This entry is part 12 of 19 in the series 28 ஜூன் 2015

கனவு திறவோன்

நான் தூங்கும் பகல்களில்
நீ கனவு கண்டு கொண்டிருப்பதைப் போல…
நான் வாசிக்கும் பதிவுகளை நீ
அழித்துக் கொண்டிருப்பதைப் போல…
நான் தியானிக்கும் வேளைகளில்
நீ பெரியாருக்கு துதி பாடுவது போல…
நான் சாப்பிடும் காலையில்
நீ நோன்பு பிறை தேடுவது போல…
நான் உழைக்கும் நேரங்களில்
நீ ஓய்ந்திருப்பது போல…
நான் நெருங்கும் இரவுகளில்
நீ வீட்டுக்குத் தூரமாய்
விலகியிருப்பதைப் போல…
எனக்கும் உனக்கும் அமாவாசை பவுர்ணமி உறவு
எப்படியிருந்தாலும் தூரத்தில் தெரியும் நிலவு
நாளை காலையில் சூரியனாய் மாறும் என்று
நான் மாறாமலே இருக்கிறேன் இத்தனை ஆண்டுகளாய்.

Series Navigationஅனார் கவிதைகள் ‘ பெருகடல் போடுகிறேன் ‘ தொகுப்பை முன் வைத்து..தெரவுசு