ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் – 5

ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் – 5
This entry is part 4 of 7 in the series 24 நவம்பர் 2019

  1. சார்லி ப்ரவுனும்

சவடால் முழக்கங்களும்

ஆயிரம் பவுண்டுகள் பந்தயம் என்றான்

கார்ட்டூன் சிறுவன் சார்லி ப்ரவுன்

அய்யோ என்று அதிர்ச்சியோடு வாய்பொத்திக்கொண்டாள்

அவனுடைய அறிவாளித் தோழி.

மில்லியன் பவுண்டுகள் என்று முழங்கினான்

சார்லி ப்ரவுன்.

மிரண்டுபோன அவனுடைய அறிவாளித்தோழி

வேண்டாம் வேண்டாம் – ஒரு பென்னி பந்தயம்

என்றாள்.

பின்வாங்கியபடியே சார்லி ப்ரவுன் சொன்னான் –

நான் பந்தயத்திற்கு வரவில்லை.

”ஏன்?”

“ஒரு பென்னி என்பது உண்மையான பணமாயிற்றே!”

***

  • ஊரும் பேரும்

யாருமற்ற வனாந்திரத்தில் பாடிக்கொண்டிருக்கிறாயே
பாவமாயிருக்கிறது உன்னைப் பார்க்க.

ஊருமுழுக்க நீ மட்டுமே என்று யார் சொன்னது?
பாவமாயிருக்கிறது எனக்கும், உன்னைப் பார்க்க.

***

  • குறுக்குவிசாரணை

சிதறடிக்காதே யென்று பதறுகிறாயே

சொற்கள் என்ன தங்கக்காசுகளா?

காசுகளைக்கொண்டு நீ பேசிவிடுவாயா?

கொஞ்சங்கூட யோசிக்கவே மாட்டாயா?

***

  • பொறுப்பேற்பு

நம் மனதி னோரச் சுவரொன்றில்
ஓர் ஆடி தொங்கிக்கொண்டிருந்தால்
நமக்கு அதில் நம்மைக் காண
நேரமிருந்தால்
ஆடியின் எதிரே ஒப்பனைகளற்ற
நம் வதனத்தை
எதிர்கொள்ள நமக்குத் துணிவிருந்தால்
காலப்போக்கிலான அதன் மாற்றங்களை
நாம் பார்க்கப் பழகிவிட்டால்
பின்
நாம் முடிந்தவரை பொய் பேசமாட்டோம்.

***

  • குறிப்புணர்த்தல்

இங்கே இப்பொழுது என்றுமே
உள்ளடக்கியிருக்கும்
அங்கே அப்பொழுது;
எங்கே எப்பொழுது….
எண்ண
உடைவதும் உடைந்ததும்
ஒரே நாணயத்தின் இருபக்கங்கள்தானே.

***

Series Navigationகதி‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *