This entry is part 9 of 32 in the series 24 ஜூலை 2011

இறுக்கங்களுடன்
பயணித்து வந்தேன்.
எப்படி இறுக்கம்
தூர்ப்பதென அறியாமல்.
வினைகளை அற்று
வீழ விரும்பினேன்.
வகிர்ந்து வகிர்ந்து
வார்த்தைகளைத் தூவினாய்.
அதைப்பிடித்துக்
கொடியாக வளர்ந்தேன்.
அவரை கொடிபிடித்து
மேகம் துளைத்துப்
பாதை அமைத்ததாய்
இன்னொரு உலகம்
இழுத்துச் சென்றாய்
வானவில்லைப் பற்றி
நடனமாடியபடி வந்தேன்.
சித்திரக் குள்ளர்களும்
பழச்சோலையும்
நி்றைந்திருந்தது.
மாயாவிகளும்
கௌபாய்களும் ததும்பிய
கேளிக்கை அரங்குகள்.
பார்த்திபனின் கனவை
குகை ஓவியமாக
களித்தபடி தீப்பந்தத்தில்.
மூலிகைக் காற்றோடு
ஓசோனை சுவைக்கத்
தந்தாய் அமிர்தமாய்.
மூச்சு முட்டத்
தும்மிய போது
பஞ்சு வெடித்தது.
இலவத்தைப்போல
பறந்தபடி வந்தேன்
இன்னொரு விதை சுமந்து.

Series Navigationவாய்ப்பு:-விசித்திர சேர்க்கை