This entry is part 5 of 46 in the series 5 ஜூன் 2011

திருக்குவளை தீயசக்தி கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம், புதிய கட்டுமானங்கள் என்ற போர்வையில் தமிழகம் முழுவதும் நூற்றுக் கணக்கான இந்துக் கோயில்கள் இடித்துத் தரை மட்டமாக்கப்பட்ட வரலாறு பலருக்கும் தெரிந்ததே. இத்தகைய பாதகச் செயலைச் செய்ய, கருணாநிதியின் வஞ்சக மனம் விக்கிரக வெறுப்பாளர்களான தீவிர இஸ்லாமியர்களையும், புராடெஸ்டெண்ட் தீவிர கிறிஸ்தவர்களையுமே தேர்ந்தெடுத்ததில் ஆச்சரியம் இல்லை.

ஆக்கிரமிப்பாக இருந்தாலுமே, கோயில்களிலுள்ள விக்கிரகங்களைப் பாதுகாப்பான வேறு இடத்துக்கு மாற்றிய பின்னரே அக்கோயில்கள் அகற்றப்படலாம் என்ற உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை ஆருர் ஔரங்கசீப் என்றுமே பின்பற்றியதில்லை.

இந்து வெறுப்பாளர் கருணாநிதியின் இத்தகைய கொடும் செயல்களை எதிர்த்துப் போராடியிருக்க வேண்டிய தமிழக இந்து அமைப்புகள், ஒரு சில இடங்களில் மட்டுமே பெயரளவில் சிறிய போராட்டங்களை நடத்தின. கருணாநிதியின் அடிப்பொடியான இல. கணேசன், கருணாநிதிக்கு எதிராக இந்து அமைப்புகள் எதையும் செய்து விடாமல் பார்த்துக் கொண்டார்.

ஆரூர் ஔரங்கசீப்பால் புதிய சட்டசபை வளாகம் என்ற பெயரில் ஓர் அரக்கு மாளிகை எழுப்பட்டபோது, அந்த இடத்தில் மக்கள் வழிபட்டுக் கொண்டிருந்த இயற்கை விநாயகர் கோயிலும், இஷ்ட லிங்கேஸ்வரர் கோயிலும் இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டன. அக்கோயில்களில் இருந்த விநாயகர் சிலையும், சிவலிங்கமும் என்ன செய்யப்பட்டன என்பது பற்றி எவரும் கேள்வி எழுப்பவும் இல்லை; கருணாநிதி பதில் சொல்லவும் இல்லை. கோபாலபுரத்திலும், சி.ஐ.டி. காலனியிலும் அவை இன்னமும் படிக்கட்டுகளாகப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கலாம்.

புதிய வளாகத்திலுள்ள கட்டிடங்களைச் செம்மொழி நூலகமாகவோ அல்லது அரசினர் மருத்துவமனையாகவோ மாற்றும் திட்டம் ஆளும் அ.தி.மு.க.வுக்கு இருப்பதாகத் தெரிகிறது. அது எப்படி இருந்தாலும், ஆரூர் ஔரங்கசீப்பினால் இடித்துத் தரை மட்டமாக்கப்பட்ட இயற்கை விநாயகர் ஆலயமும், இஷ்ட லிங்கேஸ்வரர் கோயிலும் அதே வளாகத்தில் மீண்டும் கட்டப்பட்டு விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும்.

 

Series Navigationஇடைசெவல்சத்யானந்தனின் பிற படைப்புக்களுக்கான இணைப்பு