புத்தகங்கள் ! புத்தகங்கள் !!

This entry is part 1 of 23 in the series 20 டிசம்பர் 2015

லா. சா. ரா.வின் ” பிராயச்சித்தம் ” சமுத்திரத்தைக் காணச் சென்ற கண்களுக்கு கிடைத்த ஒரு வாளி தண்ணீர் தரிசனம்

ஸிந்துஜா

lasaramamirtham250_30102007லா.ச.ரா.வின் நாவல் என்று ” பிராயச்சித்தத்”தை ஆவலுடன் அணுகும் ஒரு தேர்ந்த வாசகருக்கு , அது ஏமாற்றத்தைத் தரும் எழுத்தாகவே அமைந்திருக்கிறது . இதற்கு முன்னுரை எழுதியவர் அதை எழுதத் ” தனக்கு என்ன தகுதி உள்ளது என்று தெரியவில்லை ” என்கிறார் ! முன்னுரையை முடிக்கும் போது “இந்தப் புத்தகத்தைப் படிப்பதன் மூலம் உங்கள் பாவங்களுக்கும் ஒரு பிராயச்சித்தம் கிடைக்கக் கூடும் ” என்கிறார் . இது சாபமா, வாழ்த்தா என்று புரியவில்லை .

பிராயச்சித்தம் , புத்ர, அபிதா தர வரிசையில் இருந்து வெகு தூரம் விலகி நிற்கும் நாவல் . “நெருப்பு என்று படிக்கும் போது வாய் வெந்து விட வேண்டும் ” என்று சொற்களை உபாசித்த கலைஞனின் உக்கிரம் இந்த நாவலில் இல்லை. அதற்கு முக்கிய காரணமாக சற்றுத் தொய்ந்த
நிலையில் பின்னப்பட்ட கதையின் மூலப் பொருள் . இறுக்கமற்ற சம்பவக் கோர்வைகளும் இந்தத் தொய்வை சுட்டிக் காட்டுகின்றன .

மனைவியாலும் , மகளாலும் வஞ்சிக்கப் பட்ட ஒருவர் , வேலை பார்க்கும் இடத்தில் பழக நேரும் ஒரு பெண்ணுக்கு அவள் அடகு வைத்திருந்த நகையை சேட்டிடமிருந்து திருடி உதவப் போய் , மாட்டிக் கொண்டு, சிறைவாசம் அனுபவித்து விட்டு, வெளியே வந்ததும், அந்தப் பெண் அவரைத் திரும்பச் சந்தித்துத் தன் வீட்டிற்குக் கூட்டிக் கொண்டு வருகிறாள் . அவளுக்கும் அவள் கணவனுடன் தகராறு . விவாகரத்து வரைக்கும் விஷயம் சென்று விடும் தருணம் அது. திருடிய நகையைப் பற்றிய உண்மை தெரியாத போலிஸ், மற்றும் இதர பாத்திரங்கள் அனைவருக்கும், அந்த நகையை ஒளித்து வைத்த கோவில் இடத்திலிருந்து எடுத்துக் காண்பிக்கிறார் . அந்தப் பெண்ணிடமே நகையைக் கொடுக்க அது அவள் தனக்கு வேண்டாமென்று கோயில் அம்பாள் மீதே சார்த்தி விடுகிறாள் . சரி, வேலை முடிந்தது என்று அவர் எல்லோரையும் விட்டு விட்டு ,இருட்டில் கால் போன போக்கில் வெகு தூரம் நடந்து எங்கோ உள்ள ஒரு பஸ் ஸ்டாப் சிமிட்டி பெஞ்சில் உட்காருகிறார். சற்றுக் கழித்து , ஒ ரு முக்காடு போட்ட உருவம் அவரிடம் வந்து “வரீங்களா ?” என்று கேட்கிறாள் .அவர் வெலவெலக்க , “இஷ்டப் பட்டதைக் கொடுங்க, நான் ரேட் பேச மாட்டேன் ” என்று சொல்லும் போது முகத்தை மறைத்த முக்காடு கீழே விழ , அவர் தன்னை விட்டுச் சென்ற மகளைப் பார்த்து அலறுகிறார். அவளும் ” அப்பா !” என்று அவரைக் கட்டிக் கொண்டு அழுகிறாள் .

சராசரிக்கும் கீழ்ப்பட்ட ஒரு தமிழ் சினிமா ஃ பார்முலா கதைதான் இது . வருஷக்கணக்கான,பழக்கமோ, நெருங்கிய உறவோ அல்லாத , ஆபிசில் தற்செயலாய் அறிமுகம் ஆகின்ற ஒரு பெண்ணுக்கு நடுத்தர வயதைக் கடந்த , வாழ்க்கையில் அனுபவ முத்திரைகளுடன் அடிபட்ட , அம்பாளின் மீது அதீத பிரியமும் , பக்தியும் கொண்ட ஒருவர், சிறுபிள்ளைத்தனமாக, ஒரு ஐந்தாயிரம் ரூபாய் பெறுமான நகையைத் திருடுவதற்கான முகாந்திரம் நாவலில் சுட்டிக் கூடக் காண்பிக்கப் படவில்லை. எதற்காக இப்படி செய்தேன் என்ற கேள்வியை எழுப்பும் மனிதர், எல்லாவற்றிற்கும் , வாழ்க்கையில் பதில் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்று கூறும் போது , அது ஒரு சமாளிஃ பிகேஷன் மாதிரி இருக்கிறது ! சினிமாப் பைத்தியம் பிடித்து அவரை விட்டுச் சென்ற மகள், விபசாரியாக அவரிடமே வந்து விழுவதும், இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு , ஆசிரியர் பாஷையில் சொல்லுவதானால் ” கண்ணீர் சங்கமத்தில் ” கரைவதும், அபத்தத்தின் உச்ச கட்டமாகத்தான் இருக்கிறது .

Essential லா.ச.ரா. பாஷையில் நம்மை மயக்கும் வரிகள்——

//நக்ஷத்திரங்கள் விம்முகின்றன , கேட்கிறது.
நிலவின் தேன் அடிநாக்கில் – ஊறுகிறது .
மையிருளைத் தொட்டு விடலாம் அத்தனை ….மெத்து
அந்தராத்மாவின் குப்பி திறந்து கொண்டால் இத்தனை வாசங்களும் , தோற்றங்களும் ஒருங்கே – வெளிப்படும் போலும் !
அழகாயிருக்கிறது . அச்சம் தருகிறது .//

ஆனால் , இது சமுத்திரத்தைக் காணச் சென்ற கண்களுக்குக் கிடைத்த ஒரு வாளித் தண்ணீரின் தரிசனம் !

லா.ச.ரா. மறைந்து (2007) நான்கு வருஷங்கள் கழித்து (2011) இந் நாவல் வெளிவந்திருக்கிறது. லா.ச.ரா. அப்போது உயிருடன் இருந்திருந்தால்
” பிராயச்சித்தம் ” வெளிவர ஒப்புக் கொண்டிருப்பாரா என்று ஏற்படும் எண்ணத்தைத் தவிர்க்க முடியவில்லை .

Series Navigationஎனது ஜோசியர் அனுபவங்கள் – பகுதி 2
author

ஸிந்துஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *