This entry is part 1 of 7 in the series 23 பிப்ரவரி 2025

ரவி அல்லது

வேகமாக சாலைகளில்

பறந்து கொண்டிருக்கும்

மனிதக் கூடுகளைப் பற்றி 

பெரிதாக 

அலட்டிக் கொள்ளத்தேவையில்லை

அவைகள்

நிலையாமையில்

கால்கோள்வதால்.

அவைகளின்

நிறம் குணம்

பெயர்

யாவுமே

தனித்த அடையாளத்திற்காக

முயன்று கொண்டே இருக்கும்

ஏதாவதொரு வகையில்.

நிலை மாறும் பொழுதினில்

ஏதோவொரு 

சுய தேவையின் பொருட்டில்

யாருமற்ற இடத்தில் 

ஏதோவொன்றை

வீசி விடுகிறது

அற்ப காரணங்களுக்காக

அனிச்சைக் கூடுகள்

அவ்வப்பொழுது

வீசுவதையே

வழக்கமாக்கியதால்

புரியாதப் புறாக்கள் மட்டும் 

இரையிடமென பொருள் கொண்டு

தனக்கான

தங்குமிடமாக்கியது

பார்த்து மகிழுமாறு.

பெருகிய புறாக்கூட்டத்திற்குள்

யாதொரு

பினக்குமில்லை

வெவ்வேறு 

திசைகளில்

அதன்

ஆதி முடிச்சுகள் 

பின்னிக்கிடந்தாலும்

இணைந்திருக்கும் 

இவ்விடத்தில்.

யாவரும் 

மகழுமிடமாக

மாறிப்போன நேரத்தில் 

இரும்புகள் கூட்டிலிருந்த

மனிதக் கூடுகள் 

இரக்கத்தை தின்று

இறங்க மறுத்ததால்

உயிர்ப் புறாக்கள்

ஒவ்வொரு முறையும் 

சிதைந்து கொண்டே இருந்தது

சாலையில் 

தவறென்னவோ

திசை மாறிய 

புறாக்களெனும்

அங்கலாய்ப்பில்.

***

-ரவி அல்லது.

ravialladhu@gmail.com

***

Series Navigationமனிதக் கோப்பையினாலொரு மானுடப்பருகல்