This entry is part 2 of 9 in the series 6 அக்டோபர் 2019

நீ வாழ்ந்த காலத்தில்

நீ எட்டாத சிங்கை இன்று

உன் எட்டயபுரமானது

உன் தடித்த மீசையும்

தலைப் பாகையுமே

தமிழானது

தமிழ் ஓர் அத்தியாயமாய்

என் வாழ்க்கை

தமிழே எல்லாமுமாய்

உன் வாழ்க்கை

ஏட்டுப் படிப்பின்றி

இமயம் வென்றாய்

காற்றைச் சுவாசித்து

கவிதை செய்தாய்

பிறப்பும் இறப்புமாய்

எல்லார் வாழ்க்கையும்

இறப்பே பிறப்பாய்

உன் வாழ்க்கை

என் கவிதைப் பயிருக்கு

பொறுக்குவிதை தந்த

‘நறுக்’ கவிஞனே

கொஞ்சம் தள்ளி நில்

உன் தாளலடியில்தான்

என் தன்மானம் தேடுகிறேன்.

கடற்கரையில் நின்றேன்

உன் கர்ஜனை கேட்டேன்

மின்னலின் சொடுக்கில்

உன் மிடுக்கு கண்டேன்

என் நாடித்துடிப்பில்

உன் நடைவேகம் கண்டேன்

நீ இறந்தாய்

தமிழ்த்தாய் அழுதாள்

தமிழ்த்தாயைத் தேற்ற

தரணி திரண்டது

சில ஈக்கள் மட்டுமே

‘என்ன சேதி’ என்று

எட்டிப் பார்த்தது.

அமீதாம்மாள்

Series Navigationகதறல்சொல்வனம் இணையப் பத்திரிகையின் 208 ஆம் இதழ்