திரைப்படம்: ஹாங்காங்கின் இரவுகள்

This entry is part 13 of 23 in the series 7 அக்டோபர் 2012

       

ஆண்கள்  மீதான பெண்கள் வன்முறை நகைச்சுவைக்கான் விசயமாகவும், பட்டிமன்ற  கிசுகிசுவிற்காகவும் பயன்படுகிற விசயமாகிவிட்டது. அவ்வகையான் விடயங்களும் , வழக்குகளும் சமீபத்தில் அதிகரித்து வருகின்றன. குடும்ப வன்முறையில் 90 சதம் இந்தியப் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். பாக்கிஸ்தான் போன்ற நாடுகளிலும், முஸ்லீம் நாடுகளிலும் இந்தியாவிற்கு ஒத்த புள்ளி விவரங்கள் உள்ளன. முஸ்லீம்நாடுகளில் ஆண்களின் பாலியல் இச்சைக்கு உடன்படாத குடும்ப்ப் பெண்கள் மீதான குடும்ப வன்முறை உச்சத்தில் இருக்கிறது. பாலியல் வேட்கையை நியாயப்படுத்துகின்றன அவை. இன்னும் சந்தேகத்தன்மையும், ஒத்துவராத குணமும் குடும்பத்தில் பிரச்சினைகளாகி வன்முறை ரூபம் எடுக்கின்றன.கவனித்தும், அனுபவித்தும் கற்றுக் கொள்கிற சமூக புரிதல்  இல்லாமல் போவதால் இது அதிகரிக்கிறது.ஆணாதிக்க மேலாணமையும், அதிகாரமும் உச்ச பட்ச நிலையை இதனால் எட்டுகின்றன.இது தரும் மன் அழுத்தமும், அதன் வடிவான மன நோயும் சாதாரணமாகிவிடுகிறது.வேறொருபுறம் இது குழந்தைகள் மீதாவ வன்முறையாயும் வளர்கிறது. குழந்தைகள் மீதான இந்த வன்முறை ஆண்டுதோறும் 4 மில்லியன் குழந்தைகளைப் பாதிக்கிறது.எழுபதுகளில் முன்னிலைப்படுத்தப்பட்ட பெண்ணிய இயக்கங்கள் இதை ஓரளவு கட்டுப்படுத்தி சட்டநியதிகளை கொண்டு வந்திருக்கிறது.. குடும்பப்பெண்கள், குழந்தைகள் மீதான வண்முறையின் உச்சமாக்  “ நைட் அண்ட் போக்” படம் தென்பட்டது.

 

     நிஜக்கதையொன்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்படம் ‘நைட் அண்ட் போக்’ .   மனைவி, இரு குழந்தைகள் உட்பட ஒரு குடும்பத்தையே கொலை செய்து விடுகிற கணவனின் முரட்டு வாழ்க்கை பற்றியது. முரட்டுத்தனமான கணவர்களின் குறியீடாய் கூட அவன் திகைந்து விடுகிறான். நம்மூர் நிஜ வில்லன்களின் ஒரு பரிமணமாக அந்தக் கணவன் இருக்கிறான்.

        வழக்கமான கணவன்மாராகவே இருக்கிறான். அவனின் முந்தைய திடுமணத்தால் வளர்ந்த பையன் இருக்கிற நிலையில் விவாகரத்து பெற்றவன். மீன் சமையலில் வறுத்தது தவறு. வேக  வைத்திருக்க வேண்டும் என்று  சண்டை போட்டு மனைவியை அடிக்கிறான். பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான பணத்தைக் கட்டாமல் குழந்தைகளுக்கும் சங்கடமளிக்கிறான். மனைவியின் கைகளைக்கட்டி படுக்கையில் கிடத்தி உறவு கொள்வது அவனுக்கு பிடித்தமானதாக இருக்கிறது. அவன் வேலையில்லாதவன் என்பதால் கிடைக்கும் பென்சன் அவனுக்கு இன்னும் பிடித்தமானதாக  இருக்கிறது.  சமூக பாதுகாப்பு  அலவன்சு அவனுக்கு வேலைக்குப் போகும் அவசியத்தை வற்புறுத்துவதில்லை. மனைவி வேலைக்கு போவது அவனுக்கு பிடிக்கவில்லை.பெண்ணாய் பலர் முன் நடமாடுவது அவனுக்கு இன்னும் பிடிக்கவில்லை. மனைவி அடி தாங்காமல் தத்தளிக்கிறாள்.

    பக்கத்துப் போர்ஷன் பெண் காவல்துறை புகார் பற்றி சொல்லிக் கொண்டே இருக்கிறாள். மனைவி நிலைமை மீறும் போது அதையும் செய்து விடுகிறாள். குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்படுகிறார்கள். மனைவி அவளின் சகோதரி வீட்டில் தங்குகிறாள். கணவன் அங்கு வந்து கலாட்டா செய்யவும் குடும்ப அலோசனை  மையத்திற்கு செல்கிறாள். கணவன் அப்பாவியாக தனது சிறு தவறுகளை பெரிதாக்கிவிட்டாள். அவளைப் பொன் போல பார்த்துக் காப்பாற்றுவதாக உறுதிமொழி தருகிறாள்.வீட்டிற்குத் திரும்பிய பின்  வீட்டில் மறுபடியும் கணவனின் ரகளை  அடி உதை. கையில் காயங்களுடன் அவள் மீண்டும் பிரிந்து ஒரு காப்பகத்தில் சேருகிறாள். அங்கிருக்கும் பெண்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருக்கிறார்கள். கிறிஸ்துமஸ் பண்டிகைக் கொண்டாட்டங்கள் காப்பகத்தில் நடக்கின்றது. அவள் சின்ன வயது நினைவுகளில் முழ்கிப் போகிறாள்.

    அவளின் சின்ன வயது அனுபவங்களை அவள் நினைத்துப் பார்க்கவே ரம்மியமாக உணர்கிறாள். ஹாங்காங்கிற்கு வேலை கிடைத்து திரும்புகிறவள் ஒரு தொலைக்காட்சி பெட்டியோடு திரும்புகிறாள். அடுத்த முறை கிராமத்திற்கு வரும்போது தன் கணவனாய் வருகிறவனை அழைத்து வருகிறாள். கிராமத்தில் அவனுக்கு  என்ஜினியர் என்று பெயர். அவளின் ஓட்டு வீட்டை பராமரித்து கட்டிட வேலைகளைச் செய்கிறான்.       ”இன்ஜினியர்” . சாப்பாடு தாமதமாகிறது, தேவையான பணம் இல்லை என்று தெரிகிற போது அவன் வீட்டு நாய் மீது எரிச்சலைக் காட்டி கொல்வது வீட்டில் அனைவர்க்கும் அதிர்ச்சி தருகிறது. மனைவியின் தங்கை மீதும் ஒரு கண் அவனுக்கு. கிராம வாழ்க்கையை மீறி நகரத்தில் வேலை அமைந்து ஆசுவாசம் கொள்கிறாள்.

காப்பகப் பெண்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் இருக்கிறார்கள்.உளவியல் பாதிப்பு கொண்டவர்களாய் நடந்து கொள்கிறார்கள். மனவியாதியின் உச்சத்தில் இருந்து கொண்டு நடமாடுபவர்களும் அங்கு இருக்கிறார்கள். அந்த சூழல் அவளுக்கும்  குழந்தைகளுக்கும் அச்சம் தருவதாக இருக்கிறது. கணவன் வேறு கைபேசியில் தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருக்கிறான். கணவனை நம்பி வீட்டிற்கு வருகிறாள். தன்னை அவமானப்படுத்தியதாக சொல்லி அடிக்கிறான். உச்சமாய் இரு குழந்தைகளையும்  அவளையும் கணவன் கத்தியில் குத்திக் கொல்கிறான். முதல் மனைவி மூலம் பிறந்த மகனை பத்திரிக்கை நிருபர்கள் சூழ்ந்து கொண்டு அப்பா பற்றி கேட்கிறார்கள். “ நான் அவர் மகன் அல்ல” என்கிறார்.

 

   கிராமத்தில் அப்பெண்ணின் அப்பா எல்லா சோகத்தையும் சுமந்தவராக ஓடி விளையாடும் முயலைப் பார்த்தபடி  பீடி குடித்துக் கொண்டிருக்கும் இறுதிக் காட்சியோடு படம் முடிகிறது. படம் முழுக்க இடம் பெற்றிருக்கும் மனைவி மீதான வன்முறை  உச்சமாய் காட்டப்பட்டிருப்பது பதற்றத்திற்குள்ளாக்குகிறது. பெண்கள் மீதான வன்முறை குறித்த ஒரு பிரச்சார இயக்கம் பற்றின ஓர் இடமும்  படத்தில் இடம் பெறுகிறது.

 

    ஹாங்காங் சமூகத்தில் ஆண்களின் ஆதிக்கம் பற்றி வெகு சாதாரணமாகச் சொல்லும் படம் இது. அதே சமயம் கும்பல் வன்முறை என்பது நிலைபெற்றிருக்கிற நகரமும் அது. முதலாளித்துவ பொருளாதாரம் கோலோச்சும் நகரம். இங்கிலாந்திற்கு இணையாக  கல்விமுறை பயிற்சியும் சிறப்பாக இருப்பதாக சொல்லப்படுகிறது. கிழக்கும்  மேற்கும் சந்திக்கும் உலகமாகவும்  பல விதங்களில் அமைந்திருக்கிறது. உலக வியாபார கேந்திரத்தின் ஒரு முக்யமான நகரமாகிவிட்டது. கேளிக்கை நடவடிக்கைகள் மூலம் அந்நகரம் பெறும் வருவாய்  என்பது முக்யமானதாக இருந்து கொண்டு உலக  பணக்கார மக்களை அந்த நகரத்திற்கு விரட்டிக் கொண்டே இருக்கிறது.இப்பட்த்தில் இடம் பெறும் இரவுக்காட்சிகள் ஒரு நகரத்தின் கேளிக்கைப்பரிமாணத்தையும், மறுபுறம் வன்முறையின் முகத்தையும்  நாணயத்தின் இரு பக்கங்கள் போல காட்டுகின்றன.

————————————————————-

  சுப்ரபாரதிமணியன்,8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602

————————————————————-

Series Navigationநடுங்கும் ஒற்றைப்பூமிமொழிவது சுகம்- அக்டோபர் 5 -2012
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *