அக்கினி புத்திரி

This entry is part 22 of 28 in the series 29 ஏப்ரல் 2012

 

அக்கினி புத்திரி

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


“நான் பணி புரியும் விஞ்ஞானத் தொழிற்துறைகளில் பாலினப் பாகுபாடு (Gender Discrimination) எதுவும் கிடையாது.  ஏனெனில் யார் வேலை செய்கிறார் என்று விஞ்ஞானத்துக்குத் தெரியாது.  நான் வேலை செய்யப் பணித் தளத்தில் கால் வைக்கும் போது ஒரு பெண்ணாக என்னை நினைத்துக் கொள்வதில்லை.  மாறாக நானொரு விஞ்ஞானியாக அப்போது எண்ணிக் கொள்கிறேன்.”

டாக்டர் டெஸ்ஸி தாமஸ் (Agni-V Project Director, Defence Research & Development Organization)

“அக்கினி புத்திரி” என்றும், “ஏவுகணை மாது” (Missile Woman) என்றும் பாராட்டப் படும் பொறியியல் டாக்டர் டெஸ்ஸி தாமஸ் ஓர் அபூர்வ ராக்கெட் விஞ்ஞானி.  நோபெல் பரிசு பெற்று இந்தியாவில் பணி செய்த அன்னை தெரேஸாவின் பெயரே இவருக்கு இடப் பட்டது.  2008 ஆம் ஆண்டில் இந்தியப் பெண் விஞ்ஞானிகளின் கூட்டரங்கம் (The Indian Women Scientists Association) அவருக்குச் சூடிய புகழுரையில்,  “வீட்டுக்கும், விஞ்ஞானப் பொறுப்பு வேலைக்கும் இடையே கட்டிய இறுக்குக் கம்பியில் விழாமல் நடந்து தன்னை முழுமையாய் ஈடுபடுத்திக் கொண்ட பல அன்னையரைப் போன்றவர் என்று சொல்லிப் பாராட்டியது.  இவரது குருநாதரான இந்தியாக்கு அசுர வல்லமை ஈந்த ராக்கெட் எஞ்சினியர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் கீழ் பணி செய்தவர்.

 

 

1988 ஆண்டு முதல் இந்திய இராணுவ ஆராய்ச்சி விருத்தித் துறையகத்தில் (India’s Defence Research & Development Organization DRDO) வேலை செய்து வருகிறார்.  முதல் அக்கினி (Agni -1) ஏவு கணை 1989 இல் அனுப்பப் பட்டுச் சோதனை செய்யப் பட்டது.  இந்திய இராணுவத்துக்காக டிசைன் செய்து வடிவமைத்து, சோதித்த பெரும்பான்மையான அணு ஆயுதம் ஏந்திச் செல்லும் நீட்சி எல்லைக் கட்டளைத் தாக்கு கணைகள் அனைத்திலும் அவர் பங்கெடுத்தவர்.  சமீபத்தில் (ஏப்ரல் 19, 2012) வெற்றிகரமாக விண்ணில் ஏவி 3500 கி.மீ. பயணம் செய்த அக்கினி -5 ராக்கெட்டும் அவரது ஆளுமையில் நடந்தேறியது என்பது குறிப்பிடத் தக்கது.  தற்போது (2012) டெஸ்ஸி தாமஸ் பல்வேறு போராயுத வெடிகள் தூக்கிச் செல்லும் தனித்துவக் கட்டளை ஏவுகணை மீட்சி வாகனம் (Misson Guidance Systems for Mulitiple Independent Re-entry vehicle that carries multiple warheads) சம்பத்தப் பட்ட ஒரு புதிய ஆய்வு அமைப்புத் துறையில் மூழ்கியுள்ளார்.

ஆடவ நிபுணர் பலர் ஆளுமை செய்யும் ராக்கெட் விஞ்ஞானத்தில் இப்படி அபூர்வப் பிறவியாய் எழுந்துள்ள பெண் எஞ்சினியர் டெஸ்ஸி தாமஸ் தனித்துவத் திறமையுடன் தனியாய் ஆடவர் மத்தியில் முன்னிற்கிறார். “விஞ்ஞானத் தொழிற்துறைகளில் எந்தவிதப் பாலினப் பாகுபாடும் (Gender Discrimination) கிடையாது.  உன் திறமை கூரியதானால், ஆணோ, பெண்ணோ நீ தானாக முன்னுக்கு வருவாய் என்று உறுதியாகக் கூறுகிறார்.  தான் பணி புரியும் இடங்களில் எந்த விதப் பாலினப் பாகுபாட்டையும் எதிர்க்க வேண்டி இருந்த தில்லை என்று பொறுமையாகச் சொல்கிறார்.

 

 

2012 இல் 49 வயதாகும் டெஸ்ஸி தாமஸ் ரோமன் காத்லிக் மதத்தினரான பெற்றோருக்குத் தென் கேரளாவில் உள்ள ஆலப்புழையில் பிறந்தார்.  தந்தையார் ஒரு சிறு தொழில் நடத்திய வாணிபர். தாயார் கல்வி புகட்டும் தகுதி இருந்தும் வேலை செய்யாது வீட்டைப் பேணியவர். தந்தையார் கணித ஞானம் உள்ளவர். 1991 இல் தந்தை முடக்குவாத மூளை அடிப்பில் (Paralytic Stroke) மரித்தார்.  75 வயதாகும் தாயார் குஞ்சம்மாள் தாமஸ் ஆலப்புழையில் வசித்து வருகிறார்.  அவர்கள் வாழ்ந்து வந்த இடம் தும்பா ராக்கெட் ஏவுகணைகள் சோதிக்கும் தளத்துக்கு அருகில் இருந்தது.  அங்கிருந்து இடி முழக்கி விண்ணில் பாய்ந்து செல்லும் ஏவுகணைகளே அவரது சிந்தனையை ராக்கெட் விஞ்ஞானத்தில் முற்படத் தூண்டியதாகச் சொல்கிறார்.  பள்ளிக்கூடக் கல்லூரிப் படிப்புகளைக் கேரளாவில் முடித்து விட்டு தனது 20 வயதிலே பிறந்த மாநிலத்தை விட்டுவிட்டுக் கட்டளை ஏவு கணைகளில் மேல்நிலைப் பட்டப் படிப்புக்கு பூனாவுக்குச் சென்றார்.  அங்கே ராடக்கெட் பொறியலில் டாக்டர் பட்டமும் பெற்றார்.  தனது எதிர்காலக் கணவர் சரோஜ் படேலை அங்குதான் அவர் சந்தித்தார். இந்தியக் கடற்படையில் கம்மோடராக (Commodore in the Indian Navy) சரோஜ் படேல் மும்பையில் வேலை செய்து வருகிறார்.

பேரழிவுப் போராயுதம் ஏந்திச் செல்லும் அக்கினி -5 ராக்கெட் திட்டத்தில் எப்படி நீங்கள் வேலை செய்கிறீர் என்று கேட்டால், “நான் சமாதானம் உண்டாக்கும் ஓர் போராயுதப் பணியில்தான் பங்கெடுக்கிறேன்,” என்று பதில் சொல்கிறார். “அந்த வேலையில் எண்ணற்ற சிக்கல்கள் உள்ளன.  நான் குடும்பத்துக்கும், வேலைக்கும் இடையே மாறி மாறித் தாவிக் கொண்டிருக்கிறேன்,” என்று கூறுகிறார்.  “சில சமயங்களில் தேசீயப் பொறுப்பு ஏவுகணைச் சிரம வேலைக்கும், குடும்பப் பொறுப்புக்கும் இடையே முறிந்து போய் நசுங்கிக் கொண்டிருக்கிறேன்,” என்று மனம் பொருமுகிறார். அதற்குக் கடற்படை வேலையில் பயணம் செய்யும் கணவரின் ஒத்துழைப்பும், வெல்லூரில் பொறியியல் துறையில் படிக்கும் மகன் தேஜஸ் (Tejas) இணக்கமும், ஏற்புடமையும் மிகவும் உதவியாக இருப்பதாகச் சொல்லிப் பெருமைப் படுகிறார்.  “தேஜஸ்” என்பது இந்தியா சுய முயற்சியில் உற்பத்தி செய்த போர் விமானத்தின் பெயர்.

 

 

“டெஸ்ஸி தாமஸ் வெற்றிப் பாதையில் தமது கனவுகளைத் தொடர்ந்து முயலும் பல பெண்டிர் இதய உந்தலோடு வேட்கையுடன் பின்பற்ற விரும்பும் பெண் விஞ்ஞானிகளுக்கு ஒரு மாடல்,” என்று கருதப் படுகிறார். இந்தியப் பெண் விஞ்ஞானிகளின் கூட்டரங்கம் அவரைப் பற்றி இப்படி அறிவித்துப் பாராட்டியது.  அவர் சேரும் போது அவரது ராக்கெட் பணியகத்தில் ஒரு சில பெண்டிரே வேலை செய்து வந்தார் என்றும், தற்போது 200 மேற்பட்ட பெண் விஞ்ஞானிகள் பல்வேறு போர்த்துறைப் பணிகளில் வேலை செய்து வருகிறார் என்றும் கூறுகிறார்.  பெண் விஞ்ஞானிகளுக்கு அளிக்கும் இந்திய சிறப்புப் பரிசு (Shanthi Swarup Bhatnagar Award) கடந்த 50 ஆண்டுகளில் (1958-2010) பெற்றவர் 11 பெண்டிர்.  அதே சமயம் 2011 ஆண்டில் மட்டும் பரிசு அளிக்கப் பட்டவர் 3 பேர். டாக்டர் டெஸ்ஸி தாமஸ் அவர்களுக்கு இந்திய சிறப்புப் பரிசோடு எதிர்காலத்தில் பாரத ரத்னா பட்டமும் கிடைக்க வாய்ப்புள்ளது.

 

+++++++++++++++

தகவல் :

1.  No Gender Bias in Science Says Missile Scientist Tessy Thomas By Mohammsd Shafeeq (April 23, 2012)

2.  The Rocket Science : The Missile Woman Behind Indian Test Launch (April 24, 2012)

3.  BBC News : The Missile woman Behind India’s New ICBM By Pallava Bagla (April 20, 2012)

 

+++++++++++++++++++
S. Jayabarathan [jayabarat@tnt21.com] April 28, 2012

http://jayabarathan.wordpress.com/

Series Navigationநூபுர கங்கைமறு முகம்

15 Comments

  1. Avatar jayashree shankar

    அன்பின் திரு.சி.ஜெயபாரதன் அவர்களுக்கு,
    வணக்கம்…”அக்னி புத்திரி”….தங்களது கட்டுரையைப் படித்ததும்…ஒரு சக வயது பெண்மணியின் சாதனையைக்
    கண்டு வியப்பு மாறவில்லை…தொலைக் காட்சியில் காண்பித்தார்கள் ..அனால் இவ்வளவு தெளிவாக உங்களது பாராட்டுக் கட்டுரை….”மாதவம் செய்த அம்மையார்” ரின், திறமையும்…சாதனையும் எங்களுக்குத் தெரியப் படுத்தியதற்கு மிக்க நன்றி. தங்களது இந்த சேவை போற்றப் பட வேண்டியது..

    நமது இந்தியா…விற்குப் பெருமை சேர்த்த டாக்டர்.டெஸ்ஸி தாமஸ்…இனி வரும் இளம் பெண்களுக்கு விஞ்ஞானத்தில் ஆர்வமும் விழிப்புணர்வும் ஏற்படுத்திக் கொடுத்த ஒரு வழிகாட்டியாக விளங்கியது பெருமைப் பட வைக்கும் விஷயம்.

    அவர்களுக்குத் தங்களின் பாராட்டுக் கடிதமே…உயர்ந்த கேடயம். இனி பெண் விஞ்ஞானிகள் பெருகி வர முன்னோடியாகத் திகழ்ந்து வரவேற்கும் டாக்டர் டெஸ்ஸி தாமஸ்..இன்னும் நிறைய சாதனை படைக்க வேண்டும் என்ற வாழ்த்துகிறேன்.
    வணக்கம்.
    ஜெயஸ்ரீ ஷங்கர்.

  2. அன்பின் திரு ஜெயபாரதன்,

    வணக்கம். உண்மைதான், விஞ்ஞானத்திற்கு ஆண்,பெண் என்ற பாலின பேதம் இல்லை. தொழிலையும், குடும்பத்தையும் ஒரு சேர திறமையாக நடத்திச் செல்லும் வல்லமை பெற்றவள்தான் பெண் என்றாலும், இது போன்ற மிகப் பொறுப்பான, கடினமான, மூளைக்கு வேலை கொடுக்கக் கூடிய ஒரு உன்னதமான பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு சாதனை படைத்து பெண் குலத்திற்கே பெருமை தேடித்தந்திருக்கும் டெஸ்ஸி தாமஸ் அவர்களை மனதார வாழ்த்துவோம். அவர் பாரத ரத்னா விருது பெற்று மேலும் சாதனை படைக்கும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை என்பதும், தங்களுடைய தெளிவான இடுகை மூலம் அறிந்து கொண்டோம். பகிர்விற்கு மிக்க நன்றி. டெஸ்ஸி தாமஸ் போன்ற விஞ்ஞானிகள் மூலமாக உலக அரங்கில் நம் இந்திய நாடு ஒரு தனி இடத்தைப் பிடிப்பதோடு, அப்துல் கலாம் அவர்களின் கனவின்படி நம் இந்தியா வல்லரசு ஆகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையும் உற்சாகத்தை அளிப்பதாக உள்ளது.

    நன்றி.
    அன்புடன்
    பவள சங்கரி.

    • மதிப்புக்குரிய பவள சங்கரி,

      ஈதோ இங்கோர் தமிழ்ப்பெண் விஞ்ஞானி நோபல் பரிசு பெறப் போகிறார் எதிர்காலத்தில்.
      பாராட்டுக்கு நன்றி.

      சி. ஜெயபாரதன்.

      • அன்பின் திரு ஜெயபாரதன்,

        டாக்டர் ப்ரியா நடராஜனின் தங்கள் இடுகையை ஒரு முறை கூகிளாரிடம் தேடியபோது கிடைத்தது. மிக பயனுள்ள தகவல்கள்.இந்திய திருநாட்டின் சமுதாய மறுமலர்ச்சியில் பெண்கள் என்ற என்னுடைய கட்டுரைத் தொகுப்பிற்கு முதல் இந்திய பெண் விஞ்ஞானி பற்றிய குறிப்பு தேடியபோது கூகிளார் தங்கள் வலைப்பூவை காட்டினார். நனி நன்றி.

        அன்புடன்
        பவள சங்கரி.

  3. Avatar ruthraa

    அக்கினிப்புத்ரிக்கு ஒரு பாராட்டு மட‌ல்
    ===========================================ருத்ரா

    டாக்டர் டெஸ்ஸா தாமஸ் அவர்களே!

    அறிவியல் என்றால்
    பெண்களுக்கு
    அடுப்பங்கரையே பிரபஞ்சம்
    குழம்பு வைப்பதே
    குவாண்டம் மெகானிக்ஸ்
    என்ற நிலையை
    மாற்றிவைத்த‌
    விஞ்ஞானத்தின் வீரங்கனையே

    இந்திய‌த்துணைக்க‌ண்டத்தின்
    இத‌ய‌ பூர்வ‌மான‌ பாராட்டுக‌ள்
    உங்க‌ளுக்கு.

    பெண்க‌ள் என்றால் வெறும்
    ம‌ல‌ர்க்க‌ணை ப‌ற்றி
    க‌விதைக‌ள் பாடும்
    வ‌ர‌ட்டு உல‌க‌ம் இன்று
    த‌விடு பொடி ஆன‌து.

    ஏவுக‌ணைக‌ளின்
    எந்திர‌விய‌ல் உங்க‌ள்
    ம‌ந்திர‌ப்புன்ன‌கை
    ஆன‌து க‌ண்டோம்.

    “அக்கினி”யின் ஆற்ற‌ல் குழ‌ம்பை
    உங்க‌ள் அறிவின் அக‌ப்பையில்
    அள்ளி எடுத்து அற்புத‌ ச‌மைய‌ல்
    ஆக்கி வைத்தீர்.

    உல‌க‌மே வியக்குது
    அமைதிக்கு ம‌ட்டுமே ம‌ண‌க்கும்
    இந்த‌ ஆயுத‌ம் செய்த‌ உங்க‌ள்
    அருமைத்”தாளித‌ம்” கண்டு
    அட‌ர்புகை பாரீர் விண்மீது
    அடுப்பின் புகை அது அல்ல‌
    அடு போர்ப் ப‌கைத‌னை
    அழித்தொழிக்கும்
    அழ‌கிய‌ ர‌ங்கோலித்திருக்கோல‌ம்.

    தீ எனும் ஆற்றல் ஒரு
    தீந்தமிழ்க் கவிதையாய்
    விண்ணையும் சாடி
    விஞ்ஞானம் சொல்லும்
    விந்தை சாதனை புரிந்திட்ட‌
    இந்திய நாட்டின் திருமகளே!

    இமயம் இன்று
    இமைகள் விரித்து
    அண்ணாந்து பார்த்தது!

    பறப்பது அங்கே என்ன‌?
    புகைவிடும்
    பட்டாம்பூச்சியா அது?
    பகை த‌விர்க்க‌
    பார‌த‌ம் ந‌ட‌த்தும் வேள்வியே அது!

    அதற்குள்ளும் ஒரு
    வ‌ளையொலி கேட்டால்
    அந்த‌ மாணிக்க‌ வாச‌க‌ரும்
    திருவெம்பாவை பாட‌
    ம‌ற‌ந்திடுவார்.

    அது உங்க‌ள்
    “க‌வுண்ட் ட‌வுன்” ஒலிக்கும்
    ஒலிய‌ல்ல‌வா!

    புதிதாய் ஒரு
    “பூபாள‌”ப்பாட‌ல் பாடிடுவார்..இந்த‌
    பூகோள‌ம் விழிக்க‌ப்பாடிடுவார்.

    “புவி ஈர்ப்பையும் வெல்ல
    புறப்பட்டாய் பூங்கோதாய்!
    “விஞ்ஞான‌ம் விழித்த‌துவே
    அது போதும் எம்பாவாய்”

    =======================================

    • அன்பின் திரு ருத்ரா,

      வாவ்… அருமையான திருவெம்பாவை.. அற்புதம். திருப்பாவையாய் டெஸ்ஸா தாமஸ்.. வாழிய வாழியவே!
      வாழ்த்துகள் நண்பரே.

      அன்புடன்
      பவள சங்கரி.

  4. விஞ்ஞானக் கவிஞர் ருத்ரா,

    ///பெண்க‌ள் என்றால் வெறும்
    ம‌ல‌ர்க்க‌ணை ப‌ற்றி
    க‌விதைக‌ள் பாடும்
    வ‌ர‌ட்டு உல‌க‌ம் இன்று
    த‌விடு பொடி ஆன‌து.

    ஏவுக‌ணைக‌ளின்
    எந்திர‌விய‌ல் உங்க‌ள்
    ம‌ந்திர‌ப்புன்ன‌கை
    ஆன‌து க‌ண்டோம்.

    “அக்கினி”யின் ஆற்ற‌ல் குழ‌ம்பை
    உங்க‌ள் அறிவின் அக‌ப்பையில்
    அள்ளி எடுத்து அற்புத‌ ச‌மைய‌ல்
    ஆக்கி வைத்தீர்.

    தீ எனும் ஆற்றல் ஒரு
    தீந்தமிழ்க் கவிதையாய்
    விண்ணையும் சாடி
    விஞ்ஞானம் சொல்லும்
    விந்தை சாதனை புரிந்திட்ட‌
    இந்திய நாட்டின் திருமகளே!

    இமயம் இன்று
    இமைகள் விரித்து
    அண்ணாந்து பார்த்தது!

    பறப்பது அங்கே என்ன‌?
    புகைவிடும்
    பட்டாம்பூச்சியா அது?
    பகை த‌விர்க்க‌
    பார‌த‌ம் ந‌ட‌த்தும் வேள்வியே அது! ///

    அக்கினிப் புத்திரிக்கு
    நக்கீரனின்
    உக்கிரம் உள்ளது
    முக்கண்ணன்
    நெற்றிக் கண் கொண்டவர்
    இக்கணம் ஏவிய
    அக்கினி-5 கணை
    ஒருநாள்
    விண்ணைத் துளை யிட்டு
    வியாழக் கோள் சுற்றும் !
    சந்திரனுக்குப் போய்
    சலித்து விட்டது.
    இனிமேல்
    செவ்வாய்க் கோள் சுற்றி
    செம்மண் எடுத்து வரும் அடுத்த
    பத்தாண்டில் !

    அக்கினி தேவிக்கு
    உமது வரிகள்
    முத்து மொழிகள்.

    சி. ஜெயபாரதன்.

  5. Dear MR.JAYABAARATHAN, Thank you for your information and praises for AGNI-V PROJECT DIRECTOR, DR.TESSY THOMAS. She has brought Indian women to the forefront and is now the pride of INDIA! Highlighting her in THINNAI for readers all over the world is an appropriate act by MR.JAYABAARATHAN. DR.TESSY THOMAS has proved that gender has no barrier to avail knowledge and to apply it in complicated scientific research as space technology. I wish her more success in all her future adventures in space!…Dr.G.Johnson.

  6. Avatar jayashree shankar

    நன்று…நன்றி..திரு.ருத்ரா அவர்களே…

    /////இமயம் இன்று
    இமைகள் விரித்து
    அண்ணாந்து பார்த்தது!

    பறப்பது அங்கே என்ன‌?
    புகைவிடும்
    பட்டாம்பூச்சியா அது?
    பகை த‌விர்க்க‌
    பார‌த‌ம் ந‌ட‌த்தும் வேள்வியே அது!/////

    மொத்தக் கவிதையின் அழகையும்…

    இந்த வரிகள் கண்களாக விழுங்கி

    விட்டதே….அருமை…அருமை…!

    உங்கள் கவிதைகள் அனைத்தும்…

    ஒன்றை ஒன்று மிஞ்சி நிற்கும்..

    தனித் தன்மையோடு…

    வணக்கம்..

    ஜெயஸ்ரீ ஷங்கர்.

  7. Avatar ruthraa

    நன்றி பவளசங்கரி அவர்களே!

    உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

    1950களில் “மேலே பறக்குது ராக்கெட்டு மின்னல் பூச்சி ஜாக்கெட்டு” என்று சினிமாப்பாட்டுகள் ஏதோ எதுகை மோனைக்காக பாடியிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா என்பதை நான் அறியேன்.வெறுமே கவிதையின் கருப்பொருள் உரிப்பொருளாயிருந்து மட்டும் அழகு படுத்துவர்கள் அல்ல மாதர் குல மாணிக்கங்கள்.ஸ்புட்னிக்கை தொடர்ந்து “வாலன்டினா ட்ரஷ்கோவா”என்ற வீராங்கனையைத்தொடர்ந்து பெண்களின் சாதனை வியப்புக்குரியது.மனித இனத்தையும் பெருமை கொள்ள வைப்பது.

    அன்புடன்
    ருத்ரா

  8. Avatar ruthraa

    விஞ்ஞானத்தமிழ் வித்தகர் திரு.சி.ஜெயபாரதன் அவர்களே!

    ந‌ம் பார‌த‌த்தின் ர‌த்னமான‌
    அக்கினிபுத்ரி எனும்
    ஏவுக‌ணை
    விஞ்ஞான‌க்குழ‌ந்தையாய்
    த‌வ‌ழ்ந்து
    ந‌ட‌ந்து
    ச‌ட்டென்று விண்ணைக்கிழிக்க‌
    புற‌ப்ப‌ட்ட‌தை
    அங்குல‌ம் அங்குல‌மாய்
    அற்புத‌ம் பொங்க‌ எழுதிய‌
    உங்க‌ள் க‌ட்டுரை
    பிரம்மாண்டமானது.
    தமிழ் அன்னைக்கு கிடைத்த‌
    ஐம்பெருங்காப்பியத்துடன்
    அழகு பெற அணிவகுக்கிறது
    உங்களின் இந்த‌ விஞ்ஞான‌த்தின்
    “விண்பெருங்காப்பிய‌ம்”
    அறிவிய‌ல் த‌மிழ்
    செழிக்கச்செய்த‌ உங்க‌ள் பணிக்கு
    என் பாராட்டுக‌ள்.

    அன்புடன்
    ருத்ரா

  9. Avatar ruthraa

    ந‌ன்றி ஜெய‌ஸ்ரீ ஷ‌ங்க‌ர் அவ‌ர்க‌ளே!

    பெண் என்பவள் திருமணம் எனும் புனித விழாவின் போது வேள்விப்புகை மூட்டத்தினூடே அம்மியில் காலும் “அருந்ததி”யிடம் கண்ணுமாக இருப்பதை நாம் அறிவோம்.அவள் புராணம் கேட்பதற்காக அருந்ததியை பார்க்கவில்லை.அவள் விஞ்ஞானம் கற்கப்புகுந்தால் தூரத்து நட்சத்திரக்கூட்டங் களிடையேயும் ஊடுருவி அந்த “பல்ஸார்” “குவாஸர்களையும்”தன் வாசலில் “பூசணிப்பூவாக்கி”விந்தை புரிவாள்.
    பெண்ணிற்காக அந்த விண்ணையும் சாடச்சொன்ன பாரதியின் தீர்க்க தரிசனம் இப்போது அல்லவா தெரிகிறது.அவள் போட்டி என்று வந்து விட்டால் உனக்கு முன்னேயே விண்ணில் சென்று விந்தைக்கோலம் இடுபவள் என்று ஆண்களுக்கு எடுத்துக்காட்டவே அப்படி பாடியிருக்கிறார்.இவையெல்லாம் தான் என் க‌விதையின் அடி ஊற்று.

    மீண்டும் மிக்க‌ ந‌ன்றி

    அன்புட‌ன்
    ருத்ரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *