Posted in

கவிதைகள்

This entry is part 15 of 17 in the series 23 ஜனவரி 2022

 

லாவண்யா சத்யநாதன்

 

நடுக்கிணற்றில் நிகழ்காலம்

 

பெரும்தொற்று

புவிவலம் வரும் சமயம்

மூக்கடைத்தாலும்

மூச்சுநின்றுவிடும்

அபாய அச்சுறுத்தல்களை

மனம் நிரப்பும் ஊடகங்கள்.

உயிரைப் பறிக்கும்

எமனை நினைத்து

நாடி தளர்வோர்

நாடுவார் மருத்துவனை.

காலன் பறிப்பது உயிரைமட்டுமே.

வைத்தியனோ

சேமிப்பையும் காப்பீட்டையும்

சேர்த்துப் பறிப்பான்.

நடுக்கிணற்றில் படர்ந்த

கொடியில் தொங்கும் ஒருவனின்

கீழே படமெடுத்தாடும் பாம்பு.

மேலே பசித்திருக்கும் புலி

காத்திருக்கும் கதையை

நினைத்துக் கொண்டேன்.

–லாவண்யா சத்யநாதன்

 

மனம் திரிதல்

 

மணமல்லியா

வனமல்லியா

கவனமாய் வாங்க எண்ணி

கடைக்குப் போனால்

மையிருட்டுப் பூக்காரி

மல்லிகைச் சிரிப்புதிர்க்க

மலர்க்கணையை வில்லேற்றும் மனது.

சித்த சுத்தியோடு

சிவனை வணங்க

சிவாலயம் சென்றால்

செருப்பை நினைக்கும் மனது.

வனிதையர் விமானிகளாய்

அன்றாடம் பறக்கிறார்கள்.

காற்றில் பறக்கும் பேருந்தேறிப்

பயணம் செய்யப் பயப்படுவதா?

வீரனாய் விமானமேறுவேன்.

விமானம் பின்சாய்ந்து

வெளியிலேறும் தருணம்

மல்லாக்க விழும் மரணபயமூட்டி

வேர்வையால் நனைக்கும் மனது.

வஞ்சக மனதைக் கடப்பதெவ்வாறு?

 

லாவண்யா சத்யநாதன்.

 

 

Series Navigationபசிபிக் பெருங்கடல் தீவு ஹூங்கா தொங்காவில் சீறிய கடல் அடித்தள எரிமலையால் சுனாமிப் பேரலைகள் எழுச்சிமுருகபூபதியின் நடந்தாய் வாழி களனி கங்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *