This entry is part 12 of 24 in the series 1 நவம்பர் 2015

நித்ய சைதன்யா

1.வாசனை

வாசனை நேற்றின் சாவி

நாசி மோதிய சிகரெட் புகை

திறந்து காட்டிற்று

பால்யத்தின் கட்டடற்ற நாட்களை

உலகை சுத்திகரிக்கும் தினவுசூழ

அச்சமற்ற நீரோட்டம்

விரும்பிய பாவனைகளை

விரும்பிய போதெல்லாம் அணியலாம்

காலையில் விட்டுவிடுதலையான இருப்பு

உத்வேகம் தள்ளிய வீதிஉலா பொன்வெயிலில்

நட்சத்திரங்கள் விழிக்கும் சமயம்

உன் பின்னால் விழியடி வேண்டி

வாசனை இன்றின் துயரம்

கடந்து சென்ற மரிக்கொழுந்தில்

உன் விசுவரூப தரிசனம்

நுகத்தடி புதைத்தது போக

செக்குமாட்டுத்தனத்தின் இன்றில்

பேருவகை உன்னில் சிக்கியிருந்த அக்காலம்

வாசனை காலத்தின் பக்கங்கள்

———————————————————————————-

2.நடுநிசி

நிசிகள் கனமானவை

விழிக்கும் போது

இசக்கியின் கண்கள் அதற்கு

சீராய் கேட்கும் மூச்சொலி

இருட்துணையாய் நடுநிசியில்

பறத்தல் கைவசமான நாட்களில்

நிசிகள் துயரமானவை

தாபம்மீற இருட்டைப் புணரும் தருணம்

நிசிகளுக்கு பெண்மையின் பருவம்

காலடி மோதல்களில்

நிசிகளுக்கு கள்வனின் கரங்கள்

ஒவ்வொரு நிசியும் அழித்துச்செல்கிறது

நினைவோடையில்

உன் இருப்பின் தொலைவை

———————————————————————————-

 

Series Navigationஇளைஞர்களுக்கு இதோ என் பதில்எல்லையைத் தொட்டபின்பும் ஓடு!