கனடாவில் சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றத்தினரின் ஒன்றுகூடல்

This entry is part 1 of 13 in the series 2 ஏப்ரல் 2023

குரு அரவிந்தன்

சென்ற சனிக்கிழமை மார்ச் மாதம் 25 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு கனடாவில் இயங்கிவரும் சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றத்தினரின் ஒன்றுகூடலும், இரவு விருந்துபசாரமும் இடம் பெற்றன. ரொறன்ரோ எக்லிங்டன் வீதியில் உள்ள ஈஸ்ட்ரவுன் விருந்தினர் மண்டபத்தில் மாலை 6:30 மணியளவில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. மன்றத்தின் தலைவர் திரு அஜந்தன் மகேந்திரனும் அவரின் துணைவியாரும் மங்கள விளக்கேற்றி விழாவை தொடக்கி வைத்தனர். தொடர்ந்து கனடா தேசிய கீதமும், தமிழ்தாய் வாழ்த்தும் இடம் பெற்றன. அதன்பின் சமீபத்தில் எம்மைவிட்டுப் பிரிந்தவர்களுக்காக ஒரு நிமிடம் அகவணக்கம் இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து பாமதி ராம்தாஸ் அவர்களின் வரவேற்புரை இடம் பெற்றது.

தொடர்ந்து மன்றத்தின் ‘கலைச்சங்கமம் – 2023’ என்ற ஆண்டு மலர் வெளியிட்டு வைக்கப்பட்டது. மருதநிலத்தின மாண்புகள் என்ற தலைப்பில் சண்டிலிப்பாயின் வரலாறு பற்றி எழுத்தாளர் குரு அரவிந்தன் எழுதிய கட்டுரை ஒன்றும் இதில் இடம் பெற்றிருந்தது. சண்டிலிப்பாய்க்குப் பெருமை சேர்க்கும் வழுக்கை ஆறு, கூவல் தெப்பக்குளம், கல்வளை அந்தாதி, கண்ணகி அம்மன் கோயில் போன்றவை பற்றிய விபரங்களும் இந்த மலரில் இடம் பெற்றிருக்கின்றன.

அடுத்து வரவேற்பு நடனம், பரதநாட்டியம், திரையிசை நடனம், சினிமாப் பாடல்கள், வீணையிசை, நகைச்சுவை நாடகங்கள் போன்ற கலைநிகழ்ச்சிகள் இடம் பெற்றன. நனட ஆசிரியை தேவகியின் மாணவிகளும் இந்த நடன நிகழ்ச்சிகளில் பங்கு பற்றிச் சிறப்பித்தனர். வைத்தியகலாநிதி வரகுணனின் மெல்லிசைப் பாடல்களும் இடம் பெற்றன. இந்தக் கலை நிகழ்ச்சிகளின் போது, கனடாவில் பிறந்து வளர்ந்த, மிகத் திறமையாக வீணையிசை வழங்கிய ரிசி என்ற 12 வயதுச்சிறுவனைப் பலரும் பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.

கலைநிகழ்ச்சிகளுக்கிடையே மூத்தோரைக் கணம் பண்ணும் நிகழ்வும் இடம் பெற்றது. சண்டிலிப்பாயின் மூத்த உறுப்பினர்களாகிய திரு கனகசபாபதி சச்சிதானந்தம், திருமதி மகேஸ்வரி நாகேந்திரம், திரு கருணா விஜயநாயகம், திரு பொன்னையா சிவானந்தன், மற்றும் மாகாஜனக் கல்லூரி ஆசிரியராகக் பணிபுரிந்த திரு செல்லையா சந்திரசேகரி ஆகியோர் இந்த ஒன்றுகூடலின் போது கௌரவிக்கப்பட்டனர். இந்தக் கௌரவிப்பு நிகழ்வுக்கு வருகைதர முடியாதவர்களுக்காக அவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

மன்றத்தின் சமூகசேவையைத் தொடர்ந்து கொண்டு நடத்துவதற்றகான நிதி சேகரிப்புக்காக நடத்தப்பட்ட குலுக்கல் சீட்டில் பரிசு பெற்றவர்களுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டன. சிற்றுண்டியும், இரவு உணவும் பரிமாறப்பட்டன. அதைத் தொடர்ந்து நன்றி உரையுடன் இனிதே நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன.

Series Navigationஏகாந்தம்
author

குரு அரவிந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *