ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம், இறுதிக் காட்சி) அங்கம் -3 பாகம் – 22

This entry is part 14 of 40 in the series 6 மே 2012


ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா
தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா


இந்த உலகில் நாம் பாதுகாக்கப் பட வேண்டிய மனித ஆத்மாக்கள் மிகையாக உள்ளன.  அவரை உய்விக்கச் செய்யும் நமது பணிகள் ஒருபோதும் ஓயமாட்டா ! நமது ஆயுளுக்குப் பிறகு நமது சந்ததிகள் அப்பணியைத் தொடரும். பட்டினி உடம்பில் ஒட்டி இருக்கும் பலவீன ஆத்மாக்கள் பாதுகாக்கப் பட வேண்டிய தில்லை ! முதலில் அவரது பசிப் பிரச்சனை நிரந்தரமாய்த் தீர வேண்டும். அதற்குப் பிறகு பைபிளை அவர் கையில் கொடுக்கலாம். பியர் கம்பெனிப் பணமும், வெடி மருந்துச் சாலை வருவாயும் அவரது வயிற்றை நிரப்பும் உறுதியை நமக்குக் கொடுத்துள்ளது.

பெர்னாட் ஷா (மேஜர் பார்பரா)



மேஜர் பார்பரா நாடகத்தைப் பற்றி :

இந்த நாடகம் ‘ஏழ்மைக் காப்பணிச் சேவகி’ மேஜர் பார்பரா (Major of Salvation Army) வாழ்வில் நேர்ந்த வெற்றி, தோல்வியைப் பற்றியது.  அவள் புரிந்த அரிய சமூகத் தொண்டில் இயற்பாடுக்கும், மெய்ப்பாடுக்கும் (Idealism & Realism) இடையே ஏற்பட்ட ஒரு போராட்டத்தைப் பற்றியது.  அந்தத் தொண்டுக்கு ஆதரவாக நிதி உதவி செய்யும் அவளது இராணுவ ஆயுத உற்பத்தித் தந்தை ஆன்ரூ அண்டர்ஷா·ப்ட் (Andrew Undershaft) மற்றும் பார்பராவை மணக்கப் போகும் கிரேக்கப் பேராசியர் அடால்·பஸ் குஸின்ஸ் (Adolphus Cusins) ஆகியோருடன் பார்பரா போராடுவதை விளக்குவது. “நமது கொடுமைகளில் கோரமானது, குற்றங்களில் கொடூரமானது மானிட ஏழ்மை.  மற்ற தேவை ஒவ்வொன்றையும் நாம் தியாகம் செய்து, நமக்கு முதற் கடமையாக இருக்க வேண்டியது மனிதர் ஏழ்மையை இல்லாமல் நீக்குவதே,” என்று மேஜர் பார்பரா நாடகத்தின் முன்னுரையில் பெர்னாட் ஷா கூறுகிறார்.  மேஜர் பார்பரா நாடகப் படைப்பின் அழுத்தமான குறிக்கோளும் அதுவே.

வறுமையைப் போக்காது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மனித இனம் வெறுக்கத் தக்கது என்று சாடுகிறார் பெர்னாட் ஷா.  ஏழ்மை நீக்கப் பாடுபடும் காப்புப் படைச் சேவகி மேஜர் பார்பராவைச் சமூகம் ஆதரிக்க வேண்டுமா அல்லது அவளை ஒதுக்கி விட வேண்டுமா என்று நம்மைக் கேட்கிறார் பெர்னாட் ஷா !  ஆயுத உற்பத்தியில் கோடிக்கணக்கானப் பணச் சேமிப்பையே மதமாகக் கருதும் அவளது தந்தை, ஏழ்மைக் காப்பணிக்கு நிதி உதவி செய்வது நியாயமா அல்லது தவறா என்ற முரணான ஒரு வினாவை எழுப்புகிறது நாடகம் !  போருக்கு  ஆயுதங்கள் உற்பத்தி செய்து செல்வம் பெருத்து வலுவாக, பாதுகாப்பாக, நலமாக மனித இனம் ஆடம்பரத்தில் வாழ வேண்டுமா அல்லது அன்பு, மதிப்பு, சத்தியம், நியாயம் என்ற அடிப்படை அறநெறியில் எளிமையாக மனிதர் வாழ வேண்டுமா என்று நாடகக் கதா நாயகர் நம்மை எல்லாம் கேட்கிறார்.

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Salvation Army Major) மேஜர் பார்பரா, தனக்குத் தெரியாமல் அவளது கிறித்துவக் குழுவினர், இராணுவ ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் அவளது தந்தையிடமிருந்து நிதிக் கொடை ஏற்றுக் கொண்டதைக் கேட்டுப் பெருங் குழப்பம் அடைகிறாள்.  ஆரம்பத்தில் ஏழ்மைக் காப்பணி ஆயுத வணிகரிட மிருந்து ஏராளமான நிதியைப் சன்மானமாகப் பெற்றுக் கொள்வது முற்றிலும் தவறென்று பார்பரா கருதுகிறாள்.  ஆனால் அப்படி நாடக வாசகர் கருத வேண்டுமென்று பெர்னாட் ஷா விரும்பவில்லை !  அவர் முன்னுரையில் அறக் கட்டளையாளர் நிதிக் கொடையைத் தூய சேமிப்பாளர் மூலம்தான் பெற வேண்டும் என்னும் கருத்து நகைப்புக் குள்ளானது என்று தள்ளி விடுகிறார்.  எந்த வகைச் சேமிப்பாயினும் அற நிலையங்கள் பெற்றுக் கொள்ளும் நிதிக் கொடைகளை மக்கள் நல்வினைகளுக்குப் பயன் படுத்தலாம் என்று பெர்னாட் ஷா ஆதரவு தருகிறார். “பிசாசுவிட மிருந்து கூட நன்கொடையைப் பெற்றுக் கொண்டு கடவுளின் கரங்களில் கொடுக்க வேண்டும்”, என்று ஆலோசனை கூறுகிறார்.  நாடக முடிவில் வறுமையில் வாடுவோர் கைவசம் நிரம்பப் பணம் இருந்தால் பசி, பட்டினியின்றி நிம்மதியாய் வாழ இயலும் என்று மேஜர் பார்பரா அமைதி அடைகிறாள்.

 

மிஸ் பார்பரா பீரங்கி உற்பத்திச் செல்வந்தர் ஆன்ரூவுக்குப் பிறந்த ஓர் பூரணக் குணப் புதல்வி (An Idealistic Daughter).  சல்வேசன் ஆர்மிக்கு மேஜரான (Major in the Salvation Army) பார்பரா தன் தந்தை போன்ற பண முதலைகளுக்கு எதிராகப் போராடுவதில் தீவிரமாக ஈடுபடுபவள்.  அவளை வழிபடும் காதல் ரோமியோ அடால்·பஸ் (Adolphus) ஒரு கிரேக்கப் பேராசிரியர்.  அடால்·பஸின் மோகப் பொழுது போக்கில் பங்கு கொள்ள பார்பராவுக்கு நேரமில்லை,  சல்வேசன் ஆர்மி உறுப்பினர் சிலர் அவளது பணக்காரத் தந்தையிடமிருந்து பெருந் தொகையைச் சன்மானமாகப் பெற்றதை அறிந்து பார்பரா அதிர்ச்சி அடைகிறாள்.

சிந்திக்க வைக்கும் முரணான இத்தகைய பிரச்சனைகளே மேஜர் பார்பராவில் புத்துணர்வோடு இன்பியல் நாடகமாக உருவெடுக்கிறது.  தீப்பறக்கும் தர்க்க வசனங்கள் இங்குமங்கும் மின்னல்போல் அடிக்கின்றன,  பெண்மணி மேஜர் பார்பரா நாடக மேதை ஜார்ஜ் பெர்னாட் ஷா ஆக்கிய உன்னத படைப்புப் தலைவி, உள்ளத்தைத் தொடும் நாயகி என்று ஆங்கில நாடக விமர்சகர் பலர் கூறுகிறார்.  ஆங்கில நாடக உலகிலே சிந்தனையைத் தூண்டும் சமூகச் சேவகி மேஜர் பார்பரா நாடகப் படைப்பைப் போற்றுபவர் பலர் இருக்கிறார் என்பது தெரிய வருகிறது.

