நனவிடை தோய்தல்: 1983  கறுப்பு ஜூலையும்  ஊடக வாழ்வு அனுபவமும்

author
2 minutes, 25 seconds Read
This entry is part 10 of 11 in the series 25 ஜூலை 2021

 

 

                                                                  முருகபூபதி

 

 

தெரிதலும், தேர்ந்து செயலும், ஒரு தலையாச்

சொல்லலும் வல்லது அமைச்சு

இது திருவள்ளுவர் வாக்கு.  இலங்கையில் திருக்குறள் சிங்கள மொழியிலும் பெயர்க்கப்பட்டிருக்கிறது.  ஆனால், எமது சிங்கள அரசியல் தலைவர்கள் அதனை பொருள் விளங்கிப் படித்தார்களா..? என்பது தெரியவில்லை !

1977 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்தனாவின் அரசு பதவியேற்ற காலப்பகுதியில்தான், அவர் 1906 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி அவர் பிறந்த இல்லத்தில் பின்னாளில் அமைந்த வீரகேசரியில் நிரந்தர ஊழியனாகச் சேர்ந்தேன்.

1977 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் அவரது பதவிக்காலத்தில்தான் 1958 இன்பின்னர்  மற்றும் ஒரு  கலவரம் வந்தது, அதற்குச்  சில மாதங்களுக்கு முன்னர்தான் எனக்கும் தனபாலசிங்கத்திற்கும் வேறு சிலருக்கும்  அங்கே நேர்முகத்தேர்வு நடந்தது.

கலவரம் வந்தமையால் அந்த நேர்முகத் தேர்வின் முடிவும் தாமதமாகியது.  அக்கலவர காலத்தில்தான் ஜே.ஆர்,  “ போர் என்றால் போர்- சமாதானம் என்றால்   சமாதானம்   “  என்று வானொலியில் திருவாய் மலர்ந்தருளி முரசறைந்தார். ஜே.ஆரின்  பதவிக்காலத்தில் அடுத்தடுத்து மூன்று கலவரங்கள் நிகழ்ந்தன.  அந்த ஆண்டுகள் 1977 – 1981 – 1983. இரண்டாவது கலவரம் வந்தபோது வீரகேசரியில் அவர் திருவாய் மலர்ந்தருளும்  கருத்துக்களை செய்தியாக ஒப்புநோக்கநேர்ந்தது.

திருவள்ளுவர் என்ன சொல்கிறார்..?

ஒரு செயலைப்பற்றி பலவழிகளிலும் ஆராய்ந்து அறியவேண்டும். சந்தர்ப்பம் வரும்போது ஆராய்ந்தவாறு செய்யவேண்டும். அதிலும் நன்மை தருவனவற்றையே உறுதியாகச்  சொல்லவேண்டும். இதில் தனது ஆற்றலை வெளிப்படுத்துபவனே சிறந்த அமைச்சனாக இருப்பான்.

ஜே.ஆர். அரசியலில் பழுத்த அனுபவசாலி.  சட்டம் படித்த பரீஸ்டர்.  அமைச்சராக –  ராஜாங்க  அமைச்சராக  – பிரதமராகவிருந்து ஜனாதிபதியானவர்.  அரசியலில் இராஜதந்திரி.

அவர் எதிர்க்கட்சியிலிருந்த காலத்தில் யாழ்ப்பாணம் சென்று ஒரு கூட்டத்தில்பேசும்போது, அவமானப்படுத்தப்பட்டு தாமதிக்காமலேயே தனது காரில்  கொழும்பு திரும்பியவர். நான் நீர்கொழும்பு பிரதேச வீரகேசரி  நிருபராக பணியாற்றிய காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் நடந்த அச்சம்பவம் பற்றி, எங்கள் ஊர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் ஜே.ஆரின். கட்சியைச்சேர்ந்தவருமான டென்ஸில் பெர்னாண்டோவிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.

யாழ்ப்பாணக் கலாசாரம் கந்தபுராணக்கலாசாரம் என்று பண்டிதமணி கணபதிப்பிள்ளை சொல்லியிருக்கிறார். அத்தகைய கலாசாரப்பிடிப்புள்ள வடபுலத்தில் ஒரு  தென்னிலங்கை அரசியல் தலைவரை அவ்வாறு அவமதித்தமை கண்டனத்துக்குரியதுதான்.

அதன் விலையை பின்னாளில் அறுவடை செய்யநேர்ந்தது. அந்த அறுவடைக்காலத்தில் எனது பத்திரிகை உலகப்பிரவேசம்  வீரகேசரிக்குள் நிகழ்ந்தது.

ஜே.ஆரின் மனதில் வஞ்சம் குடியிருந்திருக்கவேண்டும்.  வடபகுதி தமிழ் மக்களுக்கு  பாடம் கற்பிக்கவேண்டும் என்ற எண்ணமும் இருந்திருக்கலாம்.

இலங்கையில் தமிழ் மக்கள்  1977 இல் அனுபவித்த இன்னல்களை சொல்வதற்கு  எமது தமிழ் தலைவர்கள்  இந்தியாவில்  அப்போது எதிரணியிலிருந்த இந்திரகாந்தியிடம்  ஓடினர்.

அதற்கு அவர்,  “ இரண்டு கிழட்டு நரிகளும் என்ன நினைக்கின்றன என்பது தெரியவில்லை.  நீங்கள் பிரதமர் மொரார்ஜி  தேசாயிடம் முறையிடுங்கள்  “ என்று திருப்பியனுப்பினார்.

எமது தமிழ்த்தலைவர்கள் தேசாயிடம் முறையிட்டனர், அவரோ,  “ அது இலங்கையின் உள்நாட்டுப்பிரச்சினை. பேசி தீர்த்துக்கொள்ளுங்கள்  “ என்று கைவிரித்தார்.

போர் என்றால் போர் –  சமாதானம் என்றால் சமாதானம் என்றவரிடம் எதனைத்தான் பேசித்தீர்ப்பது..?

1978 இல் பாரதப்பிரதமர் தேசாய் இலங்கை வந்தார். எதிர்க்கட்சித்தலைவராக இருந்த அமிர்தலிங்கம் அவரை சந்தித்தார். மீண்டும் 1979 இல் தனது மனைவி மங்கையற்கரசியுடன்  அரச விருந்தினராக டில்லிக்குச்சென்றார்.

அங்கு அமிர் தெரிவித்த கருத்துக்கள் ஊடகங்களில் வெளிவந்தன.  இந்தச்செய்திகளையெல்லாம் வீரகேசரியில் ஒப்புநோக்கியிருக்கின்றேன்.

ஏற்கனவே இலங்கை – இந்திய ஒப்பந்தங்கள் பலவற்றை எனது பாடசாலைக்காலத்திலிருந்தே பார்த்து வளர்ந்தமையாலும், சரித்திர பாடம் எனக்கு மிகவும் பிடித்தமானதாலும்,  அந்த ஒப்பந்தங்கள் பற்றி அறிந்திருந்தேன்.

மலையக இந்திய வம்சாவளி மக்கள் தொடர்பான ஶ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தம்,  கச்சதீவை இலங்கைக்கு ஒப்படைக்க இந்திராகாந்தியுடன் ஶ்ரீமா  செய்துகொண்ட ஒப்பந்தம் என்பனவற்றையும்  அறிந்திருந்தமையால், பின்னாளில் வீரகேசரியில் செய்திகளை ஒப்புநோக்கும்போது,  எதிர்காலத்தில் எமது தாயகத்தினுள் இந்தியாவின் தலையீடு தவிர்க்கப்படமுடியாததே என்ற தீர்க்கதரிசனமும் வந்தது.

ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் இருக்கிறது.

 “Experience   without education better than education without Experience “   

அனுபவமற்ற கல்வியை விட, கல்வியற்ற அனுபவமே மேலானது.

கர்மவீரர் காமராஜர் அதற்குச்  சிறந்த உதாரணம்.   பாடசாலைக்கு செல்லும் வாய்ப்பினை சிறுவயதிலேயே இழந்தவர் அவர். எனினும் தமிழ்நாட்டில் ஏழை மாணவர்களின் கல்விக்கண்ணை திறந்தவர்.  அவர் முதலமைச்சராகவிருந்தபோது,  பல்கலைக்கழகங்களில் மாணவர்களை அனுமதிக்கும் திட்டத்தில் அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்காக அவரிடம் வருகிறது. அவர் மிகவும் குறுகிய நேரத்தில் தெரிவுசெய்து அதிகாரிகளிடம் கொடுத்துவிடுகிறார்.

 “ எப்படி  அய்யா இவ்வளவு சீக்கிரம் தேர்வுசெய்தீர்கள்…?  “  என்று அதிகாரிகள் அவரிடம் கேட்டபோது,

 “  இந்த மாணவர்களின் தந்தைமாரின் கையொப்பங்களை பார்த்தேன்.  அவர்கள் அனைவரும் கைநாட்டுத்தான் இட்டுள்ளார்கள். இவர்களின் பிள்ளைகளாவது படித்து நல்ல நிலைக்கு வரட்டும்.  , நான் இந்த விண்ணப்பங்களில் அதனைத்தான் முதலில் பார்த்தேன்  “  என்றார் அந்த தீர்க்கதரிசி.

விருதுநகரில் செக்கிழுத்து எண்ணெய் வடித்து வயிற்றைக்கழுவிய ஏழைக் குடும்பத்திலிருந்து வந்த காமராஜரையும்,  செல்வந்த குடும்பத்திலிருந்து வந்து லண்டன் சென்று பாரீஸ்டர் பட்டம் பெற்றுத்திரும்பிவந்து அரசியல்வாதியாகி, நாட்டின் அதிபராகிய ஜே.ஆர். ஜெயவர்தனாவையும்  அக்காலப்பகுதியில் ஒப்பிட்டுப்பார்த்தேன்.

எழுத்துப்பிழைகளை திருத்தும் ஒப்புநோக்காளராகியபோதே, உலகத்தலைவர்களையும் ஒப்புநோக்குவதற்கும் கற்றுக்கொண்டேன்.

தான் பதவியேற்ற காலப்பகுதியிலேயே  ஒரு இனக்கலவரம் நாட்டில் வந்துவிட்டிருந்தால், அந்த நாட்டின் தலைவர் என்ன செய்திருக்கவேண்டுமோ அதனைச்செய்யத்தவறியதால்,  கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையின் இனப்பிரச்சினை தீர்ந்தபாடாயில்லை.

தேசிய இனப்பிரச்சினையை தீர்க்கவென ஜே.ஆர் காலத்தில்தான் முதலில் மாவட்ட சபை திட்டமும் பின்னர் மாகாணசபை முறைமையும் வந்தன. இறுதியில் ஒரு பிரயோசனமும் இல்லை.

1981 இல் மாவட்ட சபைத்  திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அந்த யோசனையை வரைந்த தந்தை செல்வநாயகத்தின் மருமகனும் பிரபல சட்ட மேதையுமான ஏ. ஜே. வில்சனும் அமைச்சர் தொண்டமானும்,  யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியை போட்டியிட அனுமதிக்கவேண்டாம் என்றுதான் ஜே.ஆருக்கு ஆலோசனை கூறினார்கள்.

இங்குதான்  இந்தப்பத்தியின் தொடக்கத்தில் குறிப்பிட்ட எமது திருவள்ளுவரின் வாக்கை  நினைவுபடுத்தவேண்டியிருக்கிறது.

இந்தியாவில் ஜாகிர் உசேன்,  அப்துல் கலாம் முதலான இஸ்லாமியர்கள் ஜனாதிபதியாக வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால், இலங்கையில் சபாநாயகராக  ஒரு சிறுபான்மை இனத்தவர் வருவதற்கும் சங்கடம் இருக்கிறது.  பாக்கீர்மார்க்காரும் எம். எச். முகம்மதுவும் சொற்ப காலமே சபாநாயகர்களாக இருந்தார்கள்.

இந்நிலையில் ஒரு தமிழர் எவ்வாறு எதிர்க்கட்சித்தலைவராக தொடர்ந்து இருக்கமுடியும் என்ற சிந்தனைதான் பேரினவாதிகளிடத்தில் குடியிருந்தது.  அதன் எதிரொலிகளை அக்காலப்பகுதியில் செவிமடுக்கமுடிந்தது.

யாழ்ப்பாணம் மாவட்ட சபைகளுக்கான தேர்தல்  அறிவிக்கப்பட்டதும், தமது கட்சியின் பிரசாரப்பணிகளுக்காக ஜே.ஆர். அனுப்பிய அமைச்சர்கள் காமினி திஸாநாயக்காவும் சிறில் மத்தியூவும்.  சுமார் 180 சிங்கள் அரசுப்பணியாளர்கள் தேர்தல் ஆணையாளரால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டனர். அத்துடன், யாழ். மாவட்டத்தில் போதியளவு பொலிஸார் இருக்கத்தக்கதாக தென்னிலங்கையிலிருந்து மேலதிகமாக 250 பொலிஸார் சென்றனர்.  இவர்களுடன் பாதுகாப்பு இணை அமைச்சர் வெரபிட்டிய, செயலாளர், மற்றும் பொலிஸ் மா அதிபரும் சென்றனர்.

ஒரு மாவட்டத்தில் நடக்கவிருந்த தேர்தலுக்கு இத்தனைபேர் எதற்காக அனுப்பிவைக்கப்பட்டனர் என்பது மிஸ்டர் தர்மிஸ்டர் ஜே.ஆருக்கே வெளிச்சம்.

 இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கும் மத்தியில்தான் ஜே.ஆரின். அன்றைய அரசை ஆதரித்த வட்டுக்கோட்டை முன்னாள் எம். பி.யான ஆ. தியாகராஜா இளைஞர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

நாச்சிமார் கோவிலடியில் நடந்த தமிழர் விடுதலைக்கூட்டணியின் பிரசாரக்கூட்டத்தில் நான்கு பொலிஸ்காரர்கள் இளைஞர்களின் வேட்டுக்கு பலியாகினர்.

அதன்பிறகு நடந்த அனர்த்தங்கள் பற்றி இலங்கை தமிழர் அரசியல் வரலாற்று ஏடுகள் பதிவுசெய்துள்ளன.

மே 31 ஆம் திகதி,  யாழ்ப்பாணம் பொது நூலகம் பற்றி எரிந்தது.   

யாழ்.பொதுநூலகம் எரிக்கப்பட்டதை  அறிந்த வண.பிதா தாவீதுஅடிகள்  மாரடைப்பால் காலமானார்.  யாழ்ப்பாணத்தில் நாலாதிசையிலும் நடமாடிக்கொண்டிருந்த மிலிட்டரி பொலிஸ்காரர்கள் மக்களை மிரட்டிக் கொண்டிருந்தனர்.

 அவர்களின் நடமாட்டமே மிரட்சியை ஏற்படுத்தியிருந்தது. நூல் நிலையத்தை எரித்தவர்கள்,   யாழ். எம். பி. வெற்றிவேல் யோகேஸ்வரனின் வீட்டையும் ஈழநாடு அலுவலகத்தையும் எரித்திருந்தார்கள்.  யோகேஸ்வரனும் அவரது மனைவி சரோஜினியும் பின்புறத்தால் தப்பி ஓடினர்.  

1981 ஆம் ஆண்டு ஜூன் 01 ஆம் திகதி முற்பகல் எரிந்துகொண்டிருந்த யாழ். பொது நூலகத்தைப்பார்க்கச்சென்றபோது அங்கு மிலிட்டரி பொலிஸார்தான் காவலுக்கு நின்றார்கள்.

 “ இனிமேல் அங்கே எரிப்பதற்கு என்ன இருக்கிறது…? ஏன் இவர்கள் இங்கு காவலுக்கு நிற்கிறார்கள்..?  “ என்று உடன் வந்த மல்லிகை ஜீவாவிடம் கேட்டேன்.

காவலுக்கு நின்ற ஒரு மிலிட்டரி பொலிஸ்காரரிடம் சிங்களத்தில்,  “புவத்பத், புஸ்தகால கறபு வெறத்த குமக்த?” (பத்திரிகைகளும் நூல்நிலையமும் செய்த குற்றம் என்ன? ) என்று சிங்களத்தில் கேட்டேன்.

அந்த மிலிட்டரி  பொலிஸ்காரர் என்னை விநோதமாகப் பார்த்தார்.  யாழ்ப்பாணத்தில் தன்னோடு சிங்களத்தில் பேசும் இவன் யாராகவிருக்கும்  என்ற பார்வை அதில் தெரிந்தது.

 அன்று மாலை உரிய நேரத்திற்கு வரவேண்டிய இரவு தபால் ரயிலும் காங்கேசன்துறையிலிருந்து தாமதமாகவே புறப்பட்டது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவிட்டதால் எனக்கு விடை கொடுத்துவிட்டு ஜீவா அருகிலிருந்த தமது வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

இரவுபத்துமணிக்குத்தான் அந்தமெயில்வண்டி வந்தது. விரல் விட்டு எண்ணத் தக்க பயணிகளுடன்   பதட்டத்துடனும் எனக்கு சிங்களமும் பேசத் தெரியும் என்ற தைரியத்துடனும் அந்தப் பயணத்தை தொடர்ந்தேன். 

யாழ்.பொதுநூலக எரிப்புக்கு கண்டனம் தெரிவித்து                            ஜி. செனவிரத்தின உட்படசில மனிதஉரிமை ஆர்வலர்களுடன் இணைந்து கொழும்பில் புதிய நகரமண்டபத்தில் ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அமிர்தலிங்கமும் பேசுவதாக இருந்தது.  ஏதும்  குழப்பம் நேரலாம் என்று இறுதி நேரத்தில் பொலிசார் இக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை.

அமிர்தலிங்கம் அந்தச்சம்பவத்தை கண்டித்து நாடாளுமன்றில் நிகழ்த்திய உரை மிகவும் முக்கியமானது. அவர் அன்று இவ்வாறு சொன்னார்:

“ இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது, ஹிட்லர் தனது படைகளிடத்தில்,“ மருத்துவமனைகள் நூல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தவேண்டாம்  “ என்று கட்டளை இட்டார். கொடுங்கோலன்  சர்வாதிகாரி எனப் பெயரெடுத்த  ஹிட்லருக்கும் கூட நூல் நிலையத்தின் பெறுமதி தெரிந்திருக்கிறது. ஆனால், இலங்கையில் எமது நாட்டைப்பாதுகாக்கவேண்டிய பொலிஸாருக்கு இந்த அடிப்படை அறிவும் தெரியவில்லை  “

பொலிஸாரின் அடாவடித்தனத்தால், அன்று யாழ். ஈழநாடு பத்திரிகை அலுவலகம் மற்றும் பஸ் நிலையத்திலிருந்த பூபாலசிங்கம் புத்தகசாலை உட்பட  பல கட்டிடங்கள்  எரிந்தன.

அதனைப்பார்க்க யோகர்சுவாமிகள்தான் இல்லை.

இருந்திருப்பின், ஈழநாடு முதல் பிரதி தன்வசம் தரப்பட்டபோது,  எதற்காக,  “ ஏசுவார்கள், எரிப்பார்கள்  “ என்று சொன்னேன்.  எனது நாக்கு கரிநாக்கா..?  “ என்றும் யோசித்திருக்கக்கூடும்.

வில்சனும், தொண்டமானும்  சொன்ன சொல்லை கேளாமல்  எதுவித தீர்க்கதரிசனமுமற்று யாழ். மாவட்ட தேர்தலில் ஐக்கியதேசியக்கட்சியை போட்டியிடவைத்து,  இத்தனை அநர்த்தங்களுக்கும் வித்திட்ட ஜே.ஆர். சர்வதேச அழுத்தங்களினாலும் கூட்டணித்தலைவர்களின் நெருக்குதலினாலும், இறுதியில் யாழ். நூலக எரிப்புக்கு ஒரு கோடி ரூபா இழப்பீடு தருவதற்கு சம்மதித்தார்.

யாழ். எம்.பி. வெற்றிவேல் யோகேஸ்வரனின் வீடு தீக்கிரையாக்கப்பட்டதற்கும்  இழப்பீடு வழங்கப்பட்டது.

நிகழ்ந்த அநர்த்தங்களை விசாரிக்க சர்வதேச ஜூரிமார் சபை நியமிக்கப்பட்டது.  அந்தச்சபை Ethnic Conflict and Violence in Srilanka என்ற தலைப்பில் நீண்ட அறிக்கை தயாரித்து ஜே.ஆரிடம் கொடுத்தது.

அவர் கண்துடைப்பில் பெரிய வித்தகர்.  அதற்கு முன்னர் 1977 இல் நடந்த கலவரம் பற்றியும் சன்சோனி என்ற நீதியரசர் தலைமையில் ஆணைக்குழு வைத்து விசாரித்து அறிக்கை பெற்றவர்.

இழப்பீடுகள், ஜே.ஆரின் குடும்பச்சொத்திலிருந்து வழங்கப்படுவதில்லை. மக்களின் வரிப்பணத்திலிருந்தும் வெளிநாட்டு கடனுதவியிலிருந்தும்தான் வழங்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் பொது நூலக எரிப்புடன், அந்த 1981 ஆம் ஆண்டு கடந்துவிடவில்லை.  அந்த ஆண்டு நடுப்பகுதியில் வடக்கில் பற்றி எரிந்த தீ, படிப்படியாக மேற்கிலங்கையிலும் மலையகத்திலும் பரவியது.

அதற்கு  காலிமுகத்திடலுக்கு முன்பாக பிரிட்டிஷாரின் காலத்தில் அமைந்த நாடாளுமன்றத்தில் அரசு தரப்பு அமைச்சர்களும் எம். பி. க்களும் பேசிய பேச்சுக்கள்தான் பின்னணிக்காரணம்.

முக்கியமாக பாணந்துறை எம். பி. நெவில் பெர்னாண்டோ, அமைச்சர் சிறில் மத்தியூ ஆகியோர் கொண்டு வந்த எதிர்க்கட்சித்தலைவர் அமிர்தலிங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான வாதம்தான்.

அமிரை காலிமுகத்திடலில் கழுவேற்றிக்கொல்லவேண்டும் என்றெல்லாம் பேசினார்கள். விவாதங்கள் இரவு வரையில் தொடர்ந்தன.  அந்தச்செய்திகளை வீரகேசரியில் இரவு நேரப்பணியில்   ஒப்புநோக்கினேன். 

என்னுடன் பணியாற்றிய கனகசிங்கத்தின் குடும்பத்தினர் 1977 இல் கொழும்பு முகத்துவாரத்தில் குடியிருந்தபோது,  சிங்கள இனவாதிகளினால் தாக்கப்பட்டனர். கனகசிங்கத்தின் மனைவி கத்தி வெட்டுக்காயங்களுடன் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டவர்.

இந்தக்குடும்பம், அந்தக்கலவரம் தொடர்பாக விசாரித்த சன்சோனி ஆணைக்குழுவின் முன்பாகத் தோன்றி சாட்சியம் வழங்கியிருக்கிறது.

1981 ஜூலை மாதம் 23 ஆம் திகதி நாடாளுமன்றில் அமிருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத்தீர்மான விவாதம் எத்தகைய விளைவுகளை  ஏற்படுத்தும் என்பதை தெரிந்தோ தெரியாமலோ அதிபர் ஜே.ஆரும், பிரதமர் பிரேமதாசாவும் தமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுதந்திரமாக பேசுவதற்கு அனுமதித்திருந்தனர்.

பிரேமதாசா அன்றைய விவாதத்தின்போது,  வெளியூர் நிகழ்ச்சி ஒன்றை  ஏற்பாடு செய்துகொண்டு, அகன்றுவிட்டார். அதிபர் ஜே.ஆர். நாடாளுமன்றத்திற்கு சிம்மாசனப்பிரசங்கத்திற்கு மாத்திரமே வருவார்.

அந்த விவாதம் 23 ஆம் 24 ஆம் திகதிகளில் தொடர்ந்து நடந்தது. வாய்க்கு வந்தபடி ஆளும்தரப்பு எம்.பி.க்கள் சிலர் பேசினார்கள். எதிரணியிலிருந்த ஏழு சுதந்திரக்கட்சி எம்.பி.க்கள், அதனைக்கண்டித்து அந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்ற அதிகார வரம்பிற்கு உட்பட்டதல்ல எனக்கூறி வெளிநடப்புச்செய்தார்கள்.

அரசு எம்.பி.க்கள் 121 பேர் ஆதரித்து வெற்றிகொண்டனர்.  அமைச்சர் தொண்டமானும் துணை நீதியமைச்சர் ஷெல்டன் ரணராஜாவும் வாக்களிக்க மறுத்தனர்.

இரண்டுபேரும் கண்டி,  செங்கடகல மற்றும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள்.  விஞ்ஞான கைத்தொழில் அமைச்சர் சிறில் மத்தியூவை சுதந்திரமாக பேசவிட்ட ஜே.ஆர், அவரது வரம்புமீறிய பேச்சைக்கேட்டபின்னர், அவரை பதவியிலிருந்து தூக்கினார்.

ஐக்கியதேசியக்கட்சியின் தொழிற்சங்கங்க சம்மேளனத்தின் பெருந் தலைவராகவிளங்கிய பலம்பொருந்தி சக்தியான சிறில் மத்தியூவை முன்னால் விட்டு வீழ்த்திய சாணக்கியர் பிரேமதாசா, தனது எதிர்காலத் தலைமைத்துவத்திற்கான பாதையை செப்பனிடத் தொடங்கிய காலமும் அதுதான்.

இந்த சம்பவங்களின் எதிரொலியாக நிகழ்ந்த தொடர் அநர்த்தம்தான் 1981 ஆம் ஆண்டு கலவரம்.

அந்த ஆண்டு ஜூன் மாதம் யாழ்ப்பாணம் எரிந்தது.  ஜூலை மாதம் இரத்தினபுரி மாவட்டமும் கம்பகா மாவட்டத்தில் எங்கள் ஊரும் எரிந்தது.

இவ்வளவும் நடந்தபின்னர்தான் பொலிஸார் வெளியே வந்தனர்.

பொலிஸை நம்பிப்பிரயோசனம் இல்லை. யாழ்ப்பாணத்தில் தீவைத்தது பொலிஸ்தானே!  ஆனால், எங்கள் ஊரில் அந்தவேலையை பேரினவாதிகளின் ஏவல் சக்திகள் பொறுப்பெடுத்திருந்தன.

எமது ஊரில் 1966 இல் இடைத்தேர்தல் நடந்தபொழுது பாடசாலை மாணவனாக இருந்த நான்,  அந்த இடைத்தேர்தல் பிரசாரக்கூட்டங்களில்தான் பிரதமர் டட்லியையும்,  அதே மேடையில் கல்குடா எம்.பி தேவநாயகத்தையும் வவுனியா எம்.பி. தா.சிவசிதம்பரத்தையும் ஜே.ஆரையும் பார்த்திருக்கின்றேன்.

இவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சியுடன் தேன்நிலவு கொண்டாடிய  ( தேவநாயகம் தவிர்ந்த ) தமிழரசுக்கட்சி எம்.பி.க்கள், அமிர், மற்றும் இரண்டு சிவசிதம்பரங்களும் 1983 அதே ஐக்கிய தேசியக்கட்சியின் பதவிக்காலத்தில் தமிழ்நாட்டில் பாதுகாப்பிற்காக தஞ்சமடைந்தனர். அந்தக்காட்சியையும் 1984 ஆம் ஆண்டு சென்னைசென்றபோது நேரடியாகப் பார்த்தேன்.

அதிபர் ஜே.ஆர், பிரதமர்  பிரேமதாசாவுடன் ஒருநாள் எங்கள் ஊருக்கு வந்து எரிக்கப்பட்ட கடைத் தொகுதிகளை பார்த்தார்.  அத்துடன் தொண்டமான், செல்லச்சாமியுடன் இரத்தினபுரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட  இடங்களையும் சென்று பார்வையிட்டு நிலைமையின் தீவிரத்தை அறிந்தார்.

அன்றும் ஐக்கிய நாடுகள் சபையும் மனித உரிமை அமைப்புகளும் தமிழகத்தில் முதல்வர் எம்.ஜி. ஆரின் அரசும் இந்திய மத்திய அரசும் அழுத்தங்களை பிரயோகித்ததையடுத்து ஜே.ஆர். எதிர்காலத்தில் தனக்கு வரப்போகும் நெருக்கடிகளை உணர்ந்தார்.

அவர் எங்கள் ஊருக்கும் இரத்தினபுரி உள்ளிட்ட மலையகப்பகுதிகளுக்கும் சென்று நேரடியாக அநர்த்தங்களை பார்த்துவிட்டு திரும்பிய பின்னர், தமிழ் மக்கள் செறிந்து வாழும் வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் ஆளும் கட்சியின் நிருவாகக்குழுவின் கூட்டத்தை நடத்திப்பேசிய பேச்சுக்களையும் வீரகேசரியில் ஒப்பு நோக்கநேர்ந்தது.

அதிலிருந்து சில வசனங்கள்:

 “ நான் ஆத்திரத்தில் அல்ல. மனம் நொந்து பேசுகிறேன்.  நாடெங்கும் அண்மையில் நடந்திருக்கும் வெறிச்செயல்கள் நாம் மதித்துப்போற்றிப்பின்பற்றுகின்ற உயர் சமய நெறிகள், நம்மில் சிலரை பண்புள்ள மனிதர்களாக மாற்றவேயில்லை. சில மிருகங்கள் – இதைச்சொல்லவே வெட்கப்படுகின்றேன். அதிலும் நம் கட்சியினர் சிலர் கூட இந்த வன்முறைகளுக்கு காரணமாக இருந்திருக்கின்றனர். எமது எம்.பி.க்கள் நாடாளுமன்றின் உள்ளும் புறமும் பேசிய பொறுப்பற்ற பேச்சுக்கள் நாடெங்கும் கொலை , கொள்ளை, கொள்ளி வைப்பு பாலியல் வன்முறை முதலான கொடுஞ்செயல்களுக்கு  காரணமாகியுள்ளன. ஒரு கட்சிக்கு தலைமை ஏற்றிருக்கும் நான் அது குறித்து பெருமையாக நினைக்கவேண்டும். அந்நிலை இல்லையாயின் நான் எதற்காக அதற்கு தலைவராக இருத்தல்வேண்டும்.  வன்முறைகளை ஏவிவிட்டு, அதன்மூலம்தான் பல இன மக்கள் வாழும் இந்நாட்டில் எழுந்துள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணமுடியும் என்று எவரேனும் கருதினால், அவர்களே வந்து இந்த தலைமைப்பதவியை ஏற்கட்டும்.  நான் ஒதுங்கிக்கொள்கின்றேன். “

அவரது ஆதங்கம் நிரம்பிய உரையை எமது வீரகேசரி அலுவலக நிருபர் எழுதிக்கொண்டு வந்தார். கெமராமேன் படம் எடுத்துக்கொண்டு வந்தார். செய்தி ஆசிரியர் டேவிட் ராஜூ செம்மைப்படுத்தினார்.

அதனை அச்சுக்கோப்பாளர்கள் அச்சுக்கோர்த்தனர். நாம் ஒப்புநோக்கினோம். பத்திரிகை அச்சாகி  தமிழ் மக்களிடம் சென்றது. 

அந்த மக்கள்,  “ ஆகா…. ஜனாதிபதி நல்லவர்தான். அவருக்கு கீழே இருப்பவர்கள்தான் கெட்டவர்கள்  “ என்ற முடிவுக்கு வந்தார்கள்.

ஜே.ஆர். அன்று பேசிய பேச்சு அச்சில் வெளியானாலும், வெள்ளவத்தை கடற்கரைக்கு அருகில்  இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்திலிருந்து நிகழ்த்தப்பட்டமையால், கடல் காற்றோடு இரண்டறக்கலந்து காணாமல் போய்விட்டதோ என்றும் யோசித்தேன்.

இலங்கையில் அடுத்தடுத்து நடந்த கலவரங்களின் அதிஉச்சம்பெற்றதுதான் ஆவணி அமளி என்றும் கறுப்புஜூலை எனவும் சொல்லப்பட்ட கலவரம்.

1958 முதல் நடந்த கலவரங்கள் குறித்து பல நூல்கள், ஆவணங்கள், சிறுகதைகள், நாவல்கள், தொடர்கதைகள் வெளிவந்துவிட்டன.

1958 ஆம் ஆண்டு கலவரம் வந்தபோது நான்குவயது பாலகனாக இருந்த பிரபாகரன், பாணந்துறையில் ஒரு இந்து மத கோயில்  ஐயர் கொதிக்கும் தாரில் எறியப்பட்டு துடிதுடிக்க கொல்லப்பட்ட செய்தியைக்கேட்டு, தனது தந்தையிடம், ஏன் தமிழரை அடிக்கிறார்கள். நாம் திருப்பி அடிக்கமுடியாதா..? எனக்கேட்டதாகவும்  ஒரு செய்தியை பின்னணியாகக்கொண்டு  மேதகு திரைப்படம் வருகிறது.

அந்த மேதகுவின் தீர்க்கதரிசனம் அடிக்கு அடி என்றிருந்தமையாலும்,  அன்றைய இலங்கை அதிபரின் தீர்க்கதரிசனம் அடித்துத்தான் அடக்கவேண்டும் என்று இருந்ததாலும்  1983 கலவரத்தின் ரிஷிமூலம் திருநெல்வேலியில் பரமேஸ்வராச் சந்தியில் அந்த ஆண்டு இதே ஜூலை மாதம் 23 ஆம் திகதி இரவு 13 இராணுவத்தினர் புலிகளின் கண்ணிவெடித்தாக்குதலில் கொல்லப்பட்டதுதான் என்று சில அரசியல் ஆய்வாளர்கள் சொன்னாலும், ஜே.ஆரின் இராஜதந்திரம் அதனை  எவ்வாறு  கையாண்டது என்பது கவனத்திற்குரியது.  

அதற்கு முன்னர் அதே ஆண்டு மே மாதம் 01 ஆம் திகதி, கொழும்பில் நடந்த மக்கள் விடுதலை முன்னணியின் மாபெரும் மேதின எழுச்சிப்பேரணியையும், ஏனைய கட்சிகளுக்கில்லாத பேராதரவில் அந்த இயக்கத்தின் மேதினக்கூட்டத்திற்கு கொழும்பு  நகரசபை மண்டபத்திடலில் திரண்ட மக்களையும் மதிப்பீடு செய்த  ஜே.ஆரின். புலனாய்வாளர்கள் அவருக்குச்சொன்ன செய்திகளையடுத்து, அந்த இயக்கத்தை மீண்டும் தடைசெய்வதற்கான கணக்கினை மனதில் வரைந்தார். அந்த சித்திரத்தை பொறுத்திருந்து ஜூலை மாதம் இறுதியில்  தருணம் பார்த்து  வெளியிட்டார்.

முதல்நாள் ஜூலை 22 இல் கொழும்பில் ஆடிவேல்விழா. 

மறுநாள் 23 ஆம் திகதி சனிக்கிழமை திருநெல்வேலியில் தாக்குதல். அடுத்த நாள் ஞாயிறு போயா தினம் பௌத்தர்கள் சில் அனுட்டிக்கும் நாள். அதிபர் ஜே.ஆரும் சில் அனுட்டித்தார். திங்கட்கிழமை தமிழர்களை கில் ( Kill ) செய்யும் படலம் தொடங்கியது.

கொல்லப்பட்ட  13 இராணுவசிப்பாய்களின் சடலங்களையும் பொறுப்பேற்க இராணுவத்தளபதி யாழ்ப்பாணம் விரைந்தார். அதற்கிடையில் இராணுவத்தினர் பலாலி வீதியில் பல அப்பாவித்தமிழர்களை வீடு புகுந்து சுட்டுக்கொன்றனர்.  அவ்வாறு கொல்லப்பட்டவர்களில்  எழுத்தாளர் கலா. பரமேஸ்வரனும் அவரது மாமனாரும் அடங்குவர். அவர்கள் அன்று ஆடி அமாவாசை விரதம் அனுட்டித்துக் கொண்டிருந்தவேளையில் குடும்பத்தினர் முன்னிலையில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

நிலைமை கட்டுப்பாட்டை மீறுவதை அவதானித்த ஜே.ஆர். தனது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சேபால ஆட்டிகலவிடம், யாழ்ப்பாணத்தில் நிற்கும் இராணுவத்தளபதி திஸ்ஸ வீரதுங்கவிடம்,  “    இராணுவ வீரர்கள் சண்டையில் சாவது பெரிய விடயம் அல்ல. அந்த 13 சடலங்களையும் அங்கேயே புதைத்துவிடச்சொல்லுங்கள் “   என்றுதான் முதலில் சொல்லியிருக்கிறார்.

                 “ சிங்கள வீரர்களை யாழ்ப்பாணத்தில்  புதைப்பது சிங்கள இனப்பெருமைக்கு இழுக்கு. எனவே கொல்லப்பட்டவர்களின் சடலங்களை அவர்களது உறவினர்களிடமே ஒப்படைப்போம் “ என்கிறார் திஸ்ஸ வீரதுங்க.  

இந்த செய்தி ஜே.ஆரிடம் வருகிறது. அவர் முக்கிய பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் கலந்துரையாடுகிறார். 13 ஊர்களுக்கு சடலங்கள் சென்றால் , 13 ஊர்களில் கலவரம் வெடிக்கலாம், அதனால், பொரளை கனத்தை மயானத்திலேயே புதைக்கத்  தீர்மானிக்கின்றனர்.

அன்று ஞாயிற்றுக்கிழமை 24 ஆம் திகதி கனத்தைக்கு சடலங்கள் வந்தன. கொல்லப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர்கள் இறுதிச்சடங்கிற்காக அழைக்கப்பட்டனர்.  அவர்களுடன் கோபக்கனல் கொப்பளிக்க வந்து குவிந்த கும்பல் தனது கைவரிசையை காண்பிக்கத்தொடங்கியது.

கனத்தையில் வந்து நின்று பொலிஸாருக்கு உத்தரவுகளை பிறப்பித்தவர் அன்றைய பொலிஸ்மா அதிபர் ருத்ரா ராஜசிங்கம். கொல்லப்பட்ட இராணுவத்தினருக்கான இறுதி மரியாதை செலுத்த வந்த  பாண்ட் வாத்தியக்குழுவின் தலைவர் மற்றும் ஒரு தமிழ் இராணுவ அதிகாரி ஜோர்ஜ் தேவசகாயம்.

ஜே.ஆரும் வரவிருந்தார். பாதுகாப்புத்தரப்பு அவரை வரவேண்டாம் எனச்சொல்லியிருக்கிறது.

கனத்தையில் தொடங்கிய கலவரம் தலைநகர் எங்கும் தலைவிரித்தாடியது. 

அந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வேலை  முடிந்து நான் வீடு திரும்பிவிட்டேன்.

மறுநாள் திங்கள் எனக்கு விடுமுறை நாள்.  அன்று மாலை தினபதி – சிந்தாமணியில் துணை ஆசிரியராகவும் நாடாளுமன்ற நிருபராகவும் பணியாற்றிய எனது நண்பர் செல்வரத்தினம் கொழும்பிலிருந்து விரைந்து வருகிறார்.  நேரே தனது வீடு செல்லாமல் என்னிடம் வந்து கொழும்பில் அன்று கண்ட காட்சிகளை பதற்றத்துடன் விபரிக்கிறார்.

நாளை முதல் வேலைக்குச்செல்லவேண்டாம் என்றார்.

அன்று முதல் பல நாட்கள் வீரகேசரியும் வெளிவரவில்லை.

ஜே.ஆரின் இராஜதந்திர மூலை , அந்தக்கலவரத்தை தூண்டியவர்கள் மக்கள் விடுதலை முன்னணியினரும் மற்றும் இடதுசாரிக்கட்சியினரும்தான் என்று பெரிய அபாண்டத்தை சுமத்தி அவற்றை தடைசெய்யும் உத்தரவை பிறப்பித்தது.

அதன்பின்னர் நடந்த சம்பவங்கள் வரலாற்று ஏடுகளில் தெளிவாக பதிவுசெய்யப்பட்டுள்ளன.

எங்கள் வீரகேசரி பிரதம ஆசிரியர் க. சிவப்பிரகாசம், தினகரன் பிரதம ஆசிரியர் ஆர். சிவகுருநாதன் ஆகியோரின் வெள்ளவத்தை வீடுகளும் தாக்கப்பட்டன.

அவர்களின் சேகரிப்பிலிருந்த பெருந்தொகையான நூல்கள் எரிக்கப்பட்டன. சிவகுருநாதன் தனது முதுமானிப்பட்டத்திற்காக பல இரவுகள் கண்விழித்திருந்து எழுதிய ஆய்வேடு உட்பட பல ஆவணங்களை தீ அரக்கன் அழித்தான்.

பின்னாளில் அவர் அந்த   அமளியின்பொழுது   தான்  அனுபவித்த   கொடுந்துயர்   பற்றி  விரிவாக  எழுதுகிறார்.     அமைதியாகவிருந்து  எழுத                வீடுவாசலில்லை.  உடுக்க  உடையில்லை. நான்  படித்த  நூல்களில்லை. சிறுபராயத்திலிருந்தே  சேர்த்துவந்த  சுமார்  ஐயாயிரம்  நூற்  பிரதிகளுக்கு  மேல்  இன்றில்லை.   நான்  எழுதிய  பேனாவே             இல்லையென்றால்   என்  நிலை  என்ன?  நடுத்தெரு                           நாராயணனாக  ஒரு  சில  மணிநேரத்துக்குள்   என்னை  ஆக்கிவிட்டார்கள்   அந்தக்குண்டர்கள்.  தியாகப்பிரம்மத்தின்  சமாதியில்  நல்லை  ஆதினகர்த்தா  ஸ்ரீலஸ்ரீ   சுவாமிநாதத்தம்பிரான்  பூஜை  செய்து  எமது  மகளுக்குத்தந்த  ருத்ர வீணையை  காடையர்கள்  முறித்து   குப்பையில்                           போட்டிருந்தார்கள்.’ என்று  எழுதுகிறார். 

 
 கொழும்பில் ஏற்பட்ட அழிவுகள் உயிர்ச்சேதம் பற்றி புதிதாக ஒன்றும் இங்கே பதிவுசெய்யவேண்டியதில்லை. வீரகேசரியின் ஊழியர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பலர் அகதி முகாம்களிலும் சிலர் பாதுகாப்பான வீடுகளிலும் இடங்களிலும் முடங்கினர்.  சிவப்பிரகாசம் அவர்களது வீடும் காரும் சேதமானது.
 அந்த இனசங்காரம் பற்றியும் அவர் ஆங்கிலத்தில் ஒரு நூல் எழுதியிருக்கிறார். தனதும்  குடும்பத்தினரதும் எதிர்காலம் பற்றி அவர் தீவிரமாக சிந்தித்திருக்கவேண்டும். 1983 பலருக்கும் எதிர்காலம் பற்றிய கேள்விக்குறியை முன்வைத்தது.
  அவரும் தமது குடும்பத்தினருடன் வெளிநாட்டுக்கு புலம்பெயரநேரிட்டது.

எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் தனது அனுபவங்களை நாங்கள் பாவிகளாக இருக்கிறோம் அல்லது 1983 என்ற நாவலாக படைத்துள்ளார்.

எழுத்தாளர் அருளர் 1958 கலவரம் பற்றி லங்கா ராணி என்ற நாவலை எழுதியுள்ளார். வ. ந. கிரிதரன் 1983 கலவரத்தின் பின்னணியில்  குடிவரவாளன் என்ற நாவலை வரவாக்கியுள்ளார்.

நேற்றை செய்திகள் வரலாறுகளாகவும் படைப்பிலக்கியங்களாகவும் பதிவாகிக்கொண்டிருக்கின்றன.

முப்பத்தி எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த இக் கலவர  காலத்தின்போது பிறந்த குழந்தைகளுக்கும்,  அதன்பின்னர் பிறந்தவர்களுக்கும்   இவைதான் எமது தேசத்தின் வரலாறாக விளங்கப்போகிறது.

சிங்கள இனவாத தீயசக்திகள்  தமிழருக்கு எதிராக தாக்குதல்  நடத்தின.  தமிழ் விடுதலை இயக்கங்கள்  சிங்கள இராணுவத்திற்கு எதிராக தாக்குதல் நடத்தின. 

 தற்போது கண்ணுக்குத் தெரியாத எதிரிகளான  கொரோனோவுடனும் டெல்டாவுடனும்  இலங்கையில் மூவின மக்களும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

letchumananm@gmail.com

 

 

Series Navigationஅறிவும் ஆற்றலும், துணிவும் மிகுந்த  மைதிலி சிவராமன் ஓர் அரிய பெண்மணிகவிதையும் ரசனையும் – 19
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *