This entry is part 13 of 15 in the series 25 செப்டம்பர் 2016

ருத்ரா இ.பரமசிவன்

இங்கே கொலை.
அங்கே கொலை.
கொலைக்குள் ஒரு தற்கொலை.
தற்கொலைக்குள் ஒரு கொலை.
சாதிக்காரணம்.
அரசியல் காரணம்.
காவிரித்தண்ணீர்.
ஈழம்.
தமிழ் என்னும்
ஆயிரம் ஆயிரமாய் பிணங்கள்.
இந்திய சாணக்கியம்
இறுக்க தாழ் போட்டு விட்டது.
ஐ.நா கூட கண்களை மூடிக்கொண்டு
குப்புறக்கிடக்கிறது.
யாருக்கென்ன?
பிள்ளையார்களையெல்லாம்
கடலில் கரைத்தாயிற்று.
அந்த “சசி வர்ண சதுர் புஜ”
ரசாயனம் எல்லாம்
திமிங்கிலங்களின் வயிற்றில்.
நூற்றுக்கணக்காய் அவை
நாளை மிதக்கும் கரையில்.
அதையும் விழாக்கோலம் கொண்டு
பார்க்க மக்கள் கூட்டம் தான்.
எங்கும் எதிலும்
ஈக்கள் கொசுக்கள் மொய்க்கின்றன‌
ஊடகங்களாய்.
சினிமாக்களிலும்
சமுதாய உடல்களின்
மார்ச்சுவரி இருட்டுகள்.
நீதி மன்றங்களும்
அப்போதைக்கப்போது
மரச்சுத்தியல் தட்டுகின்றன.
வாய்தா.
ஜாமீன்.
மறுபடியும்
மறுபடியும்
சக்கரம் சுழல்கிறது.
மண் புழுக்கள் நசுங்குகின்றன.
மணற்கொள்ளை.
வீடு புகுந்து
கொள்ளை கொலை.
கிரானைட்டை வெட்டி எடுக்கிறேன்
என்று சொல்லி
மலைகளை எல்லாம்
மாமிசம் போல் அறுத்து விற்பனை.
பணம் குவிகிறது.
அதன் நிழலே
நம்மை எல்லாம் அசையாமல்
தின்கிறது.
அந்த ராட்சசப்பறவை
சிறகடிக்கிறது.
சட்டம் ஒழுங்குக்குப்பின்னால்…
ஒழுங்கு சட்டத்துக்குப் பின்னால்…
சட்டம் ஒழுங்கு
நம் வேதம்.
நம் வேதாளம் எல்லாம்…
இதனூடே
தேர்தல் ஆணையம் எனும்
மந்திரக்கோல்
ஒரு யானையிடம்
மாலையைக்கொடுத்து
போடச்சொல்கிறது.
அது
மாலையா?
மலர்வளையமா?
இந்த ஜனநாயகம் விறைத்துக்கிடக்கிறது.

Series Navigationஹாங்காங் தமிழ் மலரின் செப்டம்பர் 2016 மாத இதழ்கதை சொல்லி