நவ-28. அய்க்கூ வல்லுநர் மாட்சு பாட்சோ பிறந்த தினக் கவிதை

This entry is part 23 of 23 in the series 27 நவம்பர் 2016

ப.கண்ணன்சேகர்

காய்ச்சியப் பாலை கற்கண்டு சுவையென
கவிதையின் வடிவில் காட்டிய பாட்சோ!
காலம் தோறும் கலையாது நிற்கும்
கடுகின் காரம் கவியின் வீச்சோ!

அய்க்கூ கவியின் ஆசான் எனவே
அவனியில் படைத்தார் அய்காய் வடிவம்!
பொய்த்துப் போகா புதுமை நிலையில்
பொலிவென நிற்கும் பொன்னிற படிவம்!

காணும் உலகின் கற்பனை யாவும்
கவிதை யாக்கி கலந்தார் மூன்றடி!
தேனும் பாலாய் தெவிட்டா ருசியென
தெளிந்திட தந்தார் தரணியில் முறைப்படி!

தமிழினில் ஔவை தந்திட்ட அய்க்கூ
தரணிக்கு முதலாய் தரமென ஆத்திச்சூடி
அமிழ்தென இனிக்கும் அய்யன் குறளும்
அன்றே தந்தார் அவனிக்கு கோடி!

உப்பு சேர்த்த உணவின் சுவையென
உலகம் களித்திட அய்க்கூ தொகுப்பு!
சப்பான் நாட்டில் ஜெனித்த கவிஞனின்
ஜெகமே புகழும் சரித்திர படைப்பு!

மூன்றாம் பிறைக்குள் மூடிய நிலவென
மூவடி வரிக்குள் மூலத்தைக் காட்டிடும்!
தோன்றி மறைந்த தூயவன் பாட்சோ
தொடர்ந்த பணியை தொலையாது காப்போம்!

-ப.கண்ணன்சேகர், திமிரி.
வேலூர் மாவட்டம். பேச 9698890108.

Series Navigationபகற்கனவு

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *