This entry is part 34 of 46 in the series 26 ஜூன் 2011

இருட்காட்டுக் கபுறுக்குள் அமைதியாய் உறங்கும்
வாப்பும்மா
சிறுகதை போல பேசல் மீளக்கேட்கும் துயர்
எனக்கில்லையினி.
மழை கொக்கரித்துப்பெய்யும் நடுவிரவுகளில்
அடரிருள் கபுறடியும் வாப்பும்மாவின் மையத்தும் நினைவுக்குள் வலிக்கும்.
வெள்ளிகளில் வாப்பா தவறாது சொல்வார்
கபுறடியில் நீங்கள் பொல்லூன்றி நிற்பதைக் கண்டதாக.
அறுபதுகளிலும் வாப்பா அனுபவிக்கும் தாங்கொணாத் துயர்
எனக்கும் புரியும்.

வாப்பும்மா
உங்களுடற்சாறு அருந்திச் செழித்திருக்கும் மருதாணிச்செடிக்கு
சில வேளை தெரிந்திருக்கலாம்
மரணம் ஒரு வாயிலென்பதும் வாழ்க்கைக்கு முற்றுப்
புள்ளியில்லையென்பதும்.

சமீலா யூசுப் அலி,
மாவனல்லை,இலங்கை
15.06.2011

Series Navigationஊதா நிற யானை“அறுபத்து நான்காவது நாயன்மார்“