This entry is part 3 of 21 in the series 2 ஆகஸ்ட் 2020

வசந்ததீபன்

கண்ணீரின் கருணையில் வாழ்கிறேன்

கடலின் ஆழத்தைப் போல 

அமைதியாக இருக்கிறேன்

மனசு தான் 

அலையடித்துக் கொண்டிருக்கிறது

தனிமையாய்

பயனற்ற 

பழைய பிணமெரிக்கும் கொட்டகையாய் இருக்கிறேன்

ஒரு பிடி அரிசி இல்லை

வயிற்றுக்குள் கரையான்கள்

நிலவும் சூரியனும்

தவறாமல் வந்து போகின்றன

அழகான பெண்கள்

என் கனவுகளில் நடனமாடுகிறார்கள்

என் வெளிச்சமற்ற அறை

இரவுகளில் நடுங்குகிறது

துர்வாசமடிக்கும் உடுப்புகள் 

என் உடலை போர்த்தியிருக்கின்றன

பகலில் ஜன்னலருகே வந்து

ஒரு சிட்டுக்குருவி

என்னிடம் 

பேசி விட்டுப் போகிறது

தூரத்து மேகங்களைப் பார்க்கையில்

எனக்கான கருணை தெரிகிறது

கெட்ட கெட்ட எண்ணங்கள்

என்னை

மிருகமாக்கப் பார்க்கின்றன

ஆனாலும்

அன்பான மனிதனாகவே இருப்பேன்.

Series Navigationசின்னக் காதல் கதைகைகளிலே உயிர் இழந்தால் பாசம் தோன்றுமா….