**********************

நாடக உறுப்பினர்:

1.  மேஜர் மிஸ். பார்பரா அண்டர்ஷா·ப்ட் (Major Ms. Barbara Undershaft).  ஆன்ரூவின் மூத்த மகள்.

2.  ஆன்ரூ அண்டர்ஷா·ப்ட் (Andrew Undershaft) : இராணுவ ஆயுத உற்பத்தித் தொழிற்சாலையின் அதிபர்.

3.  மேடம் பிரிட்னி அண்டர்ஷா·ப்ட் (Lady Britomart Undershaft) : ஆன்ரூவின் விலக்கப் பட்ட மனைவி (வயது 50)

4.  ஸ்டீ·பன் அண்டர்ஷா·ப்ட் (Stephen Undershaft) (வயது 25) ஆன்ரூவின் இளைய மகன்.

5.  மிஸ். சாரா அண்டர்ஷா·ப்ட் (Ms. Sara Undershaft) : ஆன்ரூவின் இரண்டாவது மகள்.

6.  அடால்·பஸ் குஸின்ஸ் (Adolphus Cusins) : பார்பராவின் காதலன்

7.  சார்லஸ் லோமாக்ஸ் (Charles Lomax) (வயது 35) : சாராவின் காதலன்.

8.  பணியாள் மாரிஸன் (Bulter Morrison) வயது 45

9.  ஓபிரைன் பிரைஸ், ரம்மி மிட்சென்ஸ், ஜென்னி ஹில், பீடர் ஷெர்லி, பில் வாக்கர் – சல்வேசன் ஆர்மியில் உண்டு உறங்கி வந்து போகும் பழைய / புதிய சாவடி வாசிகள்.மிஸிஸ் பெயின்ஸின் வயது 40.

மற்றும் பலர்.

************************

ஏழ்மைக் காப்பணிச் சேவகி
(மேஜர் பார்பரா)

(மூன்றாம் அங்கம், இறுதிக் காட்சி)

அங்கம் – 3 பாகம் – 22


இடம் :  இங்கிலாந்து லண்டன் நகரம்.  மேடம் பிரிட்டினியின் மாளிகை.

நிகழும் ஆண்டு : ஜனவரி 1906மேடம் பிரிட்னி:

நேரம் : அடுத்த நாள் பகற்பொழுது.

 

அரங்க அமைப்பு :  ஆன்ரு அண்டர்ஷா·ப்டின் பீரங்கித் தொழிற்சாலை நகருக்கு வெளியே மிடிலெக்ஸ் குன்றுகளுக்கு இடையில் மறைவாக உள்ளது.  தொழிற்சாலை மிகப் பெரியது;  அதைச் சுற்றிலும் முட்கம்பி வேலி அமைக்கப் பட்டுள்ளது.  இரண்டு புகை போக்கிகளிலிருந்து கரும்புகை மூட்டம் மேலே கிளம்புகிறது.  தொழிற்சாலைச் சக்கரங்கள் போடும் சத்தம் செவியை அடைக்கிறது.  வெடி மருந்து நாற்றம் வாசல் முன்னேயும் வந்து மூக்கைத் துளைக்கிறது.  தொழிற்சாலை முன்பாக உள்ள விரிவான பசுமை முற்றத்தில் பெரிய பீரங்கி வாகனம் ஒன்றில் வானைக் குறிவைத்து நிறுத்தப் பட்டிருக்கிறது.  பார்பரா உயர்ந்த பீடத்தின் மீது நின்று தூரத்தில் உள்ள நகரை நோக்குகிறாள்.  பின்புறம் தொழிற்சாலை உறுமிக் கொண்டிருக்கிறது.  ஸ்டீ·பனும், அடால்பசும் தொழிற்சாலையிலிருந்து வருகிறார்.  அடுத்து ஸாராவும் சார்லசும் வருகிறார்.,  பீரங்கித் தொழிற்சாலை யாருக்கு வாரிசுச் சொத்தாக வேண்டும் என்பதில் தர்க்கம் நிகழ்கிறது.  இறுதியில் பார்பராவை மணக்கப் போகும் அவள் காதலன் அடால்·பஸ் பீரங்கித் தொழிற்சாலைக்கு அதிபதியாக ஒப்புக் கொள்கிறான்.  இறுதியில் பார்பராவும் குடி மது, வெடி மருந்துச் சாலைகளின் வருவாயில் சல்வேசன் அணி பணிபுரிவதை ஏற்றுக் கொள்கிறாள்.  தந்தை அளித்த பீரங்கிச் சாலை வேலையை ஏற்றுக் கொண்டு, அடால்ஃபஸ் பார்பராவைத் திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொள்கிறான்.  மீண்டும் பார்பரா மேஜர் பார்பராவாய்ப் பதவி ஏற்றுத் தன் சல்வேசன் அணியில் முன்போல் உற்சாகமாய்ப் பணிசெய்ய ஈடுபடுகிறாள்.

 

(சென்றவாரத் தொடர்ச்சி)

மேஜர் பார்பரா:  இந்த உலகில் நாம் பாதுகாக்கப் பட வேண்டிய மனித ஆத்மாக்கள் மிகையாக உள்ளன.  அவரை உய்விக்கச் செய்யும் நமது பணிகள் ஒருபோதும் ஓயமாட்டா ! நமது ஆயுளுக்குப் பிறகு நமது சந்ததிகள் அப்பணியைத் தொடரும். பட்டினி உடம்பில் ஒட்டி இருக்கும் பலவீன ஆத்மாக்கள் பாதுகாக்கப் பட வேண்டிய தில்லை ! முதலில் அவரது பசிப் பிரச்சனை நிரந்தரமாய்த் தீர வேண்டும். அதற்குப் பிறகு பைபிளை அவர் கையில் கொடுக்கலாம். பியர் கம்பெனிப் பணமும், வெடி மருந்துச் சாலை வருவாயும் அவரது வயிற்றை நிரப்பும் உறுதி நமக்குக் கொடுத்துள்ளது.  அனுதினமும் உண்டு உறங்கி தமக்குள் சண்டையிட்டு ஊராரைப் பற்றிக் கவலைப் படாதவர் ஆத்மாக்கள்தான் பிறருக்கு உதவி செய்திட வழிகாட்டப் பட வேண்டும்.  அங்குதான் சல்வேசன் அணிக்குப் பணிகள் காத்துக் கொண்டுள்ளன.

அடால்ஃபஸ்:  அப்படி யென்றால் உன் தந்தையின் மரண வெடிச்சாலை நிழலில் நீ நிரந்தரமாய் வாழ முடிவு செய்து விட்டாயா ?

மேஜர் பார்பரா:  ஆமாம் நான் அந்த ஏற்பாடை இப்போது ஏற்றுக் கொள்கிறேன்.  சல்வேசன் அணிக்குப் புத்துயிர் அளித்தவர் என் தந்தை என்பது இப்போது தெளிவாகத் தெரியுது எனக்கு. வறுமை, ஏழ்மை, பட்டினி, பசி, வேலையின்மை, நோய் இவைகளைத்தான் முதலில் நாம் தடுக்கவோ குறைக்கவோ முற்பட வேண்டும்.  (அடால்ஃபஸின் கரங்களைப் பற்றிக் கொண்டு)  என்னை விட்டு நீங்கிய வல்லமை எல்லாம் மீண்டும் வரும் என்று நீ நினைத்தாயா ?  என் உன்னத பணியை எல்லாம் நான் உதறிவிட்டுப் போய் விடுவேன் என்று நீ நம்பினாயா ?  தெருவில் நான் நகர மக்களோடு நடந்து அவர் துயர்களை நீக்க முயன்றதை அவர் மறந்து போவார் என்று நீ கனவு கண்டாயா ?  அவை யெல்லாம் என் வாழ்வில் ஒருபோதும் நடக்காது, நடக்காது, நடக்காது அடால்ஃபஸ் !  என் மனது மீண்டும் எழுச்சி உற்றது இன்று முதல் !  மேஜர் பார்பரா மீண்டும் வந்து விட்டாள் பணிபுரிய பொது மேடைக்கு !

 

அடால்ஃபஸ்:  நாம் இருவரும் கைகோர்த்து ஒன்றாய்ச் சல்வேசன் அணியின் பணியைத் தொடர்வோம்.  அத்துடன் நான் வெடி மருந்துச் சாலையின் புது வேலையை மேற்கொள்ளப் பயிற்சியும் பெறுவேன் உன் தந்தையிடம்.

மேஜர் பார்பரா:  மிக்க மகிழ்ச்சி அடால்ஃபஸ் !  உனக்கோர் உன்னத உத்தியோகம் கிடைத்து விட்டது.  உன்னை நான் மணந்து கொள்கிறேன்.  நான் என் அன்னைக்கு நன்றி கூற வேண்டும். முதலில்.  அடுத்து என் தந்தைக்கு நன்றி கூற வேண்டும்.  இப்போது என் தாயைக் காண வேண்டும் நான்.

மேடம் பிரிட்டினி:  பார்பரா !  தனியாக நீ வேலை செய்ய எப்போது கற்றுக் கொள்வாய் ?  எப்போதும் என்னைத் தேடுகிறாய்.  அது தவறு.

மேஜர் பார்பரா:  அம்மா ! முதலில் எனக்கும், அடால்ஃபசுக்கும் குடியிருக்க ஒரு வீடு அவசியம்.  அதைக் கட்ட ஓரிடத்தைத் தேர்ந்தெடு தாயே !

அடால்ஃபஸ்:  (கைக் கடியாரத்தைப் பார்த்து)  நான் ஓய்வெடுப்பப் போகிறேன், பார்பரா !  காலை 6 மணிக்கு நான் பீரங்கிச் சாலையில் முதன்முதல் கால் வைக்க வேண்டும்.  போகிறேன். (போகிறான்.)  மாலையில் உல்லாசமாய் பொழுது போக்குவோம்.

மேஜர் பார்பரா:  (தந்தை, தாயார் தங்கை ஸாரா முன்பாக)  நான் மீண்டும் மேஜர் பார்பா ஆகிவிட்டேன் !  சல்வேசன் அணி இல்லக் கதவு திறந்துள்ளது எனக்கு.  உள்ளே வாருங்கள்.  அணியில் நின்று அருகில் பாட்டு பாடுங்கள்.  நான் இனியதை முன்னின்று நடத்துவேன்.

(இறுதிக் காட்சி)

மேஜர் பார்பரா நாடகம் முற்றியது

***********************

தகவல் :

Based on The Play : Major Barbara By : George Bernard Shaw, – Penquin Books (Editorial Supervision of Biographer : Dan. H. Laurence) (1960)
(a) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)
(b) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)
(c) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)
(d) The Wicked Wit of Oscar Wilde (1997)
(e) The Great Quotations Compiled By : George Seldes (1967)
(f) DVD Video Classics – Bernard Shaw’s Major Barbara Released in August 2007 (2 Hours)
(g) Major Critical Essays By : Bernard Shaw Penguin Classics (1986)

 

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 3, 2012)

http://jayabarathan.wordpress.com/

Series Navigationபஞ்சதந்திரம் தொடர் 42- அரசனைத் தேர்ந்தெடுத்த பறவைகள்’சாலையோரத்து மரம்’
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

2 Comments

  1. Avatar
    பவள சங்கரி. says:

    அன்பின் திரு ஜெயபாரதன்,

    அழகான மொழிபெயர்ப்பு. நல்ல உயிரோட்டம் ஏற்படுத்தக்கூடிய மொழிபெயர்ப்பு. நன்றி.

    அன்புடன்
    பவள சங்கரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *