தாகூரின் கீதப் பாமாலை – 29 கானத்தைப் பாடும் தருணம்

This entry is part 30 of 37 in the series 2 செப்டம்பர் 2012

 

தாகூரின் கீதப் பாமாலை – 29
கானத்தைப் பாடும் தருணம்
மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


தனித்த உரிமையில் கண நேரம்
சந்நதியில்  உன்னருகே அமர்ந்திட
வேண்டுகிறேன் நான்.
கைவச முள்ள எனது வேலைகளை
முடித்துக் கொள்வேன் பிறகு !
கனிந்த நின் திருமுகக் காட்சியைக்
காணாத மறைவுப் புறத்தில்
நடமிடும் வேளை என்னிதயம்
படபடத்துத் தவியாய்த் தவிக்கும்
தன்னிலை மாறி !  அப்போதென்
படைப்புகள் யாவும் சுமக்க முடியாப்
பளுவாய்க் கனக்கும் எனக்கு
கங்கு கரை இல்லாக்
கடற்பாரம் போன்ற
உடல் உழைப்பாய் !

வேனிற் கால வெயில் இன்றென்
வீட்டுப் பலகணி வழியே
பெருமூச் செடுத்துப் புகுந்துள்ளது
முணுமுணுப் புடன் !
மொட்டுகள் மலர்ந்து
பொங்கி விரியும் பூத்தோப்பில்
தேனீக்கள் தேன் எடுக்க
கான ரீங்கார முடன் முனைந் துள்ளன.
இத்தருணம் நின் திருமுகத்தைப்
பூரண அமைதியில் நேராக நோக்கிப்
பூரித்துப் பொங்கிடும்
இந்த ஓய்வு வேளையில்
வந்து விட்டது,
எந்தன் வாழ்வை
அர்ப்பணிக்கப் பாடும்
என்னினிய கானம்.

 

+++++++++++++++++++++++++
பாட்டு : 95 தாகூர் தன் 51 ஆம் வயதில் (ஏப்ரல் 1913) எழுதி, பின்னால்  தாகூரே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கீதாஞ்சலியில் 5 ஆவது கவிதையாய் இணைக்கப் பட்டது.
+++++++++++++++++++++++++

Source

1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] August 27, 2012

Series Navigationஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 35) குற்ற மன்னிப்புமுள்வெளி அத்தியாயம் -24 (விடுபட்டுப் போன அத்தியாயம்)
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *