Posted in

கவிப்பொழுதின் அந்திமக்காலம்…

This entry is part 31 of 42 in the series 1 ஜனவரி 2012

ஒரு பறவையின் கடைசி சிறகு

 

இலை உதிர்த்த மரம்

சப்தமின்றி மறைந்து போன செப்புக்காசு

மணி அற்றுப்போன கால் கொலுசு

எதுவாகவும் இருக்கக்கூடும்

 

விடியல் என்பது

குஞ்சுப் பறவையின் பிசுபிசுத்த இறகாயும்

தளிர் இலை தாங்கிய புது மரமாயும்

படபடக்கும் புது பணத்தாளாயும்

சிணுங்கும் மணிகளோடு சிலிர்க்க வைக்கும் நாதமாயும்

பிரபஞ்சத்தையே ஆட்கொள்ள விழையும்

சப்தமற்ற சில்லரைகளாகவும் பரிணமிக்கலாம்

 

இருக்கைகள் காலியாவதில்லை

அவை மதிப்பு கூட்டுபவை

என்றும் கூடுபவை

வசீகரமும் வனப்புமாய் ஆகர்ச்சிப்பவை

 

அண்ணாந்து பார்க்கையில்

புள்ளியின் துளியாய் வியப்பாளிகள்

அந்திமத்தின் அருகாமையில்

தங்கள் இலைகளை உதிர்த்தபடி !

 

-சு.மு.அகமது

Series Navigationபெண்ணிய வாசிப்பில் மணிமேகலைசங்கத்தில் பாடாத கவிதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *