தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

This entry is part 1 of 8 in the series 17 மே 2020

                                        

              ஓலக் கடல்நெருப்பில் உலகேழும் உருகும்

                  காலக் கடையினும் கொடிய கட்கடைகளே.             [81

[ஓலம்=ஒலி முழக்கம்; நெருப்பு=ஊழித் தீ; காலக்கடை=இறுதிநாளில்; கட்கடி=கடைக்கண்; ஏழு உலகங்கள்=பூலோகம், புவலோகம், சுவலோகம், மகாலோகம், சனலோகம், தவலோகம், சத்தியலோகம்]   

 அலைகள் பெரு முழக்கமிடும் கடலில் தோன்றிய ஊழித்தீயை விடக் கொடியனவாம் அத் தேவமாதர்களின் கடைக்கண் பார்வை;

====================================================================================

                   புங்கப் படைவிழிக் கடையிலன்று இவர்புரூஉப்

                  பங்கத்து அகிலமும் படுகொலைப் படுவதே.

[புங்கம்=அம்பு; விழிக்கடை=கடைக்கண் பார்வை; புரூஉ=புருவம்; பங்கம்=துன்பம்; அகிலம்=ஆடவர் உலகம்;

      கொல்லும் ஆயுதம் போல இருக்கும் அப்பெண்களின் கடைக் கண் பார்வையால் அல்லாமல், இவ்வுலகின் ஆடவர்கள் எல்லரும் துன்பத்திற்கு ஆளாவது அவர்களின் வளைந்த நெற்றிப் புருவத்தாலேயே ஆகும்.

=====================================================================================

                  நச்சுக்கண் முலைமேல் இடுதுநிற்கும், நகுபொற்

                  கச்சுக்கும் அடையப் புடவிகை அடைகொலோ!  [83]

நச்சு=நஞ்சு; நகுபொற்கச்சு=நல்ல அழகிய மார்பில் அணிந்துள்ள கச்சு; புடவிகை=புடவை; அடைகொலோ=அடைக்கலமோ]

      அவர்களுடைய மார்பகங்களின் கண்கள் நஞ்சு போல உயிரைக் கொல்லக்கூடியவை; அவை மறையுமாறு கட்டப்பட்டுள்ள அழகிய மார்புக் கச்சுக்கும், உடுத்தி உள்ள புடவைக்கும் இவ்வுலகம் அடைக்கலமாயிருக்கிறது போலும்.

=====================================================================================

                   மின்போல்வர் அவரே; அவர் மருங்குல் இனிவேறு

                  என்போல்வது என் எண்ணுவதென்? இல்லை இணையே   [84]

[மருங்குல்=இடை; இணை=ஒப்பு;]

      அந்தப் பெண்களே மின்னல் போல இருக்கின்றனர். எனவே அவர்களின் இடைக்கு எதை உவமையாகச் சொல்வது? இணையாகச் சொல்ல எதுவுமே இல்லை.

===================================================================================

                   நின்றகன்ற இடை நேடிவரை நேமியளவும்

                  சென்றகன்றன நிதம்பம் நடுஇல்லை திசையே    [85]

[நேடி=தேடி; நேமி=சக்கரம்; நிதம்பம்=மறைவிடம்;

      அந்தப் பெண்களின் இடை கண்களுக்குத் தெரிவதில்லை. அவை சக்கரவாளக் கிரி என்னும் மலை வரை வளர்ந்து மேலே வளர வழி இல்லாததால் அவர்களின் அகன்ற மறைவிடத்தோடு நின்றனவாம்.

=====================================================================================

                   அங்ங்கண் முளரிமலர் அன்மையது திங்கள் அறியத்

                  திங்ங்கள் அன்மை அரவு அறியஇலகும் திலகமே.       [86]

[முளரி=தாமரை; திங்கள்=சந்திரன்; அன்மை=அதுவாக; அரவு=பாம்பு [ராகு]; இலகு=விளங்கும்; திலகம்=பொட்டு]

            இப்பாடலில் ‘ங்’ என்பது ஒற்றளபெடையாகும். அப்பெண்கள் ஏன் முகத்தில் பொட்டு வைத்துக் கொள்கிறார்கள் தெரியுமா? முகத்தைத் தாமரை என்றெண்ணிச் சந்திரன் வருந்தாமல் இருக்கவும், மேலும் முகத்தை முழுநிலவு என்றெண்ணி இராகு என்னும் பாம்பு  பிடிக்காமல் இருப்பதற்காகவும்தான்.

=====================================================================================

      அடைய மோகினிகள் ஆயினர்கொல் அவ்வுரு நினைந்து

      உடைய மோகினியை ஒக்கஉளர் யோகினிகளே.               [87]       

[மோகினி=மயக்கும் பெண்; ஒக்க=போல; யோகினி=துர்க்கைக்கு ஏவல் செய்யும் பெண்களுக்குத் தலைமையானவர்]

      எல்லாரையும் மயக்கி உயிரைக் கவரும் மோகினிகளானத் தேவர் உலகப் பெண்கள்  யோகினிகளாக மாறிவிட்டனரா? இல்லை. அவர்கள் துர்க்கையின் அருளால் மோகினி ஆனவர்கள். எனவே அவர்கள் யோகினி போலவே இருக்கிறார்கள்.

=====================================================================================                

             சூழும் மின்னொளி நிவந்து சுரநாடியர் கொடிகளும்      

             தாழும் மின்மினிகளாக உளர் சர்மினிகளே.             [88]

[நிவந்து=மேலெழுந்து; சுரநாடியர்=தேவருலகப் பெண்கள்; தாழும்=ஒளி குறைந்து; சர்மினியர்=சருமம் எனும் தோலாலான ஆடை போர்த்தியவர்கள்]

      தோலாடை போர்த்திக் கொண்டிருக்கும் தேவியின் திருக்கோயில் பணிப்பெண்களின் முன்னே தேவமாதர்கள் எல்லாம் சூரியன் முன் ஒளி குறைந்து காணப்படும் மின்மினிகள் போன்றவர்களாவர்.

=====================================================================================

                   தரவரும் புடவிகுறைய உளர் சாகினிகளே

                  பரவருந் தகையநாயகி பதாகினிகளே              [89]

[தரவரும்=பிரமன் அளித்த; புடவி=பூமி; சாகினி=ஏவலர்; நாயகி=துர்க்கை; பதாகினி=பதாகை கொடி கொண்டு செல்லும் டிப்படையினர்]

      தேவி துர்க்கையின் கொடி பிடித்துக் கொண்டு வரும் கொடிப்படையினர் தொகையானது பிரம்மன் படைத்துள்ள இப்பூமி சிறியதாகி விட்டதோ என எண்ணும் அளவிற்குப் பெரியதாக உள்ளது.

======================================================================================                       

                   நகுதரும் கடவுள் இத்தகைய மாதர் நகைபோய்

                  மொகுமொகு என்று அகிலலோகமும் முழங்குவனவே.   [90]

[நகுதரும்=சிரிப்பு]

      கடவுளாகிய தேவி துர்க்கையின் திருக்கோயிலில் எங்கும் நிறைந்திருக்கின்ற மோகினிகள், யோகினிகள், சாகினிகள் என்னும் எல்லாப் பெண்களும் சிரிக்கின்ற சிரிப்பானது எல்லா உலகங்களிலும் சென்று முழக்கமிடும்.

Series Navigationகொரானா காலத்து மூடநம்பிக்கைகளுக்கும் அளவில்லை‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதை

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *