தொட்ட இடமெல்லாம்…..

This entry is part 17 of 18 in the series 3 ஜனவரி 2016

 மனஹரன்

 

தோட்டத்திற்குப்

போக வேண்டும்

புன்னகையைக்

கையில் ஏந்தியபடி

வழி நெடுகிலும்

கனகாம்பர பூக்களாய்

காத்திருப்பார்கள்

 

வீட்டின் முன்

காய்த்திருக்கும்

இளநீர்வெட்டி

தாகம் தீர்ப்பார்கள்

 

கொல்லையில் அறுத்த

வாழைக்காயை

வறுக்கச்சொல்லி

அதன்

பதத்தையும் சொல்வார்கள்

 

மரத்தில் பழுத்திருக்கும்

மயிரு முளைச்சான்

பழங்களை

கொத்தாகப்பறித்து

தோல் நீக்கி

லக்கான்களை

பந்தி வைப்பார்கள்

 

எலுமிச்சைச் சாறு ஊரிய

சுண்ணாம்பு சேர்த்த

மீத மருதாணியை

வீட்டுக்குக்கும்

கொடுத்துவிடுவார்கள்

 

மாசமாக இருக்கும்

மனையாளுக்கு

நாகம்மா மருத்துவச்சியின்

நலம் விசாரிப்பு

எப்போதும் தொடரும்

 

மாலையில்

மாரியம்மா கோவிலில்

கெட்ட வார்த்தையில்

அர்ச்சனை செய்யும்

ஐயாக்கண்ணு பூசாரியின்

நக்கல் நாற்றமடிக்கும்

 

நினைக்க தெரிந்த

மனத்தை

மறக்கச் சொல்லி

பாடும்

மாரியின் குரல்

உடைந்து கேட்கும்

 

பிடுங்கிய

மரவள்ளி பிஞ்சின்

ஈரம் காயும் முன்

பல்லில் பட்டு

பால் ஊரும்

 

பின் வாசல் வழி

வரும்

அணில் கறி வாசத்தில்

ஒரு நேச கரம்

காரமாய் இருக்கும்

 

 

மீண்டும் தோட்டத்திற்குப்

போக வேண்டும்

Series Navigationபாலசந்தர் – ஒரு உணர்வுத் திரிநித்ய சைதன்யா – கவிதைகள்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *