பெருந்தொற்றின் காலத்தில்

This entry is part 18 of 21 in the series 2 ஆகஸ்ட் 2020

கு.அழகர்சாமி

(1)

ஊரடங்கி

நடமாட்டமில்லாமல்

வீதி-

இருபுற வீடுகளிடையே

திடநதியாய் ஓடி

சுவடுகள் பதியாது

விலாசமிழந்து

நிசப்தம்

சப்திக்க நடக்க

நீட்டித் தலைக்கு

வெளியை வைத்து உறங்கி-

(2)

நாளும்

நடந்து-

நன்கு தெரியும் என்னை

அதற்கு –

ஆனால் தெரியாதது போல்

கடக்கிறது  என்னை

வெறிச்சோடிய

வீதி

(3)

வெளியே

நடை செல்ல முடியாமல்-

ஒற்றைத் தென்னை

உரைக்கும்:

நிற்கிற அதே இடத்திலேயே நட

என்னைப் போல்-

வெளியே

உன்னைச் சுற்றி-

(4)

தனித்து-

தினம் தினம்

தென்னையும்

நானும்-

பேசியது

ஞாபகமில்லாமல்-

பேசாதது

ஞாபகமாய்-

(5)

விலகி

அறைக்குள் தனித்து

நான் –

அறையை விட்டு

வெளியேறி

வீடு-

(6)

சிநேகிதர்

பேச வந்தார்

அவரும் நானும்

முகக் கவசத்தோடு-

தொற்றின்

கவனத்தில்-

பேசிய பேச்சில்

இடைவெளி கூடி-

பேசா மெளனத்தில்

இடைவெளி குறுகி-

(7)

திடுக்கிட்டு

ஓர் இலை

விழ-

தன் தொலை ஊருக்கு

அடிநிலம் பற்றி எரிய நெடுநடை ஏகி

அயர்ந்து வழியில் தண்டவாளத்தில் இராவில்

உறங்கி

இரயிலேறிச் சிதைந்த புலம் பெயர்ந்தவனின்

முகமெனக் கண்டு-

நடுக்குற்று

நான்.

(8)

தொற்றின்

பீதி-

சிநேகிதனின் சாவுக்குச்

செல்லவில்லை.

சிநேகிதன்

இறந்தும்

இறக்காமல்-

நான்

இறக்காமலும்

இறந்து-

நினைக்கும்

போதெல்லாம்-

(9)

தினம்

கூடிக்-

கூடும்

சாவுகளை

எண்ணிக்கையாய்க் கேட்டு

வாசித்து-

இனி சாவுகள்

அதிர்ச்சியாயில்லாமல் போய் விடுமோ

என் சாவைத் தவிர

எனக்கு

என்றோர்

அச்சம்.

(10)

வேறெங்கு

போக?

வீட்டுக்குள்

எவ்வளவு தொலைவு நடக்க?

உட்கார்ந்த இடத்திலேயே

எவ்வளவு நேரம் கடக்க?

வானில் திரியும் பறவைகளோடு மனம்

சுற்றித் திரிந்து-

ஆதவன் சாய

அறிவிக்க மாலையைப் பறவைகள்-

இன்னொரு மாலையாய் இல்லை

அது.

வீடு திரும்புபவை பறவைகளாக மட்டும் இருக்க

வீடு  திரும்புகிறேன் பறவைகளோடு

வீட்டிலிருந்தபடியே

யான்.

Series Navigationகோவை ஞானியும் நிகழும் கவிதையும்முருகபூபதி எழுதிய இலங்கையில் பாரதி ஆய்வு நூல் – நூல் நயப்புரை
author

கு.அழகர்சாமி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *