காலக் கண்ணாடியில் ஒரு கலை இலக்கியப் பார்வை

This entry is part 25 of 42 in the series 29 ஜனவரி 2012

தியத்தலாவ எச். எப். ரிஸ்னா (riznahalal@gmail.com)

மணிமேகலைப் பிரசுரத்தின் வெளியீடாக 46 தலைப்புக்களை உள்ளடக்கி 275 பக்கங்களில் காலக் கண்ணாடியில் ஒரு கலை இலக்கியப் பார்வை என்ற திரு. கே.எஸ் சிவகுமாரன் அவர்களின் நூலை வாசித்தபோது எனக்குள் ஆச்சரியம். காரணம் (இதுவரை) தமிழில் திறனாய்வு சார்ந்த 23 நூல்களை இவர் வெளியிட்டிருக்கின்றமைதான்.

முதல் கட்டுரை பேராசிரியர் திஸ்ஸ காரியவசம் அவர்கள் சிங்களத்தில் எழுதியதன் மொழிபெயர்ப்பு ஆகும். அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார் திரு. கே.எஸ். சிவகுமாரன் அவர்கள். அதைத் தமிழில் தந்தந்திருக்கிறார் முஹம்மது யாகூப் என்பவர். பேராசிரியர் திஸ்ஸ காரியவசம் அவர்கள் எழுதியிருக்கும் இந்த கட்டுரையில் இலங்கையில் நாவல், சிறுகதைகளின் வளர்ச்சி பற்றிய விரிவான பார்வை பதியப்பட்டிருக்கிறது.

இன ஒற்றுமை இலக்கிய வழி என்ற தலைப்பில் இரண்டாவது பத்தி எழுதப்பட்டிருக்கிறது. மக்களின் மொழி, பிரதேச வாதம் போன்றவற்றால் ஓரினத்தின் உள்ளார்ந்த அனுபவங்கள், ஒற்றுமை என்பன மறுதலிக்கப்படுகின்றன. இதற்கான காரணம் புரிந்துணர்வின்மையே ஆகும். அவற்றை இலக்கியத்தினூடாக நிவர்த்தி செய்வதற்கு படைப்புக்கள் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்கிறார் நூலாசிரியர்.

‘ஈரினத்தவரின் பொதுப் பிரச்சனைகளை ஈரினத்தவரும் இலக்கிய வழியாக அறிந்துகொள்ளும்போது, ஒற்றுமை ஏற்பட வேண்டிய அவசியம் உணரப்படும். இவ்வாறு உள்ளிருந்து முகிழும் இந்த உணர்வை இலக்கியங்கள் வெளிப்படுத்தும்போது நடைமுறையில் இன ஒற்றுமை சாத்திய வகை ஏற்படுகிறது’ என்கிறார் திரு. கே. எஸ். சிவகுமாரன் அவர்கள்.

எழுத்தாளர் நந்தி பற்றி திரு. ப. ஆப்தீன் மற்றும் திரு. கே. பொன்னுத்துரை ஆகியோர் இணைந்து வெளியிட்ட பேராசிரியர் நந்தியும் மலையகமும் என்ற நூல் இலக்கிய மாணவர்களுக்கும், வாசகர்களுக்கும் மிகவும் பயனுள்ளது என்று குறிப்பிடும் நூலாசிரியர் ‘நமக்குள்ளே நாம் பழங்கதைகள் பேசி மகிழ்வதுண்டு. தொடர்ந்தும் பேச வேண்டும். பேசியும் வருகிறோம்.
பழமையின்றி புதுமையில்லை. புதுமையின் பிறப்பு பழமையின் அடித்தளத்திலிருந்துதான் ஏற்படுகிறதென்பது வரலாற்றுக் கண்ணோட்டமுடையவர்கள் கண்ட முடிவு’ என்ற தனது கருத்தையும் சொல்லிருக்கிறார்.

போதை தரும் எழுத்து நடை என்ற மகுடத்தில் லா. ச. ரா, மௌனி ஆகியோரின் சிறுகதைகள் பற்றி கூறப்பட்டுள்ளன. அவர்களது எழுத்தில் பெரும்பாலும் நிஜவாழ்க்கை பற்றிய கருத்துக்கள் இல்லாவிட்டாலும் அதை வாசிக்கும்போது இனிய மயக்கம் ஏற்படுகின்றது என்று கூறுகிறார் நூலாசிரியர். உதாரணமாக லா. ச. ரா வின் பச்சைக் கனவு தொகுதியில் இடம்பெற்ற கதையிலிருந்து ஒரு பகுதி வாசகர்களுக்காக தரப்பட்டிருக்கிறது.

‘உடல்மேல் உரோமம் அடர்ந்தது போன்று பசும் புற்றரை போர்த்து நின்ற நான்கு மண் குன்றுகள், அவை நடுவில் தாமரை இலைகளும் கொடிகளும் நெருங்கிப் படர்ந்த ஒரு குளம். சில்லிட்ட தண்ணீரில் காலை நனைத்துக்கொண்டு அண்ணாந்து படுத்திருந்தான். கைக்கெட்டிய தூரத்தில் பச்சைக் கத்தாழையும் அதன் பக்கத்தில் சப்பாத்திப் புதரும். சப்பாத்தியில் இரத்தக்கட்டி போன்ற பூவில் ஒரு பச்சை வண்டு ரீங்காரித்துக்கொண்டு வந்து மோதிற்று. ராமா ராமா ராமா. இன்னிக்கு என்ன உங்களுக்கு? இப்போதானே கூடாரத்தில் உக்கார வைத்துவிட்டுப் போனேன். மறுபடியும் வெய்யிலிலே குந்திக் கொண்டிருக்கிறிPங்களே. உங்களுக்கென்ன நிலா காயறதா?’

வைத்தியர் ஏ. எம். அபூபக்கர் அவர்கள் இஸ்லாமிய நெறி சார்ந்த பாடல்களையும், நூல்களையும் தமிழுலகுக்குத் தந்தவர். அவரது முறையீடு என்ற புத்தகம் சமயச் சார்புடைய பாடல்களை உள்ளடக்கியதொரு தொகுதியாகும். அரபுப் பதங்கள் பாடலில் காணப்படுகின்றன. அவற்றிற்கான தமிழ் விளக்கங்களும் அதில் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் உள்ளடங்கியுள்ள பாடல்களின் விளக்கங்களும், முன்னுரை, அணிந்துரை வழங்கியவர்களின் விபரங்களும் இந்தக் கட்டுரையில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மூத்த இஸ்லாமிய இலக்கியவாதிகளில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர்களுள் கலைவாதி கலீல் அவர்களும் முக்கியமான ஒருவர். மன்னாரைச் சேர்ந்த இவர் கவிதை, ஓவியம், சிறுகதை ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாட்டைக் கொண்டவர். இளம் எழுத்தாளர்களின் இலக்கிய வளர்ச்சிக்கு தன்னாலான எல்லா உதவிகளையும் செய்யத் தயங்காதவர். கலைவாதி கலீல் அவர்களைப் பற்றியும், இவரது கவிதைகள் சிலவற்றையும் மன்னாரிலிருந்து ஒரு மனிதாபிமானக்குரல் என்ற தலைப்பில் திரு. கே. எஸ். சிவகுமாரன் அவர்கள் எழுதியிருக்கின்றார்.

கருத்துக்களைத் தெரிவிக்கும் பாங்கில் ஒரு நெறிமுறை இருக்க வேண்டும் என்ற தலைப்பில் சில யதார்த்த விடயங்கள் முன்வைக்கப்படுகின்றன. இன்றைய சில எழுத்தாளர்கள் தமிழ் சொற்பதங்கள் குறித்து அதிக அக்கறை காட்டுவதில்லை. நுண்ணிய சில வேறுபாடுகள் பற்றி அறிய முற்படுவதில்லை. அவ்வாறானதொரு வசனத்துக்கு உதாரணமாக திறனாய்வு – நூல் மதிப்புரை போன்றவற்றைக் குறிப்பிட முடியும். இவை பற்றி நூலாசிரியர் கே. எஸ். சிவகுமாரன் அவர்கள் சொல்லும் விளக்கம் பின்வருமாறு:-

‘திறனாய்வு, விமர்சனம், புத்தக மதிப்பரை, நூல் நயம், நூல் ஆய்வு என்றெல்லாம் மகுடமிட்டு நூல்கள் பற்றி நமது அபிப்பிராயத்தைத் தெரிவித்து வருகிறோம். ஆயினும் இப்பதங்களுக்கும் தொடர்புள்ள வேறு சில பதங்களுக்கும் இடையிலே சில நுண்ணிய வேறுபாடுகள் இருப்பதை நாம் உணர்வதில்லை.
ஆராய்ச்சி, ஆய்வு, இலக்கிய வரலாறு போன்றவை மிக உயரிய மட்டத்தில் மேற்கொள்ளப்படும் திறனாய்வு முயற்சிகளாகும். இலக்கியத் திறனாய்வும் அவ்விதமானதே. புத்தக மதிப்புரை, நூல் நயம், நூல் விமர்சனம் போன்றவை ஒருபடி கீழே செயற்படும் எழுத்து ஆகும். பத்தி எழுத்துக்கள் அதிலும் கீழ் மட்டமுடையவை. இன்னும் கேலிக்கூத்தான கணிப்பு எதுவென்றால் நையாண்டி, நக்கல், மொட்டைக் குறிப்புக்கள் போன்றனவும் விமர்சனம் என அழைக்கப்படுவதுதான்’ என்கிறார். எதைப் பற்றியும் ஒரு தெளிவான சிந்தனை இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது இந்தக்கட்டுரை.

தினகரன் பத்திரிகையின் முன்னாள் அசிரியரான திரு. கே.வி. சிவா சிவசுப்பிரமணியம் அவர்கள் பற்றிய தகவல் உள்ளடங்களாக அவரது இலக்கிய ஆளுமை போன்ற பல விடயங்களும் ஆராயப்பட்டிருக்கின்றன. அதில் சிவா சிவசுப்பிரமணியம் வெளிப்படையாகவே இடதுசாரிச் சிந்தனையுடையவர். இவர் அரசாங்கத்தில் ஓர் எழுதுவினைஞராகச் சேர்ந்து, பல இடங்கிலும் தொழில் பார்த்து, உயர் பதவி பெற்றுத் தனது 45வது வயதில் ஓய்வு பெற்றார் என்று அறிகிறோம். அதன் பின்னர் தன்னந்தனியனாக நின்று தேசாபிமானி என்ற இடதுசாரிக் கட்சி வாராந்த இதழின் ஆசிரியராகவும் பணிபுரிந்திருக்கிறார். இவர் மொழி வன்மை கொண்ட தமிழாக்க எழுத்தாளர். மும்மொழியிலும் பரிச்சயமுடைய இதழியலாளர். இவரைப் பற்றிய இந்தக் கட்டுரை மும்மொழி பரிச்சயமுள்ள இதழியலாளர் கே.வி. சிவா சிவசுப்பிரமணியம் என்ற தலைப்பின் கீழ் எழுதப்பட்டிருக்கிறது.

இலக்கிய நெஞ்சங்களின் பெரும் அபிமனத்தைப் பெற்ற புரவலர் ஹாசிம் உமர் அவர்களைப் பற்றியும் இந்நூலில் அறிய முடிகிறது. புத்தகம் வெளிவராத கலைஞர்களின் இலக்கியத் தாகத்துக்கு அமிர்தமாகி இருக்கின்ற புரவலர் ஹாசிம் உமர் அவர்கள் பிறப்பால் மேமன் இனத்தைச் சேர்ந்தவர்.

தமிழ்ப் பற்றுடைய இவரைப் பற்றி பிறர் என்ன கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தொகுத்து, கலைஞர் கலைச் செல்வன் அவர்கள் ‘புரவலர் சில பதிவுகள்’ என்ற நூலை வெளியிட்டிருக்கிறார். அதைப் பார்த்தால் புரவலரின் மேன்மையையும், ஆளுமையையும் அறிந்துகொள்ளலாம். இலக்கியக் கூட்டங்களில் முதல் பிரதி பெற்று எழுத்தாளர்களை கௌரவிக்கும் திரு. ஹாசிம் உமர் அவர்களின் மேலான இலக்கியச் சேவையினைப் பற்றி நூலாசிரியர் கே. எஸ். சிவகுமாரன் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்.

‘புரவலர் புத்தகப் பூங்கா என்ற அமைப்பின் மூலம் இதுவரை நூல்களை வெளியிட முடியாது தவிக்கும் ஆற்றல்மிகு எழுத்தாளர்களின் எழுத்துப் பிரதிகளை வாங்கிப் பெற்று, இலவசமாக தன்னுடைய செலவில் அச்சிட்டு சம்பந்தப்பட்ட எழுத்தாளரிடமே அவற்றைக் கையளித்துவிடுவார். அந்த எழுத்தாளர்களும் தாம் அந்த நூலைப் பெற்று விற்று பணத்தைப் பெற்றுக்கொள்வர். இவர் ஓர் அற்புதமான மனிதாபிமானி. பெரும் செல்வந்தர். வர்த்தக நிறுவனங்களின் நிர்வாக அதிபர். இவர் நீடூழி வாழ்ந்து தனது அளப்பரிய பணிகளைத் தொடர வேண்டும்’.

இது போன்று இங்கே குறிப்பிடாத இன்னும் பல பயனுள்ள விடயங்கள் புத்தகத்தில் காணப்படுகின்றன. காலக் கண்ணாடியில் கலை இலக்கியப் பார்வையைக் காண விரும்பும் ஆர்வலர்கள், திரு கே. எஸ். சிவகுமாரன் அவர்களது இந்த நூலைப் படித்துப் பயன் பெற வேண்டும். ஆசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் – காலக் கண்ணாடியில் ஒருகலை இலக்கியப் பார்வை
நூலாசரியை – கே.எஸ். சிவகுமாரன்
முகவரி – 21, முருகன் பிளேஸ், கொழும்பு – 06
வெளியீடு – மணிமேகலைப் பரிசுரம்
தொலைபேசி – 011 2587617
விலை – 300 ரூபாய்

Series Navigationமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 11அப்பாவின் நினைவு தினம்
author

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *