சம்பூர்ணம்

This entry is part 3 of 10 in the series 3 ஏப்ரல் 2022

 

 

 

மூத்த குடிமகன் நான்

முக்கால் நூறு என் வயது

 

ஆமையாய் நகர்ந்தே

முயல்களை வென்றேன்

 

வாடிவாடி வதங்கி

மறுமழையில் துளிர்த்தேன்

 

என் வேர்களை இங்கு

எவரும் அறியார்

 

தேரை என்னைத்

தேவன் மறந்ததில்லை

 

சிற்பமும் தெரியும்

சிலந்திவலை நுட்பமும் புரியும்

 

கானல் நீரும் தெரியும்

கார்மேகமும் புரியும்

 

மின்மினி நான்

ஒளிக்க ஒன்றுமில்லை

 

பால் வடிக்கும் கள்ளிகள்

பசுவல்ல அறிந்தேன்

 

வெளுத்ததெல்லாம்

பாலல்ல புரிந்தேன்

 

விதை நான்

வீழ்ந்த மண்ணில் முளைத்தேன்

 

என்னையே ஊன்றி ஊன்றி

சுற்றிச்சுற்றிப் படர்ந்தேன்.

 

ஊற்றுக்கண்ணாய் இருந்து

ஊருணி ஆனேன்

 

சிப்பியாய் இருந்தேன்

முத்து பிறந்தது

 

மூப்பு வந்ததில்  

பிணிகள் சேர்ந்தது

 

பசிகள் வென்றேன்

ருசிகள் துறந்தேன்

 

விரும்பிய உணவை

துறக்கக் கற்றேன்

 

விரும்பா உணவை

மருந்தாய் உண்டேன்

 

நான் வாழ்ந்ததை வளர்ந்ததை

என் நூல்களில் சொன்னேன்

 

எல்லாம் நிறைவே

இருப்பது உபரி

வாழ்க்கை சம்பூர்ணம்

 

அமீதாம்மாள்

Series Navigationகனடா தமிழ் எழுத்தாளர் இணையம் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாஹைக்கூ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *