மாயாறு- மருத்துவர் .ஜெயமோகன் மரணம்

This entry is part 4 of 22 in the series 19 ஏப்ரல் 2020

தெங்குமரஹடாவுக்கு நான் சில முறை  சென்றிருக்கிறேன். அடர்காட்டுக்குள் இருக்கும் ஊர். காட்டுக்குள் இருக்கும் மக்களுக்கு ஆடு கோழி தரும் ஒரு விழாவுக்கு கால்நடை மருத்துவர் ஒருவருடன் சென்றபோது அவற்றை அம்மக்களுக்குத் தரும் போது சத்யம் வாங்கிக்கொண்டனர். ஏமாற்ற மாட்டோம். கடன் திருப்பிக் கொடுப்போம் என்றதற்கு .  காட்டை காலிசெய்யவேண்டும் என நீதிமன்றமும் அரசும் ஆணையிட்டுவிட்டன பல முறை . நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன மக்கள் அதை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

மாயாறு ஓரத்தில் கடவுளின் கோபம் நீக்க கெடா வெட்டப்படுவது சாதாரணம் அங்கு. மனித பலிகள் வழக்கமாகவே அதிகம் அங்கு. விலங்குகள், இயற்கை  என்று…  மரு.ஜெயமோகன் இன்னொரு பலி. நீலகிரி மாவட்டம் தெங்குமரஹடா ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர் காய்ச்சலால் உயிரிழந்தார்.

மாயாறு ஆதிவாசிக் கவிதைகள்

மாயாறு ஆதிவாசிக் கவிதைகள்

  சுப்ரபாரதிமணியன்

சுப்ரபாரதிமணியன், 8/2635 பாண்டியன் நகர்,

திருப்பூர் 641 602    / 9486101003 /  subrabharathi@gmail.com

ஆதிவாசிக் கவிதைகள்

* மாயாறு பொங்கி வழிகிறது.

மாயாறு பொங்கி பெருக்கெடுக்கிறபோதெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறது.

வெள்ளத்தைப் பார்க்க முடிகிற மகிழ்ச்சி..

நீயும் பொங்கிப் பாரேன் என்று அது நிகழ்த்திக் காட்டும் ஓரங்க நாடகம்.

பொங்கி வருக..

* வேலியின் கிளுவைப்படல் யாராலும் நகர்த்தப்படலாம்.

யாராலும் நசுக்கப்படலாம்.

மிக மெல்லியதுதான்

என் வைராக்யம் என்னும் கோட்டை எந்தக் கொம்பனாலும் நகர்த்தமுடியாது.

கற்பு வெறும் கோட்டிலா இருக்கிறது.

* தீ காட்டில் தொடர்ச்சியாகப்

பரவிவிடக்கூடாது என்பதற்காய் பையர் லையன் ( தீக்கோடு )இருக்கிறது.

எங்களைச் சுற்றி நாங்களே போட்டுக் கொண்டிருக்கிறோம்.

எல்லாக் கோடுகளும் மானம் காக்க.

* எட்டுக்குழந்தைக்கு தாய் நான் பொம்மக்கா

எட்டு என்ற எண்ணின் தலைப்பகுதிஉள்ளில் நான்

எட்டு எண்ணின் கால்ப்பகுதி உள்ளில் கணவன்.

எவ்வளவுதான் பார்வை மேய்ந்தாலும்

எட்டாது தூரமே நில்லடா மேஸ்திரி.

* மரத்தை மற்றவர்களுக்காய்

எங்கள் தாத்தாக்கள் வெட்டினர்.

எங்கள் பாட்டன்கள் வெட்டினர்

எங்கள் பூட்டன்கள் தாத்தாக்கள் வெட்டினர்

எங்கள் மகன்களும் வெட்டுகின்றன்ர்.

அரிவாள் கூர்மையடைந்து வருகிறது

எல்லோருக்கும்  தெரியும் தானே இது 

*உன் குழந்தை அழுகிறது

என் கையில் இருக்கும் அழுக்குத் துணி மூட்டையிலிருந்து

எள்ளுரண்டையை எடுத்துத் தந்ததற்காய் முகம் சுளிக்கிறாய்.

இரண்டு வயது இருக்குமா உன் குழந்தைக்கு.

லேஸ், சிப்ஸ், பாண்டா என்று நீ அரை மணி நேரத்தில் கொடுத்த்தையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன்.

அதில் எதற்கு குறைந்து போய் விட்டது என் எள் உருண்டை.

உன் முகச் சுழிப்பிற்கு காரணம் அழுக்குத் துணியா, எள்ளுரைண்டையா

லேஸ், சிப்ஸ், பாண்டா சாப்பிடும் உன் குழந்தை 30 வயதில் எப்படியிருப்பான்.

கம்யூட்டர் என்சிஜினியர், பணக்காரன் என்றிருப்பான்

ஆரோக்கியமானவனாக இருப்பானா.

உன் முகச்சுளிப்பில் உதட்டு லிப்ஸ்டிக் தேய்ந்து விட்ட்து.

பஸ் வரும் நேரம்தான்.

என்னை சுலபமாகத் தவிர்த்து விடலாம் நீ.

* எங்கள் காட்டில் மேயும் விலங்குகளில் சருகு மான் இருக்கிறது ( மவுஸ் டீர்)

நீங்களெல்லாம் சரக்குமான்கள் தான்.

பொருள் சரக்கு

மது சரக்கு

பேராசை சரக்குமான்கள் நீங்கள்…..

*பழைய முறத்தில் கொஞ்சம் நெல்லிக்காய் கொய்யாக்காய் பரப்பி உட்கார்ந்திருக்கிறேன்.

என் தலையைத் தொட்டு ஓடுகிறது கிண்டலாக அந்த இளம் வயசு..

பெருநாகம் 3 அடிக்கு எழும்பி தொடை நோக்கித் தாவும்.

எந்தப்பாம்பும் காலில் கொத்தும்.

பெரு நாயகமாய் எழுந்து கைகளை வீசுகிறேன்.

தப்பித்து  விட்டாய்

பாம்புக்கு  பழி வாங்கும் குணம் இல்லை

சுலபமாய் ,மறக்காது.

* சிங்கம் பூனைக்  குடும்பம்

சிறுத்தையும் பூனைக் குடும்பம்.

நான் கோடாரிக் குடும்பம். ..

* கலைஞ்ர் ஆட்சியில்  தொலைகாட்சி தந்தார்கள்

பின் அம்மா படம் வந்தது.

யார்யாரோ படம் வந்தது.

அம்பேத்கார் பற்றிச் சொன்னார்கள் .

அவர் படம் வந்ததாகத் தெரியவில்லை.

 அவர் யார் என்றும் அடையாளம் தெரியவில்லை….

* புலி அடுச்சு பொம்மக்கா செத்தாள்ன்னு பெரிய ரகளை தா.

காட்டு ஆபீசருங்களை ஓட ஓட வெரட்டுனாங்க.,

ஜீப்புக்கெல்லாம் தீ வெச்சங்க.

எங்க மாடுகளை ஆடுகளை புலி அடிச்சப்போ எங்களுக்குத் தெரியாமெ எதுக்கு வளர்த்தீங்ன்னுதா கேள்வி வந்துது.

* இஙக் வரும்போது சொகுசு கோச்சுலதா  வர்றீக

அங்க சொகுசு கோச்சுலதா  தண்ணி பாட்டல்

வாந்தி எடுக்க பிளாஸ்டிக் பை

நியூஸ் பேப்பர் எல்லாம் தந்தது செரிதா.

காதுலெ அடச்சு வெச்சுக்க பஞ்சும் குடுத்தாங்களா என்ன

நாங்க சொல்றதே யாரும் கேட்க மாட்டீங்கறீஙக………<

* இரக்கமுள்ள கடவுள்ளுன்னு ஏதாச்சும் இருக்குதுங்களா.

வெளி நாட்டுக்கடவுளா இருந்தாலும் பரவாயில்லை.

 பேரைச் சொல்லுங்கம்மா. <

* மாயாறா மொய்யாறா  அல்லி மாயாறா

ஒவ்வொருத்தரும் ஒரு மாதிரி சொல்வாஙக

பல சமயம்

எங்க மனுசங்க, ஆடு மாடுகளெ மாயமா பண்ணும்

அதுக்குமாயச்சனியன்னு கூட பேரு வைக்கலாம்.

* ராசாக்களும், இங்கிலீஷ்காரனுகளும்

வேட்டையாடின அப்புறம் தங்கறது கேம் ஹட்.

இன்னும் கம்பீரமாத்தா நிக்குது.

இப்போ அதுக்குப் பக்கம் யாரும் போறதில்லை.

ஆவி சுத்துதுன்னு  யரும் போறதில்லை.

வேட்டை ஆடுனது மான், புலி , பிராணிகதானா.

பொம்மக்கா மாதிரி

ஆதிவாசிப் பரம்பரைப் பொண்ணுக எத்தனை.

கணக்கேயில்லை.  <<

*வறுமைக்கோடுங்கறாங்க

ஆதிவாசிக்குடிசைப் பகுதீங்கறாங்க

இந்த இடம் கடல் மட்டத்துக்கு மேலெ இத்தனை மீட்டர்ன்னு

ஒவ்வொரு கட்டடத்திலியும் எழுதி வசிசிருக்கீஙக

எந்தக் கோட்டுக்கு மேல நாஙக இருக்கறம்.

எந்தக் கோடு எங்களைப் பிரிக்குது

சொல்லுங்க.

காலகாலமா தெரியாமத்தா இருக்கறம். K<

* எங்க கோவில் திருவிழா சாமியாட்டத்திலே

ஆம்பளக் தா அதிகம் ஆடறாஙக.

எங்களை அளவா ஆடச்சொல்றாங்க.

சாமி வந்தா ஆம்பளைகதா ஆடறாங்க

எங்க மேல சாமி வர்றதேயில்லை.

வந்தாத்தா தெரியும்…

*லைன்க்கு புருசன் போயிட்டான்

வெத்தலை வாங்கிட்டு வரச் சொல்லிருக்கறன்.

 வெடி வை.

கிழிச்சு வெட்டு 

செடி வெட்டு  ஏதாச்சும் வேலை தர்றீங்க.

மென்னு துப்புற வெத்தல் மாதிரி நடுங்கிப் போறான்.

பத்து ரூபா வெத்தலைக்கு உங்க கிட்ட கை ஏந்தறம்.

* பொம்மத் தேவர் பகவதி முனிஸ்வரன்  எல்லார்த்துக்கும்

 சிவராத்திரின்னுகண்ணு முழிக்கப் பாட்டுப் பாடறம் .

எங்க பாட்டு கேட்டு எல்லா சாமிகளும் கண் முழிச்சிருக்கும்

எங்க புருசனுக தண்ணி அடுச்சுட்டு மேல் நோவு தாங்காமெ படுத்துக் கிடக்கறாங்க.

நாளைக்கு வெடியாலெ  நேரத்தில போகனும் முள்ளு வெட்ட.

புலி மிரட்டிட்டிருக்கு யாரை அடிக்குமோ.

புருஷன் திரும்பி வர்லீன்னா எல்லா நாளும் சிவராத்திரிதா எங்களுக்கு.

* யானை அடிச்சு எம் புருசன் செத்துப் போனான்.

யார்யாரோ மிரட்டி என்னை சாகாம இருக்கப் பண்றாஙக.

அவங்களுக்கு நான் வேணுமாமா….

* எங்களெ கணக்குப் பண்ண ஒருத்தன்

கரடியா நடிச்சு எங்களை தொரத்திட்டிருந்தான்.

 பலி கொடுக்க ஆளு வேனுமுன்னாங்காங்க.

 அடையாளம் காட்டிட்டம்.

 கணக்கு முடிஞசது.

* நாங்க  முதுகுடி மரத்திலிருந்து பிறந்து வந்தவங்க.

தோள், தலை, கால், இடுப்புன்னு உடம்பிலிருந்து

நீங்களெல்லா பொறந்து வந்தவங்கன்னு பெருமை பீத்திக்கறீங்க.

அப்புறம் நாங்க மரத்திலிருந்துதா பொறந்திருக்கணும் .

அது பெருமை கூட ..

* வீடு தர்றதா சொன்னீங்க. தர்லே.

காய்ஞ்ச புல் எடுத்து கூரை வேயறம்.

வீடு கட்ட நாங்களே

மண் எடுத்தம்

கல் எடுத்தம்

மண்ணுலெ பொதஞ்சாலும்  தூரமாப் போன்னு கத்தறீங்க ….

* மந்திரம் தெர்சிஞ்சவங்கன்னு எங்களைப் பத்தி சொல்றீங்க.

மந்திரமும் தெரியாது தந்தரமும் தெரியாது.

 மாயபூமி இது மாயாறு ஓடுது 

நோவு வந்தா மாயமா செத்துப் போறம். அதுவும் மந்திரமா என்ன..<

* மாயாத்துத் தண்ணிதா எல்லாத்துக்கும்.

குளிக்க. தொவைக்க குடிக்கன்னு.

சளி, காய்ச்சல் இருமல்ன்னு பெரிய தொல்லைகதா.

மாயாத்து முதலையே வா.

எங்க காலெ கவ்வி எங்காச்சும் இழுத்துட்டுப் போ

யானைகளே வா வந்து தூக்கி வீசு

இல்லே உதச்சுத் தள்ளு..

போதும் இந்த வாழ்க்கை.

வந்த காய்ச்சல் போறதில்ல.

வந்த வியாதி போறதில்ல. <

* தண்ணியெ காய்ச்சிக்குடிக்கறம்.

தாகம் தீரலே

பசி மாறெலே.

மருந்தா இருந்த தண்ணி

விசமானது யாராலே. <

*கொழம்புக்கு பொறியல் உண்டாங்கிறீங்க  

கொழம்பிருந்தா பொறியல் இல்லே.

பொறியல் இருந்தா கொழம்பு இல்லே.

ஒரு வாய் சோத்திலதா எல்லாம் அடக்கம்.

* பொழங்கறதென்னவோ தமிழ் ஆளுககூடத்தான் .

பேசறதென்னவோ எங்க தாய் பாசையோட தமிழும்தான்.

 ஆனா எங்களுக்கு பொங்கல் இல்லே.

தமிழ்ப்புத்தாண்டு இல்லை.

ஓணம் விசுன்னு கொண்டாட்டம் இருக்கும்..

மலையாள தெய்வம் இங்க.எல்லாமெ

 முப்பாட்டன் கொண்டுட்டு வந்தது.

முதுமலைமுப்பாட்டன். நிலாக்கோட்டை வெள்ளி முப்பாட்டன்..

அப்புறம் பட்டாளக்காரன்.

அந்த தெய்வம் ஏழு வண்டியெ ஒரே கையில் இழுக்கும்.

அதுவும் கல் சக்கர வண்டி.   

கைகழுவ சிரம்மாயிருக்கு.

முப்பாட்டன்க நெனப்பெ ஒழிக்க முடியாது.

வாழட்டும் அவங்க. <

* ஒவ்வொரு பாடிக்கும் ஒவ்வொரு வகைச் சடங்குக.

ஒரே பாடிக்குள்ளதா கல்யாணம், காய்ச்சி.

இது மாறுச்சுன்னா பாடிக்குள்ள

 பாடி ( பொணம் ) பண்ணீர்ராஙக. <

*படிக்கிறது தமிழ் .

பேசறது குறும்பர் பாஷை.

என் மக படிக்கோணும் இங்கிலீஷ்.   <

* நான் உங்க ஊருக்கு  வரமுடியாது

நீ எங்க ஊருக்கு வேடிக்கை பாக்க வர்லாம்

 அவ்வளவுதா.

உன் அப்பா அம்மா என்னப்பா அம்மா ஆக முடியாது.

மாமா அத்தைன்னு ஆக முடியாது

வெவ்வேற பாடிக நாம. ( பாடி – வாழிடம் ) <

* மக சுரிதார்தா கட்டறா

எல்லாத்துக்கும் அதுதா சவுகரியமா இருக்கு

 நான் சம்பிரதாயமா கட்டற

 மாருக்கு கொஞ்சம் மேல கட்டற சேலை நழுவி நழுவி போயிருது.

 இழுத்துக் கட்டி இழுத்துக் கட்டி அலுத்துப் போச்சு.

கொஞ்சம் இழுத்தா நசிஞ்சது கிழிஞ்சும் போயிருது.

நைட்டி சரிதான்.

ஆனா கட்டுப்பாடுன்னு ஒண்ணு இருக்கிலையா.. அதுதா.

மானம் பெரிசு .

பாடி பெருமை பெரிசு.(  பாடி – வாழிடம் )<

*டிகிரி படிச்சான் மகன்.

வேலை கெடக்கைலே. சரிதா .

கூலி வேலையில கஞ்சி கெடைக்குது.

எப்பாச்சும் வாங்கிட்டு வர்ற இங்கீலிஷ் பேப்ப்ர்

படிக்கற பெருமைதா எம் மகனுக்கும் எனக்கும் .<

* வெளியூர்,  

வெளியூர் பாடின்னு ஊர்கள்லெ இருந்து வர

ரெண்டு நாள் கூட ஆயிருது.

பொணத்தைப் போட்டு ரெண்டு நாளும் கெடக்க வேண்டியிருக்கு.

சுடுகாட்டுக்கு ரெண்டு  மைல் போகணும்.

பக்கத்தில சுடுகாடு கேட்டு பலதரம் விண்ணப்பம் குடுத்தாச்சு.

 நீங்க கரண்ட்லே சீக்கிரம் எறிஞ்சு சாம்பலாயிர்றீங்க <

* நீயே ஒரு ஊராயிருவேங்றீங்க

எனக்கு  எட்டு பேர் கொழந்தைக

என்பெரிய  மகளுக்கு 5 பேர் கொழந்தைக  

என் பெரிய மகனுக்கு 6 பேர் கொழந்தைக .

குடும்பக்கட்டுப்பாடுன்னு  ஒண்ணும் பண்றதில்லெ

கோமுகம் அப்பிடிப் பண்ணி செத்துப் போனா.

இதிலெ ஜனத்தொகை வேற கொறஞ்சிட்டே வருதுங்கறாங்க.

நெசமான்னு தெரியலெ.

எதுக்கு அப்பிடி சொல்றாங்கன்னு புரியலே.<

* ரேசன்லே 34 கிலோ அரிசி போடறாங்க.

8 பேர் குடும்பத்துக்கும் 34 கிலோ

4 பேர் குடும்பத்துக்கும் 34 கிலோ

ரேசன் கார்டு குடுக்கறாஙக.அது இதுக்கு மட்டுந்தா ஆகுது.

வூடு கட்டித்தர்றதில்லெ.

காலமெல்லா வாய்க்கரசி மாதிரி இதைத் தா தர்றாஙக்.

மோசமான புழுங்கல்  அரிசியெ எங்களுக்கு

 வாய்க்கரிசியாவே போட்டர்றாஙக.<

* தேன் எடுக்கக் கூட யாரும் போறதில்லெ.

போனாலும் திருட்டுத்தனமா போக வேண்டியிருக்குது.

எடுத்தாலும் எங்களுக்குத் தெரியாமெ 

எதுக்கு எடுத்தேன்னு புடிங்கிட்டுப் போயிடறாங்க.

 எவ்வள்வு கஷ்டப்பட்டு தேன் எடுத்தாலும்

எங்களுக்கு பிரயோசனம் ஆகறதில்லெ.

 தேன் நக்கி ரொம்ப நாளாச்சி.<

* பூசாரி நம்மாளில்லை

நிலம்புர் அய்யர் வர்றான்.

கூடூர் அய்யர் வர்றான்.

வாத்யம் நாஙக .

பூஜை அவங்க.

 சாமியாட்டம் நாமதா.

நமக்குதா சாமி வரும் .

அந்தப் பெருமையை யாரு புடுங்கிக்க  முடியாது. <

* இந்தக் கோகாலெ ( இசைக் கருவி )

வாசிக்க எந்த பசங்களால கையாலாகருதில்லை

. மூச்சு தெனறானுக,

கேட்டா செல்போன்லே எதாச்சும் மியூசிக் போட்டு

இது போதுங்கறாங்க. .. <

*பொண்ணு முந்தியல வெத்தலை.

 மாப்பிளை துண்டுலெ பாக்கு .

மொய் 10, 50ன்னு வரும்.

வெத்திலை போட்டு  

நாக்கு நல்ல செவப்பாகறது  நல்ல சகனம்,

 நல்ல தாம்பத்யம்.,,,,,

* கொஞ்ச நேரம் நடனம் ஆடினம்

 கோகலெ சப்தம் கேடு சின்னப் பையன் அழறான் பாருங்க.

அவனுக்குப் புடிக்கலே போல.

இதைக்கேட்டு பாம்பு வந்துது .

எங்க நடனத்திலே

தரையில  அதிர்வுனாலே

பாம்புகள் நகந்து வந்திருக்கும்

அதெ ஒருநாள் இவன் பாத்துட்டான். பயந்துட்டான்.

கோகலெ  சப்தத்துக்கு  மனுஷன் மயங்கறது காணம்.

 பாம்புகதா மயங்கி  வருது போலன்னு

நெனச்சுக்க வேண்டியிருக்கு.<

.

*பணம் கொட்டி பணப்பயிர் விளைவிச்சாச்சு.

கத்தை கத்தையா பணத்தைக் கொடுத்து காட்லே பங்களாகா வந்திருச்சு.

எங்களயெல்லா வெளியேத்தியாச்சு.

வாயுள்ள எங்க குரல் எடுபடவேயில்லே.

இதிலே வாயில்லாத

பாம்பு, மயில், யானை, மான் இதெல்லாம் எங்க போகும்.

அதயும் துரத்துனா எங்க போகும்.

மிச்சக்காட்டையாவது விட்டு வையுங்க

வாயில்லாத ஜீவன்களுக்கு

.புழு, பூச்சின்னு பொழங்கற எடமா அது இருக்கட்டும்.

* குலதெய்வத்துக்குன்னு ஒரு இடம்

காலம் காலமா இருந்துச்சு.

யார் யாரோ வந்து பங்களாகட்டி எல்லாம் அடச்சாச்சு.

குலதெய்வம் கோவிலுக்கும் போக முடியில.

ஒத்தை ஆளு போறமாதிரி சின்ன  எடமாச்சும் குடுங்க

எங்க குலதெய்வம் நடமாடறதுக்கு.

நாங்க அவன் கிட்ட நடந்து போறதுக்கு.

*சடையாண்டியப்பனுக்கு பொங்க வெச்சு

 கம்பம் போட்டு ஆடுவம்.

இப்போ அதுக்கு இடமிலாமெ யார் யாரோ அடச்சுட்டாங்க.

பெரிய பெரிய ஆளுக போட்டது.

ஊர் பூராவும் பேதி, காய்ச்சல்.

நாங்க உயிர் பொழைக்க நோவு தீரணும்

 வழி வுடுங்க சாமி. <

சடையாண்டியப்பனுக்கு கம்பம் போட.

* சடையாண்டி, ஏழு கன்னிமாரு எங்க குல தெய்வம்.

 எங்க சாமியெ கும்பிட்டு கூப்பிய கையோட நின்னா

எதித்து நிக்கற யானையும் திரும்பிப் போயிடும்.

இந்த வேங்கி மரத்துக்கு வயசு தெரியாது  .

எந்த நோய் வந்தாலும்

 வேஙகி மர இலைதான் மருந்து.

வேஙகி மரத்துக்கு வெட்டு வுழுந்திருச்சு.

பாட்டன், பூட்டன் முப்பாடனுக்கு கோபம் வந்திருச்சு.

 அவங்ககிட்ட மன்னிப்பு கேட்க

ஒரு பொங்க வைக்க எடம் குடுங்க சாமி. <

* விறகு பொறுக்க நைட்டிதான் செரி.

தேஞ்ச செருப்புதான் செரி.

அழுக்கு உடம்புதான் செரி.

 பவுடர் பாத்து ரொம்ப நாளாச்சு.

வெறகு வெட்டறப்போ புலி வந்தா

முறைக்கறதுக்கு தைரியந்தா வேணும்.

எங்க ஓடி ஒளிஞ்சா  உயிர் பொழைக்கலாமுன்னு தெரிஞ்சா போதும்

.பவுடர் வேண்டா.

* ஊட்டிப்பக்கம் போனா

எங்க டிரஸ்சைப்பாத்து போட்டோ புடிக்கறாங்க.

எங்களெப் பத்தி எழுதறம்னு சொல்றாங்க,

போட்டோதான் பத்திரிக்கையில் வருது.

எங்க பிரசினை ஒன்னுக்கும்  தீர்வு  வர்லெ..

எங்க பாஷை எல்லார்த்துக்கும்

சாதாரணமா  சாமான்யமா புரியற பாஷைதானே.<

* நிகுநிகுன்னு வெந்தேக்குமாதிரி

ஒரு பொண்ணெ பாத்திருக்கன் அம்மா .

அப்பாகிட்ட நீதா சொல்லணும்.

எங்கட அவ.

இன்னொரு பதி.

உனக்குப் பாதியா வர்றவ

இதே பதிதாண்டா இருக்கணும்.

வேற பதி, ஊருன்னா நம்ம பதி, ஊரு ஒத்துக்கமாட்டாங்க…..

அதை மீறுனா

வெளிய போனவனெ புலி, சிங்கம், சிறுத்தை அடிச்சு போட்டிருச்சி.

ஆளு காணாமெப்போயிருச்சுன்னு நெனச்சுக்கச் சொல்லுவாங்க. <

*நானு தனியா உக்கார்ந்து கோகலே வாசிக்கறன்.

கேட்க ஆள் இல்லெ.

எம் பேரன் 20 ரூபாய்க்கு வாங்கின 

பொம்மையில் இருக்கற செல்போன்லே

 ரிங்க் டோன் கேட்கறான். 

அவனுக்கு அது போதுங்கறான்.<

* காட்டுக்கு காவலனா இருந்திருக்கேன்.

இப்பொ வயசாயி கால்லு ஆணி வுழுந்திடுச்சு.

காருங்க பார்க்கிங் எடத்திலெ பாஸ் குடுக்கற வேலை.

பணக்காரனுக்கு கார் கதவு தொறந்து மூட வேண்டியிருக்குது.

கஷ்டகாலம்ன்னா இது தானா.

சோத்துக்கு வந்த பஞ்சம்ன்னா இதுதானா.<

* ஆபிசருங்க நாங்க

கேம்ப் வேலைமுடியலே.

தனிக்காட்டுக்குள்ள இருக்கறம்.

 இருந்த அரிசியும் பருப்பும் தீந்து போச்சு.

 செட்டில்மென்ட்லே போயி உட்காந்துட்டம்.

 டெய்லி ராகி களி, ராகி உப்புமாதா.

மகராசிங்க சமச்சுப் போடறாங்க .

 நாலு நாளு கழிச்சு 

லாரி சாமானுகவோட வந்துச்சு. வேலையும் முடிஞ்சுபோச்சு.

யாருக்கும் செட்டில்மெண்ட் உட்டுப் போக இஷ்டமில்லெ.

லாரிக்காரன் கதர்றான்.

“ உங்க பொண்டாட்டி மார்களுக்கு யார் பதில் சொல்றது.

வாங்க ஊர்லே கொண்டு போயி உட்டர்றம் “  <

* ஊட்டியில  ஆதிவாசித் திருவிழா.

 ம.பி. காரன் வந்து ஆடுனான்.

 உ.பி. காரன் வந்து ஆடுனான் பீகார்காரன் வந்து ஆடுனான்.

நம்ம டேன்சுதா ஒசத்தி. யார் ஒத்துக்கறா

நாங்களே சொல்லிட்டம்.   ஆமா..<

* விற்கறதுக்கு விறகு எடுக்கலெ.

காட்டெ காப்பாத்தறதுக்கு விறகு எடுக்கறம்.

நாங்க காட்டுக்குள்ள நடமாடாட்டி

வேற எவன் எவனோ நடமாடறான்.

எவன் நடமாறான்னு கண்கானிக்க வேண்டியிருக்கு

காட்டெக் காப்பாத்த நடமாட வேண்டியிருக்கு.<

** காபி போடுனு சொல்லி

சக்கரயும் காபி பவுடரும் வாங்கிட்டு வந்துக் குடுத்தீங்க.

 இந்நேரம் காபி ஆகலியான்னு நச்சரிக்கிறீங்க. 

கரண்ட் அடுப்பா எங்ககிட்ட இருக்கு.

 காஸ் ஸ்டவ்வா எங்க கிட்ட இருக்கு.

 பச்ச வெறகை அடுப்புலெ வைக்கறம்

பாழும் வயிறு எறியிற வேகத்திலெ கூட

அடுப்பு எறிய மாட்டேங்குது. <

* கிங்பிசர்ன்னு ஒரு ரூம்.

 மினிவெட் இன்னொரு ரூம் பேரு.

அதில தங்கியிருந்தாங்க ஒரு ஆம்பளெ, ஒரு பொம்பளெ , ஒரு கொழந்தெ.

 கொஞ்சம் சிரிச்சாங்க.

ரெண்டு  நிமிடப்பேச்சுதா.. போதும் அது.

வெறும் வெசாரிப்புதா

பிரிஞ்சு போயிட்டாங்க.

விசிட்டிங்கார்டு குடுத்துடுட்டு.

ரெண்டு  நிமிசம் பழக்கம்

.இருபது  வருசத்துக்கும் மறக்காது.  

காட்டோட மகிமை அது. <

* இலவசமா டி.வி குடுத்தாங்க.

கரண்ட்  குடுக்கலெ.

அவசரத்துகு ஆம்பளைக அடமானத்துக்கு வெச்சாங்க

மூழ்கிப் போச்சு அதுவும்.

குடும்பமும் மூழ்கும்.

அவசரத்துக்கு  ஆம்புலன்சு நெம்பர் குடுத்திருக்காங்க. <

* வேட்டைக்கு வர்றவங்க மான், புலி, கொக்குன்னு சுடறாஙக

. சில சமயம் எங்களெப்பாத்தும் சுடறாங்க.

 அப்பிடி வேடிக்கையா சுட்டதில

எங்க பாட்டன்   செத்துப் போனான்.

 தெய்வமா ஆயிட்டான். செலை வெக்கலே.

நடு கல்லு வெச்சம்.

கோயில் கட்டலே. ஆனா சாமியா இருக்கான்……

* கேம் ஹட். வேட்டயாடி ஓஞ்சங்க தங்கற எடம்.

 செவலை அங்கதா தூக்கிலெ தொங்குனா. 

வேட்டைகாரனுக்கு புது பங்களா கெடச்சிருச்சு.

 செவலி வேற இடம் கிடைக்காதமாதிரி

அங்கையே அலையறா…….

* யானைக்காரனுங்க திருடனுங்கன்னு சொல்றாங்க.

 நாஙகதா வனத்தைக் காப்பாத்துனம். 

விறகு கூட அடுப்பெறிக்கத்தான் பொறுக்குவம்.

விக்கக் கூட எடுக்கறதில்லை.

இதிலே தந்தம் எடுத்து என்ன செய்யப்போறம்.

எங்க பேர்லே எவனெவனோ செய்யறான். <

* மேக்காலெ விதம்விதமா

கஸ்ட்ஹவுஸ், பங்களா, டார்மெட்டரி வந்துட்டே இருக்கு.

ஆபிசருங்க கோட்டர்ஸ் மாதிரி வீடுகளுக்குக்   கொறச்சில் இல்லெ.

 எங்களுக்கு மட்டும் வீடு கட்டித்தர மாட்டேங்கறாங்க..

நாஙக வெளியேறணுமாமா.

 வீடு கட்டிக்குடுத்துட்ட வெளியேறமாட்டமாமா

.எங்களை எப்படி வெளியேத்தறதுங்கறது அவங்க கஷ்டம்.

வீடில்லாம பொழங்கறது,  பொழைக்கறது எங்க  கஷ்டம். <

* முடிவெட்ட முந்தியெல்லா

 எங்களுக்குள்ளேயே ஆளுக இருந்தாங்க.

காலம் மாரிப் போச்சு .

இப்போ தனியா பார்பர்ன்னு வர்றான்.

கோவில் விசேசம்ன்னா முந்தியெல்லா

 நாங்கெளே பண்ணிக்குவம்.

இப்போ அய்யர்ன்னு யாராச்சும்

கீழிருந்து வர்ற இரகசியம் யாருக்குத் தெரியும்

* இந்தக் காட்டேஜ் உசத்தியானது.

 செல்போன்லே வந்து தங்குனவர்  சொல்லிட்டு இருக்காறார்.

எதுத்தாப்பலே மாயாறு சலசலன்னு ஓடுது.

 மானுக, காட்டுப்ன்னி, மயிலு சாதாரணமா நடமாடுதுக. 

Series Navigationபிள்ளை யார்?பெற்றோர்கள் செய்ய வேண்டியது
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *