This entry is part 3 of 12 in the series 3 மார்ச் 2018

சி. ஜெயபாரதன், கனடா

ஒன்று எங்கள் தேசமே

ஒருமைப் பாடெமது மோகமே

உதவி செய்தல் வேதமே

உண்மை தேடலெம் தாகமே

கண்ணியம் எமது பண்பியல்

கடமை எமது உடைமையே

இமயம் முதல் குமரிவரை

எமது பாதம் பதியுமே.

தென்னகத்தின் முப்புறமும்

வண்ணப் பெரும் கடல்களே.

வடக்கில் நீண்ட மதிலரணாய்

வானுயர் இமய மலைகளே.

புத்தர், சித்தர், காந்தியை

பெற்றுயரும் பூர்வ நாடிது.

ஓங்கி குமரி​ வள்ளுவச் சிலை

​உலகுக்கு​ அறநெறி காட்டுதே.

எந்தையும் தாயும் பலயுகம்

இனிதாய் வாழ்ந்த தேசமே !

திங்கள், செவ்வாய்க் கோள்களை

எங்கள் விண்சிமிழ் சுற்றுதே.

எங்கள் ஊனும், எங்கள் உயிரும்

இராப் பகலாய் விழிப்புடன்

என்றும் உன்னைக் காக்குமே !

எங்கள் மூச்சும், எங்கள் பேச்சும்

என்றுமுன் பேரை ஒலிக்குமே !

பாரத தேசமெனக் கேட்டால்

பூரண உணர்ச்சி பொங்குதே !

எங்கள் சுதந்திரத் திருநாடே !

பங்கம் உனக்கு நேர்ந்துவிடின்

எங்கள் உதிரம் கொதிக்குமே !

Series Navigation30. ”செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமால்”மௌனியின் படைப்புலகம் பற்றிய தகர்ப்பும் முன்னுதாரணமும்: சிறுகுறிப்பு