ஆத்ம கீதங்கள் -1 ஆத்மாவின் உரைமொழி

This entry is part 1 of 21 in the series 19 அக்டோபர் 2014

unnamed

கவிக்குயில் எலிஸபெத் பிரௌனிங்.

[1806 – 1861]

சி. ஜெயபாரதன், கனடா

வால்ட் விட்மன் ஆங்கிலப் பாக்களைத் தமிழாக்கம் செய்து வரும் நான் இடைவெளியில் நிறுத்தி, புதிதாக “ஆத்ம கீதங்கள்” என்னும் தலைப்பில் பிரிட்டிஷ் கவிக்குயில் எலிஸபெத் பிரௌனிங்கின் கவிதை மலர்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு அளிக்க விழைகிறேன். காதல் நாற்பது என்னும் அவரது தமிழாக்கக் கவிதைகள் பழைய திண்ணை.காமில் முன்பு வந்துள்ளன.

எலிஸபெத் பிரௌனிங் பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியா காலத்தில் (1819-1901) வெற்றிகரமாக வாழ்ந்து பெரும்புகழ் பெற்ற கவிதை மாது. ஆங்கிலக் கவிஞர் ராபர்ட் பிரௌனிங்கின் காதல் மனைவி. டென்னிஸன் நினைவுப் பரிசைப் பெற்ற எலிஸபெத் எழுதிய உன்னதக் காவியப் படைப்பு, 1850 இல் வெளியான “போர்ச்சுகீஸின் பதினான்கு வரிக் கவிதைகள்” (Sonnets from the Portuguese). ராபர்ட் “போர்ச்சுகீஸ்” என்ற செல்லப் பெயரால் தன் காதலி எலிஸபெத்தை அழைத்தார். நாற்பத்து நான்கு எண்ணிக்கையுள்ள அந்த கவிதைகள் யாவும் ராபர்ட்டைக் காதலித்த போது எலிஸபெத் தொடராக எழுதியவை. எலிஸபெத்தின் கூரிய ஞானமும், நளினக் கவி நடையும், முகக் கவர்ச்சியும் கார்லைல், ரஸ்கின், தாக்கரே, ரொஸ்ஸெட்டி, ஹாதொரோன் போன்ற கவிதா மேதைகளை ஈர்ந்தன.

எலிஸபெத் 1806 இல் இங்கிலாந்தில் டுரம் நகர்க் கருகில் கோக்ஸொ ஹால் (Coxhoe Hall near Durham) என்னும் ஓர் இடத்தில் ஒரு செல்வத் தம்பதிகளுக்குப் பிறந்தார். சிறு வயதில் எலிஸபெத் தனிப் பயிற்சியாளர் மூலமாகக் கல்வி பயின்றுத் திறமையோடு ஆங்கிலம், ·பிரெஞ், லத்தீன், கிரீக் ஆகிய அன்னிய மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றார். பதினாங்கு வயதிலேயே எலிஸபெத் “மராத்தன் போர்” (The Battle of Marathon) என்னும் தன் முதல் கவிதைத் தொகுப்பைப் படைத்து வெளியிட்டார். அடுத்து வெளியான நூல்கள்: An Essay of mind (1826), Prometheus Bound (1833). The Serapim & Other Poems (1838), Sonnets of the Portuguese (1850). Last Poems (1862) எலிஸபெத் 1835 இல் லண்டனுக்கு வந்து தங்கிய போது பல வெளியீடுகளில் கவிதைகளை எழுதிப் பேரும், புகழும் பெற்றார். 1844 இல் அவரது கவிதைகள் வெளியாகிப் பலரது மனதைக் கவர்ந்து அமெரிக்கக் கவிஞர் எட்கர் அல்லன் போவின் பாராட்டைப் பெற்றார். எல்லா வற்றிலும் உயர்ந்த படைப்பாக எடை போடப்படுவது : போர்ச்சுகீஸின் பதினான்கு வரிக் கவிதைகள் (Sonnets from the Portuguese). போர்ச்சுகீஸ் என்பது ராபர்ட் எலிஸபெத்துக்கு வைத்த செல்லப் பெயர்.

1820 இல் எலிஸபெத் ஓர் மர்ம நோயில் விழுந்து வயிற்று வலியில் மிகவும் வேதனைப் பட்டார். வலியைத் தாங்கிக் கொள்ள அந்தக் காலத்தில் அவருக்கு மருத்துவர் பயங்கர மார்·பின் மந்த மருந்தைக் கொடுத்து வந்தார்கள். மறுபடியும் 1838 இல் எலிஸபெத் இரத்தக் குழாய் ஒன்று அற்றுப் போய் கடும் நோயில் துன்பப்பட்டு மெலிந்து போனார். அதே சமயத்தில் அவரது சகோதரர் ஒருவர் நீரில் முழ்கி, அவருக்கு ஆறாத துயரை உண்டாக்கியது, அதற்குப் பிறகு எலிஸபெத் யாரையும் கண்டு கொள்ள விருப்பற்றுத் தனிமையில் கிடந்தார். அப்போது முழு நேரத்தையும் அவர் தன் அரியக் காவியப் படைப்புகளுக்கே அர்ப்பணித்தார்.

தனது 39 ஆம் வயதில் (1845), தன்னை விட ஆறு வயது இளமையான கவிதா மேதை ராபர்ட் பிரௌனிங்குடன் கடிதத் தொடர்பு கொண்டு, ஆழ்ந்த காதல் வயப்பட்டார். அவர்களது அந்தரங்க ஆத்ம நட்பு பெற்றோருக்குத் தெரியாமல் மர்மமாகவே தொடர்ந்தது. காரணம் அவரது தந்தையார் தனது புதல்வர், புதல்வியர் திருமணமாவதைத் தடுத்துக் கொண்டு வந்தார். அடுத்த ஆண்டு எலிஸபெத் வீட்டை விட்டே வெளியே ஓடிவிட்டார். 1846 இல் ஒரு தேவாலயத்தில் பெற்றோர்க்குத் தெரியாமல் எலிஸபெத் ராபர்ட்டை மணந்து, ரோமுக்குச் சென்று, அங்கே ·பிளாரென்ஸில் குடியேறினார்கள். அவர்களுக்கு 1849 இல் ஓர் ஆண்மகவு பிறந்தது.

இறுதிக் காலத்தில் திடீரென எலிஸபெத்துக்கு ஆன்மீகத்தில் ஆர்வம் பெருகிற்று. வட அமெரிக்காவில் கறுப்பு ஏழைகளைப் பிடித்து அடிமைகளாய் வணிகம் புரிந்து வருவதைக் கண்டித்தார். அக்கருத்தை மையமாக வைத்தொரு நூலும் எழுதினார். நோய் முற்றி ·பிளாரென்ஸில் 1861 ஆம் ஆண்டு கனிவுக் கணவரின் கையணைப்புக் கனலில், காதல் ராணி களிப்புடனே விண்ணுலகம் ஏகினாள். அவளது மரணத்துக்குப் பிறகு எழுத்தாள மேதை எட்வெர்டு பிட்ஸ்ஜெரால்டு துயரைக் காட்டாது தன் உன்னத இரங்கல் உரையில் கேலியாகக் குறிப்பிட்டார்: “மிஸிஸ் பிரௌனிங் மரணம் அடைந்ததில் எனக்கொரு பெரிய விடுவிப்பு ! “அரோரா லைஸ்” [Aurora Leigh: Collection of Poems by Elizabeth Browning] போன்ற மாபெரும் கவிதைத் தொகுப்புகள் இனிமேல் வெளிவாரா ! கடவுளுக்கு நன்றி ! அவள் ஓர் உயர்ந்த மேதை ! எனக்குத் தெரியும் அது. எல்லாவற்றுக்கும் முடிவாக நான் என்ன சொல்வது ? அவளும் அவளது பெண்பாலும் அடுப்பறையில் கிடந்து, குழந்தைப் பராமரிப்பைக் கவனித்திருக்க வேண்டும் ! ஏழையர் மீது வேண்டு மானால் இரக்கம் கொள்ளட்டடும் ! இப்படிக் குறுநாவல் எழுதுவது போன்ற பணிகளைச் சிறப்பாகப் படைக்கும் ஆடவர் கைவசம் விட்டு விட்டுத் தான் தலையிடுவதைத் தவிர்த்திருக்க வேண்டும் !”

*******

ஆத்ம கீதங்கள் -1

ஆத்மாவின் உரைமொழி

ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

ஏலாத குரலில், தடுமாறும் உதடுகளோடு

இராப் பகலாய்க் கனாக் கண்டு,

சிந்தனை செய்து,

எண்ணக் குழப்பத்தில்

என் சுயக்குணக் கானத்தைச்

சீராய் எழுத முயல்வது

ஓர் போராட்டம் !

எனது உணர்ச்சி களைச் சுற்றியே

வினா விடைகளும் வரும்.

எட்டுச் சுரங்களில்

மர்ம மாக உச்ச நீச்சத்தில்,

உன்னத மாய்க் கானங்கள்

உருவாகும்

எட்டாத நிலைக்கு !

காமத்தின் பீடத்தில்

இருண்ட ஓரத்தி லிருந்து,

பொங்கிப் பூரணம் மேவி

ஐம்புல வாசல் களின் வழியே

என் ஆத்ம கீதத்தைப்

பெற்றெடுக்கப் போராடும் நான்,

வாயு வெளியில் என்னையே

வடித்திடுவேன் !

என்னால் அப்படிச் செய்ய

முடிந்தால்

இடி முழக்கி வான் உருண்டு

தனது முகில் முறித்து,

எனது சதை ஆங்கே மரித்து விடும்,

நடுக்கமுடன் ஆத்ம அருள்

விடுவிப் பாகும் முன்பு !

++++++++++++++++

மூல நூல் :

From Poems of 1844

Elizabeth Barrett Browning Selected Poems

Gramercy Books, New York 1995

1. http://wednesdaymourning.com/blog/elizabeth-barrett-browning-beyond-victorian-love-poems/

2. http://en.wikipedia.org/wiki/Elizabeth_Barrett_Browning

3. http://www.online-literature.com/elizabeth-browning/

Series Navigation
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *