Posted in

இயந்திரப் பொம்மை

This entry is part 4 of 16 in the series 21 பெப்ருவரி 2016

 

பாட்டி இடித்த வெத்தல உரலும்

பதுங்கி ஆடிய நெல்லுக் குதிரும்

வேட்டை என்று ஓணான் அடித்ததும்

வேகமாய் ஏரியில் குதித்து மகிழ்ந்ததும்

மதிய வெயிலில் அஞ்சி டாமல்

மரத்தில் ஏறித் தேனை எடுத்ததும்

குதித்தக் குரங்கைக் கல்லால் அடித்ததும்

குபீரெனச் சீற ஓடிச் சிரித்ததும்

விடிய விடிய கூத்துப் பார்த்து

விரலில் பள்ளியில் அடி வாங்கியதும்

அடுத்த வீட்டுக் கோழி முட்டையை

அறியாமல் போய் எடுத்து வந்ததும்

கண்ணா மூச்சி ஆடி மகிழ்ந்ததும்

கபடி ஆடிக் கையும் ஒடிந்ததும்

திண்ணைத் தாத்தா கதைகள் சொன்னதும்

தின்பண் டங்கள் கடித்துக் கொடுத்ததும்

என்றன் பேரன் கணினியின் முன்னே

எழுந்தி ருக்காமல் ஆடும் போதில்

இன்றென் மனத்தில் வந்து மோதின

இவனும் இங்கே இயந்திரப் பொம்மைதான்

Series Navigationராதையின் தென்றல் விடு தூதுநித்ய சைதன்யா – கவிதைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *