கம்பரின் கடலணை – திருமாலின் பாம்பணை

This entry is part 15 of 24 in the series 7 ஜூன் 2015

முனைவர் மு.பழனியப்பன்
தமி்ழ்த் துறைத்தலைவர்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
திருவாடானை

kamban Ramanகடலில் கட்டப்பட்ட பழமையான பாலங்களுள் ஒன்றாக விளங்குவது இராமர் கட்டிய சேதுப்பாலம் ஆகும். வால்மீகி இராமாயணத்தில் இப்பாலம் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன. கம்பராமாயணத்திலும் இப்பாலம் பற்றிய பல குறிப்புகள் காணப்படுகின்றன. நாசா என்ற அமெரிக்க நிறுவனம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே பழங்காலத்தில் கடல்வழிப் பாலம் இருந்ததாக செயற்கைக்கோள் வரைபடத்தைச் சான்றாகக் காட்டுகின்றது. இசுலாமிய சமயத்தில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே ஆதாம் பாலம் என்றொரு பாலம் இருந்ததாகக் குறிப்பு உள்ளது.
இராமர் இந்தியாவிலிருந்துப் புறப்பட்டு இலங்கை அடைந்து சீதையை மீட்டுவந்தார் என்ற கருத்தின்படி இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே பாலம் கட்டப்பட்டிருக்கிறது என்பது தொன்மவியல் அடிப்படையிலும், இக்கால தடய அறிவியல் அடிப்படையிலும் நிகழ்ந்துள்ளது என்பது உறுதியாகின்றது.
கம்பராமாயணத்தில் இராமர் பாலம் கட்டுவதற்கான முன் முயற்சிகளை எடுக்கிறார். வருணனை அழைத்துக் கடலை வற்றச் செய்யும்படி கேட்கிறார் இராமர். ஆனால் வருணனோ எண்ணில்லா உயிர்கள் இக்கடலில் வாழ்கின்றன. கடலை வற்றச் செய்வதால் அவை அழிந்து போக நேரும். எனவே ~கடல் மீது பாலம் கட்டிச் செல்க| என்று உரைக்கின்றான். தங்களால் கடல்மேல் கட்டப்படும் பாலத்தை எந்த இடைய+றும் வராமல் நான் பல்லாண்டுகள் காத்து நிற்பேன் என்று வருணன் மொழிகின்றான்.
கல் என வலித்து நிற்பின்
கணக்கு இலா உயிர்கள் எல்லாம்
ஒல்லையின் உவந்து வீயும்
இட்டது ஒன்று ஒழுகாவண்ணம்
எல்லையில் காலம் எல்லாம்
ஏந்துவென் எளிதின் எந்தாய்
செல்லுதி சேது என்று ஒன்று
இயற்றி என் சிரத்தின் என்றான்|| (பாடல். 6801)
என்ற இந்தப் பாடலில் வருணன்தான் முதன் முதலில் சேது என்ற பாலத்தை நிர்மாணிக்க இராமனுக்கு யோசனை கூறுவதாகக் காட்டப்பெற்றுள்ளது. மேலும் கடல் உயிரினங்கள் அழியாமல் காக்கும் வருணனின் சிந்தனை கம்பரின் சிந்தனை என்று கொள்வதில் தவறில்லை.
இதனை ஏற்றுக் கொண்ட இராமன் வானர சேனைகளைப் பார்த்துக் கடலில் பாலம் கட்ட ஆணையிடுகின்றான்.
நன்று இது புரிதும் அன்றே
நனிகடல் பெருமை நம்மால்
இன்று இது தீரும் என்னின்
எளியவரும் ப+தம் எல்லாம்
குன்று கொண்டு அடுக்கி
சேது குற்றுதிர் என்று கூறிச்
சென்றனன் இருக்கை நோக்கி
வருணனும் அருளிச் சென்றான்.||( 6802)
குன்றுகளை அடுக்கிச் சேதுபாலம் கட்ட இராமன் ஆணையிட்ட செய்தி கம்பராமாயணத்தில் இவ்வாறு குறிக்கப்படுகிறது. குன்றுகளை அடுக்கி, சேது பாலத்தை ஆழமாக நாட்டுவீர் என்பது இப்பாடலின் அடிப்படை பொருளாகும்.
இந்தத்திட்டத்தை நிறைவேற்ற சுக்ரீவனின் அவையில் உள்ள கட்டிடக் கலை வல்லவனான நளன் அழைக்கப்படுகிறான். வானரத் தச்சனான நளன் ~கடலில் பாலம் கட்ட வேண்டும் என்பது தானே என் பணி| என்று ஏற்று அதனைச் செய்ய முனைகின்றான். குறித்த காலத்தில் அதனை முடிக்கும் எண்ணத்துடன் அவன் செயல்பாடுகளைத் திட்டமிடுகிறான். வானரக் கூட்டங்களை மலைகளை எடுத்து வரக் கட்டளையிடச் சொல்லுகின்றான்.
காரியம் கடலினை அடைத்துக் கட்டலே
சூரியன் காதல சொல்லி யென்பல
மேருவும் அணுவும் ஓர் வேறு உறாவகை
ஏர் உற இயற்றுவென் கொணர்தி என்றான்|| ( 6805)
என்ற இந்தப் பாடலில் மேரு மலைகளும் மற்ற மலைகளும் மிகச் சிறு அணுவாக வேறாகதபடி ஒன்றிணைத்து நான் கடலில் அணைக கட்டுவேன் என்று நளன்; குறிப்பிடுகின்றான்.
வானரங்கள் பற்பல மலைகளைக் கொண்டு வந்துச் சேர்க்கின்றன. அவற்றை வாங்கி நளன் ஒன்றின்மீது ஒன்றாக அடுக்குகின்றான். அடுக்கிய மலைகளிலிருந்து மண் கரையாமல் ஒழுகாமல் வருணன் காக்கின்றான்.
முடுக்கினன் தருக என்று மூன்று கோடியர்
எடுக்கினும் அம்மலை ஒருகை ஏந்தியிட்டு
அடுக்கினன் தன் வலி காட்டி ஆழியை
நடுக்கினன் நளன் எனும் நவையில் நீங்கினான் (6810)
என்ற இப்பாடலில் நளனின் அணைகட்டும் சிறப்பு சுட்டப்படுகின்றது. நளனின் ஒரு கை மலைகளை வாங்குகிறது. மற்றொரு கை அவற்றை அடுக்குகிறது என்று அணைகட்டப்படும் அழகைக் கம்பர் காட்டுகின்றார்.
நளன் செய்த செயல்களை மற்றொரு பாடல் குறிக்கின்றது.
குலை கொளக் குறி நோக்கிய கொள்கையன்
சிலைகள் ஒக்க முறித்துச் செறித்து நேர்
மலைகள் ஒக்க அடுக்கி மணற் படத்
தலைகள் ஒக்கத் தடவும் தடக்கையால்||( 6848)
என்ற இந்தப்பாடலில் கடலில் அணை கட்டும் தொழில் நுட்பத்தை எடுத்துரைக்கிறார் கம்பர். மலைக்கற்களைச் சமமாக உடைத்து ஒன்றோடொன்று பொருந்த நெருக்கியும் நேரான மலைகளை ஒத்திருக்கும்படி அடுக்கியும், மலைகளின் மேல்புறம் ஒத்திருக்கும்படி மணலைக் கொண்டு மட்டம் செய்தும் அணையை நளன் கட்டினான் என்று கம்பர் குறிப்பிடுகின்றார்.
மேலும் மற்றொரு பாடலில்
தழுவி ஆயிர கோடியர் தாங்கிய
குழுவி வானரர் தந்த கிரிக்குலம்
எழுவின் நீள் கரத்து ஏற்றிட இற்று இடை
வழுவி வீழ்வன கால்களின் வாங்குவான்||(6849)
என்ற இந்தப்பாடலில் நளனின் அணைகட்டும் திறம் இன்னும் சிறப்பிக்கப்படுகிறது. கணைய மரம் போல தன் கைகளால் மலைகளை இடுக்கி அணைணை நளன் கட்டினான் என்ற இச்செய்தி அவன் மலைகளை அடுக்கி மரங்களை இடை இடையே கணைய மரங்களாகச் செருகிப் பாலம் கட்டினான் என்பதைப் புலப்படுத்துகின்றது.
உற்றதால் அணை ஓங்கல் இலங்கையை
முற்ற மூன்று பகல் இடை முற்றவும்
வெள்ள ஆர்ப்பு விசும்பு பிளந்ததால்
மற்று இவானம் பிறிது ஒரு வான்கொலோ (6867)
என்ற பாடல் நளன் பாலம் கட்டி முடித்ததைக் குறிப்பிடுகின்றது. மூன்று பகலில் அணை கட்டி முடிக்கப்பெற்றுள்ளது என்பது கம்பர் வாக்கு.
எய்தி, யோசனை ஈண்டு ஒரு நூறு உற
ஐ இரண்டின் அகலம் அமைந்திடச்
செய்ததால் அணை என்பது செப்பினர்
வையநாதன் சரணம் வணங்கியே||(6873)
என்ற இப்பாடல் அணையின் அகலம், நீளம் ஆகியவற்றை உரைப்பதாக உள்ளது, ஒரு நூறு யோசனை நீளமும், பத்து யோசனை அகலமும் கொண்டு இவ்வணை கட்டப்பெற்றுள்ளது என்பது கம்பர் வானரத் தலைவர்கள் வழியாக இராமனுக்கு அறிவிக்கும் அணை பற்றிய செய்தியாகும்.
இவ்வணையின் மீது இராமன் பயணிக்கின்றான். இதனைக் கம்பர் பின்வரும் பாடலில் காட்டுகின்றார்.
நெற்றியில் அரக்கர் பதி செல்ல நிறைநல்நூல்
கற்று உணரும் மாருதி கடைக்குழை வரத் தன்
வெற்றிபுனை தம்பியொரு பின்பு செல வீரப்
பொன் திரள்புயக் கருநிறக் களிறு போனான்|| ( 6878)
என்று இராமர் பாலத்தில் நடந்த காட்சியைக் கம்பர் வருணிக்கின்றார். நெற்றிப் பகுதியான முன்பகுதியில் வீடணன், நிறைவுப் பகுதியில் அனுமன், தம்பி இலக்குமன் உடன் வர களிறு போல இராமன் அணையைக் கடந்தான் என்ற இந்தக் காட்சி இலங்கை வெற்றிக்கு முன் உதாரணம் ஆகின்றது.
இவ்வாறு கடலில் பாலம் கட்டும் முறைமையை, தொழில் நுட்பத்தைக் கம்பர் பாடுவதன் வாயிலாக அவர் கடலில் அணைகட்டும் தொழில் நுட்பத்தை அறிந்து அதனைப் பாடியுள்ளார் என்பது தெரியவருகின்றது. இதன் காரணமாக கம்பரின் கடல்சார் அறிவும், அணைகட்டும் திறனும் வெளிப்படுகின்றன. கம்பரின் கடல் அணை அமைக்கும் ஆளுமையை இப்பாடல்கள் எடுத்துரைக்கின்றன. இதன்வழி கம்பரின் பன்முக ஆளுமையில் ஒரு முக ஆளுமையாக கடலில் பாலம் கட்டுதல் என்ற ஆளுமை வெளிப்பட்டு நிற்கின்றது. கம்பர் கட்டிய கடலணை திருமாலின் பாம்பணைக்கு நேரானது என்று ஒப்புவைக்கப்படுகிறது.
நாடுகின்றது என் வேறு ஒன்று நாயகன்
தோடுசேர் குழலாள் துயர் நீங்குவான்
ஓடும் என் முதுகிட்டு என ஓங்கிய
சேடன் என்னப் பொலிந்தது சேதுவே (6868)
என்ற பாடலில் ஆதிசேடன் போல சேது கிடந்ததாம். ஆதிசேடனாகிய திருமாலின் பாம்பணை இங்குக் கம்பரின் கடலணையாகின்றது. ஆதிசேடனாகிய தான் அணையாக இருக்க இராமன் ஏன் மற்றொரு அணையை நாடுவது என ஆசிசேடனே சேது அணையாகக் கிடந்தான் என்று இப்பாடல் குறிப்பிடுகின்றது.
திருமால் எப்போதும் பாம்பணையில் இருப்பவன். இங்கு இராமன் அணையில்லாமல் இருப்பதன் காரணமாக சேது பாம்பணையாக மாறுகின்றது. கவிஞன் பாலம் பற்றிய கற்பனை அறிவியலை, தொன்மத்தை, அறத்தை, உதவியை எல்லாவற்றையும் சேர்த்து வலிமை தரத்தக்கது என்பது இதன்வழி தெரிகின்றது.

Series Navigationசாவு செய்திக்காரன்கணையாழியும் நானும்
author

முனைவர் மு. பழனியப்பன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    ஷாலி says:

    //கம்பராமாயணத்திலும் இப்பாலம் பற்றிய பல குறிப்புகள் காணப்படுகின்றன. நாசா என்ற அமெரிக்க நிறுவனம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே பழங்காலத்தில் கடல்வழிப் பாலம் இருந்ததாக செயற்கைக்கோள் வரைபடத்தைச் சான்றாகக் காட்டுகின்றது. //

    பிரபல இந்து மத ஆய்வாளரும் எழுத்தாளரும் மற்றும் ஆர்எஸ்எஸ் ஷேவிக்குமான அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் இதுபற்றி முனைவர்.மு.பழனியப்பனுக்கு கூறுவது.

    “இதே தன்மையுள்ள ஒரு செய்தி விவாதத்திற்காக http://www.indolink.com/Religion/r091702ெ130924.php என்னும் இந்திய தர்மங்களுக்கான இணைய தள விவாத களத்தில் கிடைக்கிறது. இச்செய்தியின் தன்மை பெரும்பாலும் அறைகுறையாக இந்திய கலாச்சார அறிவு கொண்ட ஏதோ மேற்கத்திய மூளையின் விளைவே என எண்ண வைக்கிறது.உதாரணமாக, ‘இப்பாலத்தின் வளைவும் காலமும் இது மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்பதை காட்டுகிறது ‘ என்கிறது இச்செய்தி. எப்போதிலிருந்து ஒரு புகைப்படத் தோற்றத்திலிருந்து ஒரு நிலத்தின் மேல் பகுதியின் காலத்தை நிர்ணயம் செய்யும் தொழில் நுட்பத்தை நாசா உருவாக்கியது ? பின்னர் ‘பாலத்தின் ‘ காலத்தை 1.750,000 ஆண்டுகள் எனக் கூறும் இச்செய்தி, இக்காலம் குறித்த ‘தகவல் ‘ இந்த இடத்தில் நிலவி வரும் ‘மர்மமான புராணக் கதையான இராமாயணம் ‘ ( ‘mysterious legend ‘) நிகழ்ந்த காலகட்டமான திரேதாயுக காலத்திற்கு ஒத்திருப்பதாக கூறுகிறது. என்றிலிருந்து இராமாயணம் ‘மர்மமான புராணக் கதை ‘யாயிற்று ? தெளிவாகவே இது ஒரு எரிக் வான் டானிக்கன் தனமான நிலை பிறழ்ந்த மேற்கத்திய மூளையில் உதித்த மோசடி வேலை…….

    இயற்கை உருவாக்கமான பாலத்தன்மை கொண்ட பவளத்தீவுதொடர்களை ‘பாலமா ‘க்கி நாஸா மூலம் இராமாயணத்திற்கு அறிவியல் சான்றிதழ் வாங்க முற்படுவது மிகத் தவறானது. இத்தகைய தன்மைகள் முளையிலேயே கிள்ளி எறியப்படவேண்டும். தொடக்க காலம் முதலே புராணங்களை நேரடி உண்மையென நம்பும் போக்கை நம் ஆன்மீக அருளாளர்கள் கண்டித்து வந்துள்ளனர். இராம காதை இதிகாசமெனினும் அதன் புராண ,கவித்துவ மற்றும் அகவய கூறுகளை வரலாற்று உண்மைகளிலிருந்து பிரித்தறிவது அவசியம். இம்முறையில் ‘சீதாயாம் சரிதம் மகத் ‘ என வால்மீகி மகரிஷியால் அழைக்கப்பட்ட காவியமான இராமாயாணம் நம் ஆன்மீக மற்றும் சமுதாய உயர்வுக்கான பொக்கிஷமாகக்கூடும். மாறாக 1,750,000 வருடங்களுக்கு முன் வெறும் கற்கால கருவிகளை பயன்படுத்திய நம் குரங்குமொனுடவின தொல் மூதாதைகளை இராமராக மாற்றும் வக்கிரம் தேவையற்றது. ‘முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்.”
    http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20210132&format=print&edition_id=20021013

  2. Avatar
    ஷாலி says:

    //இராமர் இந்தியாவிலிருந்துப் புறப்பட்டு இலங்கை அடைந்து சீதையை மீட்டுவந்தார் என்ற கருத்தின்படி இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே பாலம் கட்டப்பட்டிருக்கிறது என்பது தொன்மவியல் அடிப்படையிலும், இக்கால தடய அறிவியல் அடிப்படையிலும் நிகழ்ந்துள்ளது என்பது உறுதியாகின்றது.//

    //ஒரு நூறு யோசனை நீளமும், பத்து யோசனை அகலமும் கொண்டு இவ்வணை கட்டப்பெற்றுள்ளது என்பது கம்பர் வானரத் தலைவர்கள் வழியாக இராமனுக்கு அறிவிக்கும் அணை பற்றிய செய்தியாகும்.//

    “யோஜனை’ என்கிற தொலைவு குறித்து இரு விளக்கங்கள் வால்மீகியில் காணப்படுகின்றன. பொதுவாக ஒரு யோஜனை என்பது 4 குரோசாக்கள் அளவுடையது. 1 குரோசா என்பது 1000 வில்நாண் நீளமுடையது. 1 வில் நாண் என்பது 6 அடி நீளம். எனவே, 1 யோஜனை இந்தக் கணக்கில்படி 41/2 மைல்கள் என்றாகிறது. பிறிதோரிடத்தில் ‘யோஜனை’ என்பது ஒரு நூறு வில் நாண், அதாவது 600 அடி நீளமுடையது எனக் குறிப்பிடப்படுகிறது. எனவே, மகேந்திர கிரிக்கும், ‘லங்கை’க்கும் இடையே ‘கடலால்’ பிரிக்கப்பட்ட தொலைவு ஒரு கணக்கின்படி 450 மைல்கள், இன்னொரு கணக்கின்படி 111/2 மைல்கள். இந்த இரண்டுமே தனுஷ்கோடியையும் மன்னாரையும் இணைக்கும் 30 கல் தொலைவு நீளமுள்ள கடற்பகுதியுடன் பொருந்தி வரவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

    மேலும் 17.5 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு குமரிக்கண்டமாகத் திகழ்ந்த காலத்தில் கடலால் இப்பகுதி பிரிக்கப்படவுமில்லை. ஒரே நிலப்பரப்பில் கடல்கோளாலும் நிலப் பெயர்வாலும்தான் இடையே கடல் புகுந்ததே தவிர, அதற்கு முன்பு இல்லாத கடலின் மேல் பாலம் கட்டவேண்டிய தேவையே இல்லை. எனவே, தொன்மை எனக் கூறி ஏமாற்றுவோரும் அதனை நம்பி ஏமாறுவோரும் புவியியல் வரலாற்றைப் படித்துத் தங்களைத் தாங்களே திருத்திக் கொள்ள வேண்டும்.

    சேது என்னும் இராமன் பாலம் 100 யோசனை நீளமும் 10 யோசனை அகலமும் கொண்டது என கூறப்பட்டுள்ளது. சமற்கிருதத்தில் வானநூல் உயர்நிலைக் கணிதம் ஆகிய அனைத்துக் கலைகளும் உள்ளதாகச் சொல்லிக் கொள்பவர்களுக்கு ஒரு யோசனைத் தொலைவு எத்தனை மைல்களைக் குறிக்கும் என்று சரியாகச் சொல்லத் தெரியவில்லை. ஒரு அகராதி 5 மைல் என்கிறது. மோனியர் வில்லியம்சின் சமஸ்கிருத அகராதி 8 மைல் முதல் 10 மைல் ஆகலாம் என்கிறது.

    யாழ்ப்பாணத்து கதிரை வேற்பிள்ளை அகராதி ஒரு யோசனை என்பது 20 மைல் என்கிறது.

    மேற்கண்ட அகராதிகளின்படி யோசனை 5 மைலைக் குறிப்பதாகக் கொண்டால் இராவணன் ஆண்ட தென்னிலங்கை நில நடுக்கோட்டிலுள்ள டீகோகார்சியா தீவுப்பகுதிகளில் அதாவது 500 மைலுக்கு அப்பால் இருந்திருக்க வேண்டும். ஆனால் இன்று முப்பது கி.மீ. தொலைவு மட்டுமே உள்ளது.இதை சரி செய்வதற்கும் அறிவியலில் வழி உள்ளது.

    17.5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இராமனின் சென்ற இலங்கை “கண்ட நகர்வு கொள்கை”ப்படி (Continentel Drift) சிறிது சிறிதாக நகர்ந்து இன்றுள்ள அளவுப்படி உள்ளது.பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்லவேண்டும் என்பது பழமொழி.அது என்னமோ தெரியவில்லை.பக்தி வெள்ளம் பெருகெடுத்து விட்டால் அது அடிப்படை அறிவியல் சிந்தனைகளையும் அடித்துக்கொண்டு சென்று விடுகிறது.இவ்வெள்ளத்தின் முன்னால் முனைவர்,பேராசிரியர்களும் மூச்சுத் திணறி மூழ்கி விடுவது ஓர் அவலம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *