வாயைத்திறந்து கேட்டுவிடலாம் என்றால் அது நடக்காத கதை.பிள்ளையார் கோவில் குருக்க்ள் மட்டும் சின்னவரா என்ன அவரின் திருப்பெயரும் படத்தோடு இடம் பெற்றுவிட்டது.யாரும் பாக்கி இல்லை.ரெங்கபுரி க்காரர்கள் அனேகமாய் எல்லோரும் தட்டியில் இடம் பிடித்துவிட்டார்கள். தேவாரம் பாடும் தருமங்குடி ராஜகோபால் பிள்ளை பெயர்தான் எங்குமே இல்லை.
.குடமுழக்கு அன்று யாகசாலையில் கடம் புறப்படுவதற்கு சற்று முன்னர்தான் அந்த கடைசிக்கால பூரணாஹூதி முடிந்தது. அதற்கும் முன்பாக வேத கோஷங்கள்.தொடர்ந்து திராவிடத்தோத்திரப்பிரியா திராவிடத்தோத்தரம் உப தாரயா'( காதில் விழுந்த வரைக்கும்) என்றார் பிரதான சிவாசாரியார். உடன் தேவார ம் பாடும் ராஜகோபால் பிள்ளை சிவா திருச்சிற்றம்பலம் என்று தொடங்கி, ‘உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம் தெள்ளத்தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம் கள்ளப்புலனைதும் காளா மணி விளக்கே’ என்று ஓங்கிப்பாடிமுடித்து நமப்பார்வதி பதயே அர அர மகாதேவா என்று கோஷம் சொன்னார்.நாதஸ்வரக்காரன் மல்லாரி வாசிக்கத்தொடங்கினான்.. வெட்டிப்பைய வந்தான் விறகொடிச்சான் வெந்நி தண்ணி வச்சான் அப்ப அப்ப அய்யய்ய சுப்பப்ப தப்பப்ப எப்பப்ப பெப்பப்ப பப்பப்ப பா…. பா என்று மல்லாரி பிரகாரத்தில் அசுர வேகத்தில்தான் பிரவாகித்து வந்தது.
கோவில் குருக்களுக்கு தேவார ராஜகோபால் பிள்ளை மீது ரொம்ப நாளாக ஒரு வருத்தம்.ஒரு நாள் பிள்ளை தைப்பூசம் என்று வடலூர் சென்றுவிட்டார். அன்றைய தினம் பார்த்தா அந்த தாம்பரம் ஆர் டி வோ ரெங்கபுரி பிள்ளையார் கோவிலுக்கு வர வேண்டும். எல்லாம் நேரம்தான்.பிளாட் வாங்குவது அல்லது விற்பது சம்பந்தமாக ரெங்கபுரி வந்தவர் சித்தி விநாயகர் கோவிலுக்கு வந்துவிட்டார். வந்தவர் பிள்ளையாரைப்பார்த்தமா ரெண்டு குட்டு குட்டிக்கொண்டு விபூதி வாங்கி நெற்றியில் இட்டுகொண்டு போயிருக்கலாம்.
‘ என்ன சிவாச்சாரியார் எந்த ஊருங்காணும் நீர்? பிள்ளையார் மேல அருணகிரி நாதர் பாடியிருக்கிற ஒரு பாட்டு தெரியுமோ? என்று கேட்டு விட்டார்.’தப்பும் தவறுமாதான் மந்திரம் சொல்வீர் அது ஊர் அறிஞ்சது பிராம்ணன்ல சொல்ற மந்திரத்திற்கு அர்த்தம் தெரிஞ்சவாளை நா இன்னும் பாக்கல்ல. ஆக தெரிஞ்ச தமிழ்ல ஒரு பாட்டாவது பிள்லையார்மேல பாடலாமே’ என்றார் ஆர் டி வோ.
குருக்கள் பேசாமல் இருந்துமிருக்கலாம் அவருக்குத்தான் ரெண்டில் சனி உட்கார்ந்து இருக்கிறானே எப்படி சும்மா இருக்கத்தான் முடியும் சொல்லுங்கள்.
‘தேவாரம் பாடுற ராஜகோபால் பிள்ளை இண்ணைக்கு வடலூர் போயிருக்கிறார்.நேக்கு தமிழ் பாட்டு சரியா பாடம் இல்லே’
கோவிலுக்கு வந்த ஆ ர் டி வோ ‘உம் மேல குத்தம் இல்லே’
என்று கிளம்பிச்சென்றுவிட்டார்.மறு நாள் கோவிலுக்கு வந்த ராஜகோபால் பிள்ளையிடம் அருணகிரி நாதர் பிள்ளையார் மேல் பாடிய பாட்டை ச்சொல்லிகொடுக்கும்படி கேட்டார். ராஜகோபால் பிள்ளை குருக்களிடம் ஒரு கேள்வி கேட்டார். ‘ தமிழ் எழுத்துக்கள் மொத்தம் எத்த்னை ஓய்?’
குருக்களுக்கு ஆத்திரம் பொங்கிக்கொண்டு வந்தது.இது எல்லாம் யார் கண்டார்கள்.குருக்கள் மனதிற்குள் சொல்லிக்கொண்டார்..இந்த தேவாரம் ராஜகோபால் பிள்ளையை இந்தக்கோவிலை விட்டு கிளப்பி விடவேண்டும் சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டே இருந்தார். அப்போதுபார்த்துதான் இந்த குட முழுக்கு விழா டிஜிடல் பேனர் ஒத்தாசை செய்தது.கும்பாபிஷேகக்கமிட்டித்தலைவரிடம் போனார்.’ முதலியாருக்கு நமஸ்காரம். ஒரு சேதி. அதாவது இந்த பிள்ளையார் கோவிலை சுற்றி கல்வெட்டுல அதுல இதுல உபயதாரர்கள் பேருங்க எல்லாம் எழுதிவச்சிருக்குறது தேவாரம் பாடுற ராஜகோபால் பிள்ளைக்கு பிடிக்கல. அதக்கிண்டல் பண்ணிப்பேசறார். ஒரு நாள் நானே என் காதாலே கேட்டேன்.. கும்பாபிஷேகத்து அண்ணைக்கு அவர் பாடின தேவாரப்பாட்டு உங்களுக்கு ஞாபகம் இருக்கோ ;உள்ளம் பெருங்கோவில் ஊன் உடம்பு ஆலயம் தெள்ளத்தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்னு அப்பிடி இப்படி பாடினது இது எல்லாம் நாம கோயில்ல செய்யுறது வெற்று ஆடம்பரமாம் வெளி வேஷம் மொதல்ல மனசு சுத்தம் இருக்குணும் அதுதான் தெய்வம். இந்த கல்வெட்டும் அதுல நம்ப பேரு எழுதிக்கறதும் இல்லே அது இதுன்னு பேசறார்’
‘என்ன குருக்களே நெஜமாவா சொல்லுறீர்’
‘அப்புறம் நான் எதுக்கு உங்க்ளண்ட பொய் சொல்றன்’
‘அது எல்லாம் இருக்கட்டும் அதுகளை நான் பாத்துக்கிறேன்.உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம்ங்க்ற பாட்டு யாரு பாடினது சொல்லுமே’
‘தெரியல’
‘மொதல்ல அது தெரிஞ்சிகும் குருக்களே.சுவாமிக்கு பூசைன்னா நாம அவர தொடுறது பெரிய விஷயமே இல்லே அவரு நம்ம தொடுவாறான்னு பாத்துக்கணும்ணும் அதான் பூசை’
‘அப்ப நான் புறப்படறேன்’
‘உம்மை முதுகை ப்பாரும் மொதல்ல.பெறகு பாக்கலாம் எல்லாத்தையும் அந்த தாம்பரம் ஆர்டிவோ என்னையும் பார்த்துட்டுதான் ஊருக்குப்போனார்’
கும்பாபிஷேக டிஜிடல் பேனரில் இந்த முதலியாரின் போட்டோ மாதிரிதான் இருந்தது. அது பிள்ளையார் சைசுக்கும் கொஞ்சம் பெரிசாதான் இருந்துது. ஆனா அவர் இப்ப பேசுறதோ வேற தினுசா இருக்கே’ மனதிற்குள் சொல்லிக்கொண்டே ஒரு தடவை அந்த பேனரைப்பார்த்துவிடுவது மட்டுமே சரிஎன்று அது நட்டு இருந்த இடத்துக்கு வேக வேக மாய் நடந்தார். டிஜிடல் பேனர் இருந்த இடத்தில் கம்பம் நட்டிருந்த குழிகள் மட்டுமே பாக்கி இருந்தன.. .
———–

Series Navigationபொ. செந்திலரசு காட்டும் அழகியல் பரிமாணங்கள்ஹாங்காங் தமிழோசை
author

எஸ்ஸார்சி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *