This entry is part 6 of 13 in the series 12 மார்ச் 2023

சாந்தி மாரியப்பன்.

************

விழித்திருக்கும்

கைக்குழந்தைக்குத் துணையாய்

கொட்டக்கொட்ட

தானும் விழித்திருக்கிறார்

நோய்மை கிழித்துப்போட்ட ஒருவர்

புறப்புலன் மங்கி 

அகப்புலன் தெளிவின்றி

சுய கட்டுப்பாடுமற்ற உடலர் இருவரில்

வந்த பாதை நினைவில்லை ஒருவருக்கு

போகும் பாதையோ 

தெரியவில்லை இன்னொருவருக்கு

அகமும் புலனுமற்ற ஏதோவொரு

மாயவெளியில்

அளவளாவும் இரு ஆன்மாக்களும்

தத்தம் ரேகைகளை

அங்கே பரிமாறிக்கொண்டு பிரிகின்றன

ரேகையைப் பத்திரப்படுத்தும் பொருட்டு

கால் கட்டைவிரலை

வாயில் வைத்துக்கொள்கிறது குழந்தை

கையை இறுக்கிக்கொள்கிறார் வயதானவர்

ஒருவரையொருவர் அர்த்தத்துடன் நோக்கி

பொக்கைச்சிரிப்பைச் சிந்துகின்றனர் இருவரும்

அப்பிக்கிடக்கும் காரிருளில்

விரல்களைத்தேடுகின்றன ரேகைகள்.

*

Series Navigationஅகழ்நானூறு 18எங்கேயோ கேட்ட கதை – பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு