வளவ. துரையன்
வீடு முழுவதும் உன்
பெருஞ்சினத்தை
இறைத்து வைத்திருக்கிறாய்
அதன் வெப்பம்
வீதியெலாம் கனக்கிறது
எப்பொழுது அது
அணையுமென்று சில
புறாக்கள் காத்திருக்கின்றன
விதையே இல்லாமல்
பெரிய மரமாக வந்து
நிற்கும் மாயம்
உன்னிடம் உள்ளது
எந்த அறைக்குள்
நுழைந்தாலும் உன்
வெப்ப வாசனைதான்
நாசியைக் கருக்குகிறது
அணைப்பதற்கு
அறுசுவை நீர் தேடி
அலைவதே என்
வாழ்வின் பெரும்பயணம்
எந்த எரிமலையும்
தணிந்துதான் தீரவேண்டும்
சாம்பல் எப்போது வரும்?