Posted in

கவிதைகள்

This entry is part 6 of 11 in the series 5 ஜூலை 2020

திறன் ஆய்வு

அவருடன் அங்கிருந்த நான்

கை குலுக்கவில்லை.

ஆனால் அருகாமையில் நின்று கொண்டு

பார்த்தவாறிருந்தேன்.

அவருக்கு மாறுகண்.

ஒற்றைக் கை. 

மூன்று கால்கள்.

உதய வணக்கம் 

கண்ணுக்கு நல்லது 

என்று 

கிழக்கே பார்த்துக் கும்பிட்டார்.

அது மேற்கே சரிந்த பார்வை போல் 

எனக்கென்னவோ தோன்றிற்று. 


ஒற்றைக் கையைப் பார்த்தபடி 

பெருமிதமாக உரைத்தாராவர்.

‘ஒற்றைக் கைக்கு 

ஏது வலம்? 

ஒற்றைக் கைக்கு 

ஏது இடம் ?

அன்னம் புசிக்க அதுவேதான்.

ஆய் கழுவவும் அதுவேதான்’.

சிரித்தபடியே முன் சென்றார்.

கால்கள்  இரண்டும் 

முன் ஏற 

பின்னால் இழுத்தது 

மூன்றாம்  கால். 

************

உள்ளும் புறமும் 

‘இன்னும் கொஞ்சம் 

சட்டினி போடவா?’

சர்வரின் உபசாரத்தில் 

உள்ளம் குளிர்ந்தது.

‘அவன் கரிசனத்தின் கண் 

உன் டிப்ஸின் மேல்’ என்றது 

கேடு கெட்ட மூளை.

க்ஷணம் 

எனக்கும் 

நிமிர்ந்த நெஞ்சு, 

நேர்கொண்ட பார்வையுடன் 

நடக்க ஆசைதான்.

ஆனால் பாதை முழுக்க 

அரசு  

வெட்டிப் போட்ட பள்ளங்கள்.

விரிந்த அணு 

குறுகத் தரித்த 

குறளை அறிய 

முன்னூறு பக்கக்  

கோனார் நோட்ஸ். 

Series Navigationவெகுண்ட உள்ளங்கள் – 6முக கவசம் அறிவோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *