This entry is part 16 of 20 in the series 25 பெப்ருவரி 2018

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

ஒரேயொரு அடி_
செத்துவீழ்ந்தது கொசு;
சிலிர்த்தகன்றது பசு.
சரிந்துவிழுந்து படுத்த படுக்கையானார்
தெரிந்தவரின் சகோதரி.
சிரிப்பாய்ச் சிரித்துவிட்டது கவியின் பொய்.
’அய்’ ஆனது ‘ய்’
செல்லம் பெருகியது வெள்ளமாய்.
உணரமுடிந்தது உயிர்த்துடிப்பை.
உள்வாங்கும்படியாகியது நச்சுக்காற்றை.
உற்றுப்பார்க்க முடிந்தது நேற்றை
ஒளிந்திருப்பது சிறுமியா காலமா என் மறுபக்கமா?
தொடர்ந்து வரக்கூடியது மாடா? லேய்டா ? க்கோடா?
ஒரேயடியாய்க் கடந்துபோனதொரு நொடி.
உயிரை மாய்த்துக்கொண்டுவிட்டது பிள்ளை.
உயரேயிருந்த நிலா மறைந்தது மேகத்துணுக்கில்.
கணக்கில்லாத எல்லைகளில் ஒன்றின்
விளிம்பைத் தொட்டன பாதங்கள்.
குளம்போசை கேட்க ஆரம்பித்தது.
குதிரையா புதுவகைப் பறவையா.?
Quantum leap வாய்க்கவேண்டும் பிடிபட….
பாய்ச்சல் எதற்கென்றும்……

Series Navigationசுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் இந்தி மொழிபெயர்ப்பில்புனைவு என்னும் புதிர் : விமலாதித்த மாமல்லன்