Posted in

அறிவியற்பா: பொருண்மையீர்ப்பு அலைகள்!

This entry is part 4 of 18 in the series 14 பெப்ருவரி 2016

இரா. நாகேஸ்வரன்.
ac1cac63-362b-4262-b575-0ee0ff96ef95
நேற்று வெளிவந்த பொருண்மையீர்ப்பு அலைகளைப் பற்றியக் கண்டுபிடிப்பை வைத்து ஒரு வெண்பா!

ஈரேழ் உலகை சூலகத்தில் இட்டவள்
சீராய் விரித்த விஞ்சை ஓதுவோம்
கூராய் குறுக்கி, பலகணியில் நோக்கிலும் (அதன்)
தீரா அழகே/அறிவேச் சிறப்பு

[இரண்யகர்ப்பம் போன்ற பேரண்டம் வெடித்து வந்ததை, தெரிந்தவற்றைக் கொண்டுக் காணும் போதும், அதன் அழகு பீடுடையது.]

ஏந்திழையின்பொன்சூல் வெடித்தே விரிய___ _
இழையெங்கும் சூழ்கொண் டுழன்றுப் பொடிக்க _
மழையாய், களிகொண்டத் தூள்கூடி கூட்டுத்தூள்
விசைபெற்றே ஆன தணு!

[பெருவெடிப்பு சூல் கொண்டு வெடித்தப்பின்பு, ஆற்றல் இழைவடிவாக இருந்து, அதனின்று மென் துகள்கள், அதனின்று வன் துகள்கள், அணுவும் உண்டானது ]

அணுக்கள் அணுக்கமாகி ஈங்குப் பொருளமைய
ஆழியது வெந்தது போல் கோளமெங்கும் விரிய
இணுங்கிய தூள்கூடி விண்மீன் ஆகியே
ஈன்றவேத் தீப்பிழம்(பு) உலகு.

[அணுக்கள் கூடி ஒளிப்பிழம்பாகப் பொருளாகவும், அவை கூடி விண்மீன் உண்டானது]

விண்மீன் உமிழ்ந்த ஒளிவெளி செல்ல
விழுகூன் கிழமீன் உளதில் இடுங்கிட
வில்லதின் நாண்போல் அழுத்தும் இழுவிசையின்
வன்மை சமன்செய் அடர்வு.

[அப்படிக் கூடிய விண்மீன் கிழப்பருவமெய்தி இறக்கத் தலைப்படும் பொழுது, அதன் கதிர்வீச்சு அமர்ந்து உள்ளுக்குள் ஈர்ப்பு அதிகமாகி அடர்த்தி அதிகமாகும்]

விதைத்தாள் அன்னை, துயில்விப்பான் பிறைசூடி (இவ்வண்ணம்)
விண்மீன் இயக்கம் வியனுறு வல்வித்தை
விரித்துரைத்த சந்திர சேகரன் பாடியதே
விண்மீனின் மீளாத் துயில்.

[சக்திப் படைத்ததை, சிவம் அழிப்பது போல், சந்திர சேகரின் விண்மீன் அழியும் காலம் சொன்னார்]

துயின்றமீன் வயிற்றுப் பசிமட்டும் ஆறாதே
எயின்று சுழற்றி வளைத்தே அருந்தும்
அருந்தவசி கொள்ளும் அருளொளி போல
வெறுமிடஞ்செய் கார்துளை இயல்பு.

[விண்மீன் இறந்து கருந்துளையாக, சுற்றி இருப்பவறறை விழுங்கிவிடும்]

களவாடும் கார்வண்ணன் பொன்வெண்ணெய் கொண்டதேபோல்
நலமோடு வெள்ளிசிந்தும் சீரொளியை விள்ளுமது
பலமோடு உள்ளிழுத்தே சேர அதன்பால்
விளமற்றே விழும் ஒளி.

[வெண்ணெயால் கவரப்பட்ட கண்ணன் போல், ஒளி முதற்கொண்டு விழுங்கும்]
அஃதோடு நிற்பதில்லை

சிந்திய மீன்களெல்லாம், நேரவெளிப் போர்வையில்.
சீந்தில் கொடிகொள் வேலியன்ன கார்துளையும்.
வீழ்ந்ததும் கூடிட வீரியம் ஏறிடும்
சந்ததமும் கூடும் நிறை

[அனைத்தும் நேர வெளிதனில் இருக்க, கருந்துளையின் அண்மையில் இருப்பவற்றை இழுத்து, அதன் நிறை அதிகமாகும்]

கந்தலாகும் காலவெளி, கார்துளையின் மீநிறையால்
பந்தல் தோரணம் தென்றலுடன் இசைவதுபோல்
வந்தவை சூழ்ந்தோட வெளியில் அலையடிக்கும்
சேந்தசிவை வேய்குழல் போல்.

மரிக்காதக் கடலலையாய், இடித்த கணந்தாண்டி
மாயை சுமந்தே அகண்டம் திரிந்து
மயங்கா வியற்கைப் புலவர் படித்த
மலராக் கொடிப்பூத்த மலர்.

[கருந்துளை நேரவெளி அமைப்பை துளையிடும், அதன் இயக்கம் அனைத்தும் நேரவெளி அமைப்பில் அலைகளை உண்டு பண்ணும்]

லீகோ செங்கல் அடுக்கி ஓரியல்பு
நீளொளிக் கொண்டுக் குறுக்கிடச் செய்ய
வீழ்ந்தமலர் ஓர்முத்தோன் (Einstein) கற்பனையின் ஈற்றுண்மை
இன்னும் அறிவோம் சிறப்பு!

ஓர்முத்தோன் விட்டெறிந்த வித்துகளில் ஓர்முத்து
ஓர்ந்திரு ஆய்வர் அலமாந்து அயர்வாய்
ஆடிய லீகோவில் சிக்கும் அலையது
உள்ளங்கை நெல்லிக் கனி.

[ஐன்ஸ்டைனின் சார்புக் கொள்கையினால் உண்டான ஈர்ப்புவிசையின் அளவு லீகோ அறிவியற் கூட்டமைப்பின், லேசர் குறுக்கீட்டுவிளைவின் வழியாக உணரப்பட்டது! ஓர்-முத்து என்பது Einstein-நின் தனித்தமிழ் சேட்டை!]

http://chaos.physik.tu-dortmund.de/~eswar

Series Navigation’ரிஷி’யின் கவிதைகள்: புரியும்போல் கவிதைகள் சில….பிளந்தாயிற்று

5 thoughts on “அறிவியற்பா: பொருண்மையீர்ப்பு அலைகள்!

  1. அறிவியல் சொல்லும் கவிநயம் அருமை.

  2. வணக்கம், சமீபத்திய மிக முக்கியக் கண்டுபிடிப்பை இத்தனை அழகாகக் கவிதை வடிவில் புனைந்து , அதற்கான பொருளை யும் தந்திருக்கும் கவிஞருக்கு என் நன்றியும் பாராட்டுகளும். இந்தக் கண்டுபிடிப்பு, அது தொடர்பான விஷயங்கள் குறித்து கட்டுரை வடிவில் எழுதி இந்தத் தகவல் இன்னும் நிறைய வாசகர் களைச் சென்றடைய வழிவகுக்க வேண்டும் என்று நவீன அறிவியல் தெரிந்த, பழங்கவிதை மரபும் தெரிந்த இந்தக் கவிஞரைக் கேட்டுக்கொள்கிறேன்.

    தோழமையுடன்
    லதா ராமகிருஷ்ணன்

  3. சேயோன், லதா அவர்களின் கருத்துகளுக்கு மிக்க நன்றி! நிறையக் கட்டுரைகளை எழுத முயல்கிறேன். தாங்கள் கூறியதைக் கொண்டு பொருண்மையீர்ப்பு அலைகளைப் பற்றி ஒன்றை எழுத முயல்கிறேன். :D

  4. http://puthu.thinnai.com/?p=30319

    இது பஞ்சரத்தினம் அவர்களைப் பற்றி சில மாதங்களுக்கு முன்னர் நான் எழுதியக் கட்டுரை. இவையும் தங்களுக்கு விருப்பமாய் இருக்கலாம். :)

  5. அழகிய அகண்ட பிரமாண்டத்தை கவியில் காட்டிய உங்கள் புகழ் வளரவேண்டும் இன்னும் திண்ணையில் வர வேண்டும் A.C.Sankaranarayanan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *