Posted in

அழிவும் உருவாக்கமும்

This entry is part 36 of 48 in the series 11 டிசம்பர் 2011

கணேஷ்

நானூறு மெல்லிய கதிர்கள்
ஒருங்கிணைந்து
ஒற்றைக்கதிரானது.
திண்மை பெருகி
ஒளியின் உக்கிரம்
ஆயிரம் மடங்கானது.

நேர்க்கோட்டில் பயணித்தது கதிர்.
எதிர்வந்த திடப் பொருள்கள்
கிழிந்தன.
திரவப்பொருள்கள்
கொதித்தன.
ஏழைச்சுவர் ஒன்று
அதன் பாதையில் வந்தது.
சுவர் செங்குத்தாக
இரண்டு பட்டது.
சுவர் உடைந்ததில்
செங்கல் துகளோன்று
மண்ணில் வீழ்ந்தது.

சில நூறு வருடங்களில்
சுவரிருந்த இடத்தில்
ஆறொன்று ஓடத்துவங்கியது.
ஆற்று நீரின் அரிப்பில்
இரண்டாக உடைந்திருந்த சுவர்
முழுதும் அரிக்கப்பட்டு
அடித்துச்செல்லப்பட்டது.
செங்கல் துகள் மட்டும்
அரிப்புக்குள்ளாகாமல்
நீரால்
தள்ளிக்கொண்டு போகாமல்
தரையை இறுக்க பற்றிக்கொண்டு ஜீவித்திருந்தது.
தனிமைப்பட்டுப்போன துகளின்
வாழ்க்கை போல
ஆறும் ஒருநாள் வறண்டு போனது.
ஆறோடிய படுகை
பாலை போலானது.
நீர்த்தாவரங்களெல்லாம்
வாடி கருகின.
காட்டுப்பகுதியில்
எழுந்த தீயில்
வாடிய நீர்த்தாவரங்களும்
எரிந்து
ஒற்றை செங்கல்துகள்
நீறு பூத்தது.

அண்டவெளியிலிருந்து
இறங்கிய கதிர்க்கோடொன்று
சுவரிருந்த ஆற்றுபகுதியை
தாக்கியபோது
நீறு பூத்த துகள்
தீயாகி
பின்னர் துணை அணு
ரூபங்கொண்டு
கதிர்க்கோட்டின்
அங்கமானது.

ஒளி வடிவில்
புனர்ஜென்மம் பெற்ற
முன்னாள் செங்கல் துகள்
சென்றபாதையில்
தென்பட்டவற்றையெல்லாம் –
சில ஏழைச்சுவர்களையும் சேர்த்து –
கருக்கி, பஸ்மமாக்கி
காற்றின் வேகத்தில்
விரைந்தது.

Series Navigationவிருப்பங்கள்பார்வையின் மறுபக்கம்….!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *