This entry is part 21 of 22 in the series 24 ஜனவரி 2016

 

 

நான் பறித்த பூக்கள்

என் கண்படும் மலர்கள்

ஏதோ ஒரு வரிசை ஒழுங்கில்

பூத்து உதிர்ந்தன அல்லது

வாடின

 

பிரியா விடை அளித்து

பின் சந்திகாமலே

போனவர்கள் ஒரு

வெட்டுப் புள்ளியைக்

கடந்தனர்

 

 

மலையெங்கும்

மேகங்கள் இளைப்பாறி

ஈரமாக்கும்

கலையும் மீண்டு கவியும்

நேரங்களில் ஏதோ ஒரு

லயம்

 

முதலில் மறுதலித்தவள்

மௌனித்த பின் ஓர் நாள்

என் சகலமும் உனக்கே

என்றுவந்தளித்த பரிமாணத்தில்

முற்பிறவிச் சரடு

சுருதி மாறாமல்

 

அடுத்த நாள் என்னும்

புதிய வண்ண

ஆடையில் கால தேவதை

கவனத்தைக் கலைக்கிறாள்

பொம்மலாட்டக்கயிற்றின்

எந்த முனையில் அவள்

 

எல்லா நகர்வுகளின்

தடங்கள்

பின் அவை ஒன்றை ஒன்று

தொட்டும் இடை மறிக்காமல்

வெட்டிக் கொண்ட புள்ளிகள்

 

பாவின் நூல்களாய்

பூக்கள் மேகம் பிறவிகள்

காலம் இயங்குபடும்

சரடுகள் கட்புலனாகா

படைப்பின் கண்ணிகளாகும்

 

Series Navigationமூன்று எழுத்தாளர்களின் நினைவஞ்சலி நிகழ்ச்சி“குத்துக்கல்…!” – குறுநாவல்