This entry is part 7 of 22 in the series 4 டிசம்பர் 2016
நிஷா
அதே மஞ்சள் பூக்கள் பூத்த வாசல்ச்செடி,
மரமாய் படர்ந்து சுவர் போர்த்திய மணிபிளான்டின் குளுமை,
திண்ணை மர பெஞ்சில் யாரும் புரட்டாத ஹிந்து பேப்பர்,
டிவியின் முன்னே அந்த நாற்காலி,
கோட் ஸ்டாண்டில் நீலம் போட்ட ஒரு கதர் சட்டை,
மூலை  அலமாரியில் சன்னமாய் மிஞ்சி இருந்த மூக்குப்பொடி வாசம் –
தாத்தா வீடு வந்தாயிற்று.
வீடு வந்து கேட் திறக்கையிலேயே ஆர்ப்பரித்து ஊர்க்கூடும்
தாத்தா இன்று இல்லை.
நிசப்தமாய் தாத்தாவின் வீடு –
பேரிரைச்சலாய் உரைத்துக்கொண்டே  இருந்தது
தாத்தா இனி இல்லாத புது உலகின் உண்மையை!
Series Navigationஉமர் கயாம் ஈரடிப் பாக்கள் -1அழியா ரேகை