Posted in

நாட்டுப்புற பாடல் – இனிக்க சேதிகொண்டு வருவேனுங்க

This entry is part 3 of 17 in the series 9 அக்டோபர் 2022

 

தலைப்பு:- இனிக்க சேதிகொண்டு வருவேனுங்க

பெ.விண்ணக வேளாங்கன்னி வின்சி

பந்தியில எல விரிக்கயில
முந்தியத்தா மெல்ல இழுத்தவரே
எந்திரிச்சு நாந்தே போகனுமே
மந்திரிச்ச போல இருக்குறீங்களே

முந்திரி தோப்புக்கு வரசொன்னீங்க
தந்திரமா நீங்க பேசுறீங்க
சொதந்திரமா ஏதோ எதிர்ப்பாக்குறீங்க
சுந்தரினு வழிஞ்சியே திட்டம்போடுறீங்க

தாலி ஒன்னு கட்டுமுன்னே
தப்பியும் கைய புடிக்காதீங்க!
ஊருசனம் உச்சி கொட்டும்
சாதிசனம் சாக்காவச்சு பேசும்!

மானமுள்ள பொண்ணு என்ன
மறவா நின்னு பாத்திட்டீங்க
மானமும் உசிரும் எனக்கொன்னுதான்
மறந்துடுங்க! மறதிபோல மறச்சிடுங்க!

பால்குடி மறவாதவதானு சொன்னீங்க
பச்சமாவிள தோரணமே கட்டிப்புட்டீங்க
பந்தாவாதான் பலபேர்முன் கூப்பிடுறீங்க
பச்சபுள்ளெங்கிட்டீயே பத்துபுள்ள கேட்குறீங்க!

சோறு கொடுக்க வந்தேனுங்க
சொகத்த தேடி யோசிக்கிறீங்க
பட்டுனு வளச்சி புடிக்கிறீங்க
பட்டுபாவடதாவணி கசங்க
விடமாட்டேங்க!

பசியோடு இருக்குற ஒங்களுக்கு
ருசியா பலகாரம் தாரேனுங்க
பவித்திரமான என்னயும் நீங்க
பறித்து தின்னயிப்போ வேணாமுங்க!

கனவொன்னு கண்ணுல இருக்குதுங்க
காரியமாகி அதுவும் பலிக்கட்டுங்க
கட்டிலு காத மூடிக்குங்க
தொட்டில புள்ள அழுவும்பாருங்க!

இப்போ கொஞ்சம் பொறுங்க
இதமா முத்தமட்டும் தந்துட்டுபோங்க
இதோட இங்கருந்தே போயிடுறேனுங்க
இனிக்க சேதிகொண்டு வருவேனுங்க

-நாட்டுப்புற பாடல்
பெ.விண்ணக வேளாங்கன்னி வின்சி🌷.

திருவண்ணாமலை மாவட்டம் .மற்றும் கர்நாடகா பெங்களூரு.

Series Navigationஸ்ரீரங்கம் பூங்கா !    வைதீஸ்வரனின் ஆவணப்படம்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *