உதிராதபூக்கள் – அத்தியாயம் 5

author
0 minutes, 11 seconds Read
This entry is part 22 of 22 in the series 8 மார்ச் 2015

இலக்கியா தேன்மொழி

குளிக்க மாட்டான்னு சொன்னதுக்கு பிற்பாடும் மீட் பண்ண கேக்குறானே.. சரியான தராதரம் தெரியாதவனா இருப்பானோ!? என்று தோன்றியது.

இந்த ஆண்கள் ஏன் பெண் என்றால் இத்தனை பாதாலத்திற்கு இறங்குகிறார்கள்? இவனுக்கென்று ஒரு ரசனை இருக்காதா? புடவை கட்டி வந்தால், நாற்றம் அடிப்பது கூடவா உணரமுடியாமல் போகும்? சரி இவனை கல்யாணம் பண்ணிக்கவா போறோம்? என்று தோன்றினாலும், அடுத்த நொடி ‘கல்யாணம் பண்ணிக்க போறவன் இப்படி இருந்தா என்ன பண்றது?’ என்று தோன்றியது. அவனின் சிவந்த முகமும், பச்சை நிறத்தில் ஷேவ் செய்த கன்னங்களும் அடர்ந்த கரிய கேசமும் நினைவுக்கு வந்தது.

பார்க்க அழகாக வசீகரமாக இருக்கிறான். ஆனால், மண்டைக்குள் ஒன்றுமே இல்லையே என்று தோன்றியது. இதற்குள் வினய்யின் ‘யூ தேர்’ குறுஞ்செய்திகள் இரண்டு மூன்று வந்திருந்தன. ஏதும் பதில் சொல்லாமல், டாய்லெட்டில் தண்ணீர் திறந்துவிட்டுவிட்டு, பாத்ரூம் கதவு திறந்து வெளியே வந்தாள்.

சிந்து மொபைலில் ஏதோ கேம் விளையாடிக்கொண்டிருப்பது தெரிந்தது. போய் தானும் அவளருகில் அமர்ந்து கொண்டாள்.

‘ஏன் சிந்து, இந்த ஆம்பளைங்க எல்லாம் ஏன் இப்படி இருக்காங்க?’ என்றாள் கிரிஜா.

‘எப்படி இருக்காங்க?’ என்றாள் சிந்து கேம் விளையாடிக்கொண்டே.

‘பொம்பளைன்னா வந்து விழுறானுங்களே…’ என்று துவங்கி, கொஞ்சம் இடைவெளி விட்டு, ‘ தராதரம் தெரியாம….’ என்று முடித்தாள்.

‘ஆம்பளை ஏன் இப்படி இருக்கான்? மரத்துக்கு புடவையை கட்டினாக்கூட வழியிறான்… பொம்பளை என்ன செய்யணும்? ஆம்பளை எப்படி இருக்கணும்? இதெல்லாம் பாலகுமாரன் காலத்து டயலாக்டீ.. இன்னும் நாம இதை பேசிட்டு இருந்தா, நம்ம வயசுக்கு அசிங்கம்’

‘அப்போ இந்த காலத்து டயலாக் என்ன?’

‘மனசுக்கு புடிச்சிருந்தா, காதலி.. உடம்புக்கு புடிச்சிருந்தா, கூட்டிட்டு போய் ஆண்டு அனுபவி… திரும்பி வந்து கைபடாத ரோஜா மாதிரி சீன் போடு..இதான் இன்னிக்கு ட்ரெண்ட்’

‘ஓஹோ அப்போ முரளி கூடவும் அதானா?’

‘வாழ்க்கையில செக்ஸ் தான் முதலும் கடைசியுமா கிரிஜா?’

‘ஏய் இப்ப நீ தானே டீ சொன்ன.. உடம்புக்கு புடிச்சா ஆண்டு அனுபவின்னு’

‘ஆமா, இந்த காலத்து ட்ரென்ட் கேட்ட. சொன்னேன். அது தான் என்னோட ரூட்டுன்னு எப்போ சொன்னேன்’

‘ஓ.. அப்ப உன் ரூட்டு என்ன?’

‘நாளைக்கு ட்ரென்ட் தான் என்னோட ரூட்’

‘அதென்னா நாளைக்கு ட்ரென்ட்?’

இதுவரையில் மொபைலில் விளையாடிக்கொண்டே பேசிக்கொண்டிருந்த சிந்து, மொபைலை லாக் செய்து படுக்கையில் வைத்துவிட்டு, கிரிஜாவிடம் திரும்பினாள்.

‘டீ… ஒரு காலத்துல இழுத்து போத்திக்கிட்டு போனாங்க.. வேல்யூ சிஸ்டம்ந்னு சொல்லிக்கிட்டாங்க‌. இப்போ,  இன்னிக்கு, இந்த நிமிஷம் வாழுறது முக்கியம்ன்னு எக்ஸிஸ்டென்ஷியலிசம் சொல்லுது.. அந்தந்த நிமிஷத்தை வாழ்ந்துடணும்னு சொல்லுது. இது தான் இந்தக் காலம். அந்தந்த நிமிஷத்துக்காக வாழுறதுதான் இந்தக் காலம்.’

– இலக்கியா தேன்மொழி
(ilakya.thenmozhi@gmail.com)

Series Navigationநெய்தல் – நீர்கொழும்பு வாழ்வும் வளமும்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *