துருக்கி பயணம்-7

This entry is part 20 of 43 in the series 24 ஜூன் 2012

அண்ட்டால்யா – கொன்யா – கப்படோஸ்
– நாகரத்தினம் கிருஷ்ணா
ஏப்ரல் – 1

மீண்டும் அண்ட்டால்யாவிலிருந்தோம். ஒரு வாரத்திற்குப் பின் அண்ட்டல்யாவை வேறுதிசைகளில், வேறுகோணத்தில் வேறு கதைப்பொருளில் காண இருந்தோமெனச் சொல்லலாம். முதல் நாள் அண்ட்டால்யா: அவ்லாமணி அண்ட்டல்யா, அஸ்பெண்ட்டோஸ் அண்ட்டல்யா, மனவ்காட் அண்ட்டல்யா, செலிமியே அண்ட்டால்யா ஆகியவை சட்டைபொத்தான்களைப்போல  நினைவில் அணிவித்ததும் வரிசையாக வந்தன. இவ்விரண்டு நாட்களும் நாங்கள் பார்க்கவிருக்கிற அண்டால்யா வேறுவகையென்று சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் வழங்கி கைவசமிருந்த குறிப்புகள் தெரிவித்தன.

அண்டல்யாவில் எப்போதும்போல நல்ல சீதோஷ்ணநிலை. மாசுமருவின்றி வானம் வெளுர் நீலத்தில் கண்ணுக்கெட்டியதூரம்வரை தெரிந்தது. இதமான குளிர்ந்தகாற்று. நாளையும் இதுபோலவே இருக்கவேண்டுமென வேண்டிக்கொண்டேன். ரோம் நகரில் மூன்று நாட்கள் மழையில் அலைந்தது நினைவுக்கு வந்தது. இன்றும் எங்களை பெட்டிகளுடன் இறங்கும்படி வழிகாட்டிக் கேட்டுக்கொண்டார். இதுதான் கொஞ்சம் சங்கடமாக இருந்தது. இருக்கப்போவது இரண்டு நாட்கள், ஒரே ஓட்டலில் தங்க வைத்திருக்கலாம். அன்றிரவு நகரத்தை ஒட்டிய  மற்றொரு ஓட்டலில் தங்கவிருக்கிறோமென்றார்கள். உருப்படியான ஓட்டலாக இருந்தால் சௌகரியமென நினைத்துக்கொண்டேன்.

சென்ற வார கட்டுரையில் தெரிவித்த சுவட்டில் பண்பாட்டு சுற்றுலாவில் இன்றைய உபயம் நகை உற்பத்தித் தொழிற்சாலை. எங்கள் கிராமத்தில் ஒருகிராம் இரண்டுகிராம் தங்கத்தை குமிட்டி உமி உழக்கில் வைத்து உருக்கும் கோவிந்தசாமி பத்தரைத் தவிர்த்து வேறு தொழிற்சாலைகளைக் கண்டதில்லை.  நகைகள் மேற்கத்தியரின் ரசனைகேற்று தயாரித்திருந்ததால் என் மனைவி அக்கறைகொள்ளமாட்டாளெனத் தெரியும். எங்கள் குழுவினருடன் நுழைந்தபொழுதே, இங்கிருந்து தப்பிக்க வழியிருக்கிறதாவென அங்கிருந்த நபரிடம் கேட்க, அவர் முகம் சுருங்கிப்போனது. இங்கும் ஒருவர் வாடிக்கையாளர்களை வலையில் வீழ்த்த பெரியதொரு சொற்பொழுவு ஆற்றினார். அவர் ஓய்ந்ததும்   விற்பனையாளர்கள் சூழ்ந்துகொண்டனர். ஒரு விற்பனையாளர் நீங்கள் பாகிஸ்தானியரா என்றார், மறுத்தேன். எங்களைவிடாமல் பின்தொடர்ந்து வந்தவரிடம் எங்கள் பேருந்து நிற்கும் இடத்திற்குத் திரும்பவேண்டும் சாத்தியமா என்றேன். வழி சொன்னார். எங்களுக்குத் துணையாக மூன்று தம்பதிகள். வெளியில்வந்து பேருந்தைக் கண்டுபிடித்தோம். வரிசை வரிசையாக நின்றிருந்த பேருந்துகளில் எங்கள் பேருந்து எண்ணைக் கண்டு பிடித்தோம். குழுவைச்சேர்ந்த மற்றவர்கள் வந்து சேர ஒரு மணி நேரம் ஆகுமென்று தோன்றியது. நடுத்தரவயது மனிதரொருவர் ஆரஞ்சு பழச்சாற்றை பிழிந்துவிற்றார். துருக்கியில் போனவிடங்களிலெல்லாம் ஆரஞ்சு சாறு விற்பது ஒரு தேசியத் தொழிலாக இருந்தது. பொதுவாக ஒரு குவளைச்சாறு ஒரு டாலரெனில் நகை உற்பத்தி நிறுவனத்தில் 1.50 டாலர்.

அங்கிருந்து பத்துமணிஅளவில் நாங்கள் சென்று பார்த்தது பெர்க(Perge) என துருக்கி மொழியிலும் பெர்ஜ் என்று ஆங்கிலத்திலும்  சொல்லப்படும் வரலாற்று நகரம். அண்ட்டால்யாவிற்கு 20கி.மீட்டர் தொலைவில் உள்ளது. இத்தொடரில் ஏற்கனவே பலமுறை துருக்கிக்கும் கிரேக்கத்திற்குமுள்ள வரலாற்று தொடர்புகள் குறித்து எழுதி வந்துள்ளேன். 12ம் நூற்றாண்டில் பெரும் எண்ணிக்கையில் கிரேக்க மக்கள் துருக்கிக்கு வடக்கிலிருந்து உள்ளே நுழைந்திருக்கிறார்கள். நுழைந்தவர்கள் ஆரம்பகால புலம்பெயர்ந்தோர் விதிமுறைப்படி செழுமையாகவிருந்த மத்திய தரைகடலொட்டி குடியேறியிருக்கிறார்கள். அவர்கள் குடியேறிய அப்பிரதேசம் ‘பாம்பிலி (Pamphylie) என அழைக்கப்பட்டது. இத்தொடரின் இரண்டாம் நாள் கட்டுரையில் அஸ்பெண்ட்டோஸ் திறந்த வெளி நாடக அரங்கத்தைபற்றி விளக்கமாக எழுதுயிருந்தேன். அந்நாடக அரங்கு பெர்ஜ் நகரத்தின் ஒரு பகுதிஅல்லது பெர்ஜ் நகர கிரேக்கமக்களின் கலை பண்பாட்டுக் குறியீடு. நகரத்தைச் சுற்றிப் பாதுகாப்பு அரண்போல பெரிய கோட்டை சுவரொன்று இருந்ததன் அடையாளமாக பத்துபன்னிரண்டு மீட்டர் உயரமுள்ள மதிற் சுவரின் எச்ச சொச்சங்கள் நுழைவாயிலில் காணக் கிடைக்கின்றன.  அடுத்த பெரிய அதிசயம் கவிழ்த்த ‘U’ போன்ற குதிரை இரத போட்டி மைதானம்,  ரதபோட்டிக்கென பாதைகளில் கற்களைபாவித்திருக்க அவற்றில் இன்றும்  ரதங்கள் தொடர்ந்து ஓடியதால் ஏற்பட்ட தடங்கள், அதிசயமாக சீர்குலையாமல் இருக்கின்றன. ஏறக்குறைய பதினைந்தாயிரம் பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் இருக்கைகளும் உள்ளன. இது தவிர நகரில் கடைத்தெருக்களும், மக்களுக்கான நடைபாதைகளும், கடைச்சொந்தக்காரர்கள் பின்புறமாக கடைக்குள் வரவும், வாடிக்கையாளருடன் தொடர்புகொள்ள மக்கள் நடைபாதையோடு கடைமுன்புறம் திறப்பும் உள்ளன. இங்கே முக்கியமாக குறிப்பிடவேண்டியது பொது நீராடுமிடமும், வெந்நீர் போடுவதற்கென அவர்கள் கையாண்ட பொறி இயல் நுட்பமும் வியக்கவைப்பவை. திரும்பிய திசைகளிலெல்லாம் பல மொழிகளில் (சீன மொழி உட்பட) வழிகாட்டிகள் உரத்த குரலில்  அழைத்து வந்திருந்த சுற்றுலா பயணியருக்கு கிரேக்க பழைய நகரத்தின் பெருமையைக் கூறிக்கொண்டிருக்க,  நம் அண்மையில் வந்து மெல்லிய குரலில், கைப்பிடியைத் திறந்துக்காட்டி இவ்விடத்தைச்சேர்ந்த பொருள், ஐம்பது டாலருக்குக் கிடைக்கும், வேண்டுமா என்கிற துருக்கியர்களையும் காணமுடிந்தது பெரும் அதிர்ச்சி.

அங்கிருந்து மத்திய தரைக்கடலொட்டி மேற்கத்தியர்களாலும், கோடீஸ்வரர்களாலும் ஆக்ரமிக்கபட்டிருந்த நவீன அண்ட்டல்யாவைக் கண்டபிறகு தூங்கி வழிந்த ரெஸ்டாரெண்ட் ஒன்றில் மதிய உணவிற்கு அழைத்துசென்றார்கள். சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்திருந்த உணவகம். உப்பு சப்பில்லாமலிருந்தது. கடந்த ஏழு நாட்களில் வேறெங்கும் அத்தனைமோசமான உணவை எடுத்துக்கொண்டதில்லை.

பிற்பகல் அண்ட்டால்யாவின் இதயப்பகுதிக்குச் சென்று பார்த்தோம். அதை கொஞ்சம் விபரமாக எழுதவேண்டியிருக்கிறது. அடுத்த வாரம் எழுதுகிறேன்.
(தொடரும்)

Series Navigationதப்பித்து வந்தவனின் மரணம்.தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகமாக மாற்றாதீர் !
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Comments

  1. Avatar
    punai peyaril says:

    அண்டால்யா பற்றி விரிவாக எழுதுங்கள்… அங்கு போய் வாழ ஆசை..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *