கனவு மிருகம்!

1
0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 25 in the series 27 ஏப்ரல் 2014

======ருத்ரா

கனவு மிருகம்
பிசைந்து தின்கிறது.
ரோஜாக்களை கூழாக்கி
பிஞ்சு சூரிய செம்பழத்தை
ரசமாக்கி விழுங்குகிறது.
செம்பவள இதழ் பிழியும்
காலபிழம்பு
இங்கு தாகத்தை
தீயாக்கி தகிக்கிறது.
ஏதோ ஒரு பிசாசு
தன் தொண்டைக்குழியில்
ஓலங்களைக்கூட‌
சிவப்பு மதுவாக்கி
கசிய விடுகிறது.
ஒரு சொல் தானே
சிந்தினாள் அவள்.
அதனுள்
ஓராயிரம் அடுக்குகளை
கருவறைக்கதவுகளாய்
மூடி மூடித்திறந்தன.
சிரிப்பின்
சல்லடைக்குள்
செங்கடலும் நீலக்கடலும்
நிறம் கலந்தன.
என்ன சொன்னாள் அவள்?
அந்தி வானத்தை
முறுக்கித்திருக்கி ஒரு
போதைப்பிழியலில்
போர்த்துகின்றாள்.
தேன் சுளை நாக்கில்
சுருட்டி விரிக்கும்
ஒலிக்கம்பளம்
உணர்த்திய சொல்..
காதல்
என்று இங்கு
பிக்காசோ ஓவியமாய்
பூமியை பிளந்து
பூக்கிறது.
முப்பரிமாணம் புடைத்து
குகையின் குரல் வளை
அதிர்ந்து
அவள் அழைக்கிறாள்.
எங்கிருந்தோ
முனகுகிறாள்.
அந்த மனச்சித்திரம்
எனக்கு
பீஷ்மரின் அம்புப்படுக்கை.
மயிர்க்கால் தோறும்
மயில்தோகை வருடி
கோடிப்பூச்சொரியும்
மனத்துள் ஒரு வெளி
விரித்துப் படர்கின்றாள்.

========================================
அமெரிக்கா அரிஸோனாவில் “ஆண்டிலோப்” கேன்யானில் திருகல் முருகலாய்
ஒரு மணற்பாறைச் சுருள் குகை.
=========================================
ருத்ரா இ.பரமசிவன்

Series Navigation
author

ருத்ரா

Similar Posts

Comments

  1. Avatar
    ருத்ரா says:

    அன்பார்ந்த திண்ணை நண்பர்களுக்கு

    அமெரிக்காவில் அரிஸோனாவில் உள்ள இந்த “ஆண்டிலோப் கேன்யானில்”(சுருள் குகை)நுழைந்து சென்ற அனுபவம் மறக்க முடியாதது. “ஃபன்டாஸ்டிஸ்டிக் வாயேஜ்” என்ற விஞ்ஞான நாவலில் (ஆட்டோ க்ளிமெண்டும் ஜெரோம் பிக்ஸ்பையும் எழுதிய சயன்ஸ் ஃபிக் ஷன் அது)வரும் மனித ரத்தமண்டலமும் குடல் மண்டலமும் குகையாய் மாறியது போல் ஒரு உணர்வு அது.
    based on a story by Otto Klement and Jerome Bixby.[
    அங்கே நீலவானமும் வண்ண வண்ணப்பாறைகளில் இளஞ்சூரியன் (அங்கு உள்ள பனிக்காற்றில் சூரியன் எப்போதும் இளஞ்சூரியனே)ஏற்படுத்தும் ஒளி வண்ணங்களும் அற்புதம்.அந்த அபூர்வ அனுபவம் கவிதையின் கற்பனையில்
    உருவான எழுத்துமண்டலங்களே (காதல் முலாம் பூசிய)இவை.

    அன்புடன்
    ருத்ரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *