This entry is part 7 of 20 in the series 19 ஜூலை 2020

முனைவர். நா. அருணாசலம்

எந்தத்  தோட்டத்திலும் ஆப்பிள்கள் தானாய் விழவில்லை.
ஈர்த்தல் விதியால் நீயூட்டன், ஐயின்ஸ்டீன்களின்  

மூன்றாவது காதலியின் நான்காவது கணவரிடம்

விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் விலை பேசுகின்றன.   

ஒற்றைச் சிலம்பில் மாணிக்கங்களைத் தொலைத்த கண்ணகிகள்
கோவலனையும் சேர்த்தே தேடித்தர ஆட்கொணர்வு  மனுவை

அவசரம் அவசரமாய் மனுநீதிச் சோழனிடம் அளித்தவள்
மாதவிகளை விட்டு விட்டு மனிமேகலைகளிடம் விசாரித்துக் கொண்டிருக்கிறாள்.

காட்டிக் கொடுத்த அந்த மாலை நேரத்து யூதாஸின் முத்தம்
நச்சோடிய கெம்லாக் உதடுகளின் எச்சில்களைத் தேய்த்து  

தேவதைகளும் தேவன்களும் தேவைக்கு ஏற்ப

உறிஞ்சித் துப்பித் துடிதுடித்து கொண்டிருக்கிறார்கள்.

அப்பாவின் மகன் டாலமியயை மணந்து சீசருக்கும் பரிசாகி
ஆண்டனியையும் அடிமை கொண்ட கிளியோபாட்ராக்களின் திரவியங்கள்
நாகங்கள் தீண்டாமலே மார்பில் நச்சுக்களாய் ஊறி
படர்ந்தவரை எல்லாம் பங்காளி அக்டோவியாவின் பகையைத் இன்றும் முடிகின்றன.

உங்களில் யார் அவனை/அவளை/அதுவைத் தொடவில்லையோ
அவர்கள் கல் எறியுங்கள் என்றார்.
அவனும்/அவளும்/அதுவும் யார் மீதும் எறியவில்லை
கூட்டத்தில் குரங்குகளும் அமைதியாய் நின்று கொண்டிருந்தது.

சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவள் என்ற
நன்னடத்தைச் சான்றை தனக்கும் சேர்த்தே

கணவன்கள் வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

வரலாற்றை வாசித்த என் எடுகோள்கள்
ஒவொரு வினைக்கும் எதிர்வினை உண்டு
என்பதைக் கண்டறிந்த  விடை
“சுழல் வினை”.

என் சூத்திரங்கள் எல்லாம்
ஆக்ஸ்போர்டு நலந்தாவின் குப்பைத் தொட்டிகளுக்குக்
கூட அழகு சேர்க்கவில்லை.

அறியாமையின் மாயத் திரைகள் விலகும் எனச் சொன்ன
சுழல் வினையின் பரதேசி பட்டினத்துப்பிள்ளையோ நான்…..!!!

முனைவர். நா. அருணாசலம்@அநேகன் அருணா

Series Navigationஇதயத்தை திறந்து வைசல்மா கவிதைகள் ‘ பச்சைத் தேவதை ‘ — தொகுப்பை முன் வைத்து …