This entry is part 12 of 33 in the series 27 மே 2012

எரிந்த சாம்பலில்
எஞ்சியவர்கள் நீங்கள்

குற்றுயிரும் கொலையுயிருமாய்
குவிக்கப்பட்ட குவியலிலிருந்து
கொஞ்சமாய்
உயிர்த்தவர்கள் நீங்கள்

நந்திக் கடலேரியில்
நாதியற்றவர்களாய்
மிதந்தவர்களின் மிச்சம்
நீங்கள்

முள்ளிவாய்க்காலில்
உங்களின் குருதியாறு பாய
கொட்டும் குண்டுகளோடு
தீக்குளித்தேறியவர்கள்
நீங்கள்

உற்றாரை
பற்றிய கைகளோடு
பறிகொடுத்தவர்கள் நீங்கள்

நின்ற இடத்தில்
கால்களை விட்டுவிட்டு
நினைக்கா ஓரிடத்தில்
இழுத்துப் போடப்பட்டவர்கள் நீங்கள்

ஆலாயிருந்து
அலைத் துரும்பாய்
அடித்துப் போடப்பட்டவர்கள் நீங்கள்

நாற்பதாயிரம்
இறந்த உடல்களுக்கு மேல்
எழுந்து நிற்கிறீர்கள்
நீங்கள்

உடற்குறையும் மனக்குறையும்
உங்களுக்கு மட்டுமல்ல
தமிழை
உச்சரிக்கும் ஒவ்வொருக்கும்

பெற்றோர்களை
பெற்ற பிள்ளைகளை
அண்ணன் அக்கா
அன்புறவுகளை இழந்து

இழந்தவர்களுக்காக இன்றைக்கு
ஏற்றுகிறீர்கள் தீபங்கள்

இனத்தையே கொளுத்தியவன் முன்
இன்னும்
இருக்கிறோமென்று

தன்
இருப்பை
நெருப்பாய்

ஏற்றுகிறீர்கள் தீபங்கள்

உங்கள்
கண்ணீரில் எரிகின்றன
கண்களின் தீபங்கள்

அழுது அணைந்திடாமல்
அழுதும் எரிகின்றன
தீபந்தங்களாய்

உங்கள்
விழிகளில்
விடுதலை வேட்கை தீ

பட்டுக்கோட்டை தமிழ்மதி
thamathi@gmail.com

Series Navigationமேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 3உட்சுவரின் மௌன நிழல்…