Posted in

அப்பால்…..

This entry is part 17 of 22 in the series 19 ஏப்ரல் 2020

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

’கடவுளையே கதிகலங்கச்செய்துவிட்டது பார் கொரோனா’ என்று கெக்கலிப்பார் சிலர்.

’கடவுளே கொரோனா’ என்று கும்பிடுவார் சிலர்.

கண்பொத்தி யுள்ளே பூஞ்சையாய் ஒடுங்கிக் கிடக்கிறார் பார்’ என்பார் சிலர்.

’கணக்கற்றோரின் கனவுகளையும் கவலைகளையும்
சுமந்து சுமந்து களைத்துப்போயிருப்பார்
கொஞ்சம் களைப்பாற்றிக்கொள்ளட்டும்’ என்று
கதவடைத்திருக்கும் கோயிலின் முன் நின்று
கன்னத்தில் போட்டுக்கொண்டே வாஞ்சையோடுசொல்லிக்கொள்வார் சிலர்.

’Collective Spirit இன் முழுமையான அர்த்தத்தைப் புரிந்துகொள்ள கிடைத்த அரிய பெரிய வாய்ப்பு’
என்பார் சிலர்.

’விலங்குகளுக்கும் பறவைகளுக்குமான
விடுமுறை’ யென்பார் சிலர்.

’மனிதனின் தான் என்ற அகங்காரம் குறையவும்
திமிர் அடங்கவும்
தீ நுண்மி உதவினால் போதும்’ என்பார் சிலர்.
’உதவுமா’ என்பார் சிலர்;
’போதுமா’ என்பார் சிலர்.

’வீதிகளெல்லாம் எத்தனை சுத்தமாயிருக்கின்றன’
என்பார் சிலர்.

’மீதி நாட்களிலும் இப்படி வைத்திருந்தால் என்ன’
என்று காட்டமாய் விமர்சிப்பார் சிலர்.

முகத்திற்கான ‘மாஸ்க்’ தெருவின் அந்த முனைக் கடையில் பதினைந்து ரூபாயும்
இந்த முனையில் முப்பது ரூபாயும் விற்பதைப் பார்த்து
‘அது அத்தியாவசியப் பொருளா இல்லையாவென
யாரிடம் கேட்க’ என்று அலுத்துக்கொள்வார் சிலர்.

’இப்பொழுது உணவுக்கு வழியேயில்லையே’
என்று அழுதிருப்பார் சிலர்.

‘இப்போது கிடைக்கும் உணவு எப்போதும் கிடைத்தால் எத்தனை நன்றாயிருக்கும்’
என்று நினைத்துக்கொள்வார் சிலர்.

இன்னும் ஒரு வாரத்தில் கடையைத் திறந்துவிட லாம் என்று நிம்மதிப் பெருமூச்செறிவார் சிலர்.

திறந்தபின் எதிர்கொள்ளவேண்டியவைகளை எண்ணி வருந்தியிருப்பார் சிலர்.

’இந்த கோர நாட்களில் கவிதையெழுதுதல்
சரியா தவறா’ என்று கேள்வியெழுப்புவார் சிலர்;
குற்றவுணர்வுகொள்வார் சிலர்..

’கட்டாயமாக எழுதவேண்டும்’ என்று
உறுதியெடுத்துக்கொள்வார் சிலர்…..

மனிதவோட்டத்தைக் கட்டுப்படுத்தலாம் தீநுண்மி.
அவர் மனவோட்டப் புதிர்வட்டப்பாதைகள் என்றேனும் தட்டுப்படுமோ அதற்கு?.

Series Navigationதமிழர் புத்தாண்டு சித்திரை முதலா ? தைத் திங்கள் முதலா ?‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *