Posted in

ஊறுகாய் பாட்டில்

This entry is part 7 of 16 in the series 16 ஆகஸ்ட் 2015

சோழகக்கொண்டல்

ஊறுகாய் பாட்டிலின்

அடிப்புறத்தில் எப்போதும்

தன் கையொப்பமிட்ட கடிதத்தை

வைத்து அனுப்பிவிடுகிறது வீடு

 

மூடித்திறக்கும் ஒவ்வொருமுறையும்

வெளிக்கிளம்பி அறையெங்கும்

தன் நினைவை ருசியை

ஊறச்செய்தபடி இருக்கும்

 

அரைக்கரண்டி ஊறுகாய்க்கு ஒருமுறை என

முந்நூறு மணி அடித்ததும்

தரைதட்டுகிறது கரண்டி

தானே திறந்துகொள்கிறது கடிதம்

 

பின்பு யாருடைய உத்தரவுக்கும் காத்திருக்காமல்

ஒருங்கமைகிறது அறை

சலவையாகின்றன சட்டைகள்

எங்கிருந்தோ வந்துசேர்கிறது பணம்

சேகரமாகின்றன மிட்டாய்கள்

 

சிக்கனவிலை பயணச்சீட்டுகள் அச்சாகி

மேசைமேல் கிடக்கின்றன

காவிரியில் குளிக்கப்போய்விடுகிறது மனது

 

வீடுதிரும்புகிறது மீண்டும்

கழுவி துடைக்கப்பட்ட

ஊறுகாய் பாட்டில்.

Series NavigationJawaharlal Nehru’s biography retold in rhyming coupletsதிரை விமர்சனம் வாலு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *