ஜென் ஒரு புரிதல் – பகுதி 13

This entry is part 14 of 45 in the series 2 அக்டோபர் 2011

நிறையவே பேசுகிறோம். பேசுவதற்கு நிறையவே இருக்கிறது. நம் மீது அதிகாரம் செலுத்துபவர், நம் கட்டுப்பாட்டில் இருப்பவராக நாம் கருதுபவர் என்னும் இருவரிடம் எண்ணிக்கையில் அதிகமான அளவு பேசுகிறோம். நமது அச்சத்திலும், இரண்டாம் நபரை பயமுறுத்தவும் நீண்ட நேரம் பேசுகிறோம். போட்டியிட்டு ஒரு வாய்ப்பை வென்றெடுக்கவும், போராடி ஒரு வசதியைத் தக்க வைத்துக் கொள்ளவும், குற்றம் சாட்டவும், தன்னிலையை விளக்கவும் என புறவுலகில் நம் நிலைப்பே பேச்சில் தான் இருக்கிறது.

எப்போது பேச வேண்டும், எதைப் பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும், யாரிடம் பேச வேண்டும், எவ்வளவு நேரம் எந்த நேரம் என்பதெல்லாம் அத்துப் படியானவர், இதையே ஒரு கலையாக வளர்த்தெடுத்தவர் புறவுலகில் மிகவும் வெற்றி பெறுகிறார். விற்பதற்கோ வாங்குவதற்கோ எதாவது இருந்து கொண்டே இருக்கிறது. எதை என்ன விலைக்கு என்பது முடிவில்லாத கேள்வி. “கடை விரித்தேன். கொள்வாரில்லை” என்னும் வள்ளலாரின் பதிவு மிகவும் ஆழ்ந்த பொருளுள்ளது.

மின்னணுப் பரிமாற்றத்தில் இவை எல்லாம் ஆவணமாக வேறு ஆகிவிடுகின்றன. விற்க எதுவுமில்லாமல் நேயத்துடன் என்னை யாரும் அணுகினாரா? நான் கவனித்ததே இல்லை. என் கவனமும் கவனமின்மையும் என் தரப்பு வசதிகளை ஒட்டியவை. கலை, எழுத்து, சமூகம் உய்வது மற்றும் மனித வாழ்க்கையின் சூட்சமம் பற்றிய பதிவுகள் எனக்குத் தேவையற்றவை.

மெளனம் பேசாமலிருப்பது இவை இரண்டும் ஒன்றே என்பது மிகவும் தவறான புரிதல். சொற்கள் இல்லாத, சொற்களுக்கு அப்பாற்பட்ட ஒரு சூனியத்தில் ஒன்ற இயலும். அப்படி ஒன்றினால் அது மெளனம். ஓயாமல் மனம் சொற்களை அசை போடும் நிஜ வாழ்க்கையில் மெளனம் என்ற ஒன்று அன்னியமானது.

ஆன்மீகத்தின் அத்தனையையும் உள்ளடக்கிய ஒரு கருவூலம் உண்டு என்றால் அது மெளனமே. அந்த மெளனத்தில் ஒன்றும் தாகமும் தேடலும் வாய்க்க வேண்டும். பிரசவ வைராக்கியம், மசான வைராக்கியம் போல புறவுலகில் அடிபடும் போது வாழ்க்கையின் நிலையின்மை பற்றிப் பேசுவதும், வாழ்த்தும், வாய்ப்பும் வசதியும் கிடைத்தால் ஆர்ப்பரிப்பதும் ஆன்மீீகமாகாது.

இருள் நீங்கியதும் ஒளிதான். ஒளியில் ஓசையில்லை. உள்ளொளியின் அடையாளமும் அதுவே.

“ஹங்க் சிஹ் செங்க் சூ” என்பவரின் (பதினோராம் நூற்றாண்டு) ” மௌன ஒளி வெள்ளம்” என்னும் கவிதையின் ஒரு பகுதியே இது:

முடிவற்ற யுகங்கள்
ஒன்றுமின்மையில் கரையும்
இந்த ஒளி வெள்ளத்தில்
தொடர்ந்து முயன்றதெல்லாம்
மறந்து போகும்

இந்த அதிசயம் எங்கே இருக்கிறது?
பிரகாசமும் தெளிவும்
குழப்பங்களைப் போக்கும்

எழுவாயும் செயப்படு பொருளும்
ஒன்றை ஒன்று பாதிக்கின்றன
ஒளியும் இருளும் ஒன்றை ஒன்று
சார்ந்துள்ளன

ஆதரவென்று நம்ப
உலகுமில்லை மனமுமில்லை
ஆனால் இரண்டும் பரஸ்பரம் உரையாடுகின்றன

சரியான கருத்துக்கள் என்னும் மருந்தை அருந்து
விஷம் தடவிய மேளத்தை அடி

மௌனமும் ஒளி வெள்ளமும் முழுமையான பின்
கொல்வதா உயிர்ப்பிப்பதா
என்பது என் தேர்வாக இருக்கும்

இறுதியாக கதவு திறந்து
ஒன்று வெளிப்படுகிறது
கிளையில் காய் கனிந்து விட்டது

இந்த மௌனமே
இறுதிப் போதனை
இவ்வொளிவெள்ளமே பிரபஞ்சத்தின்
பதிலாகும்
யத்தனமில்லாத பதில் அது

காதுகள் வழியாகக் கிடைப்பதில்லை
இந்த போதனை

பிரபஞ்சம் முழுதும் யாவும்
ஒளியைத் தந்து
தர்மமே பேசுகின்றன

ஒன்றுக்கு ஓன்று சாட்சி கூறும்
ஒன்றின் கேள்விக்கு மற்றொன்று
விடை கூறும்

இசைவான பரிமாற்றம்
பரஸ்பரம் சாட்சி கூறுவதும்
பதில் அளிப்பதும்

சாந்தி இல்லாத ஒளிர்வில்
பேதங்கள் தென்படும்
அப்போது சாட்சி கூறுவதும்
விடையளிப்பதும்
ஒருமைப்பாடின்மைக்கே வழி கோலும்

சாந்திக்குள் ஒளி மறைந்ததெனில்
எல்லாமே வீணாகும்
இரண்டாம் பட்சமாகும்

மெளன வெளிச்சம் பூரணமடையும் போது
தாமரை மலரும்
கனவு காண்பவன் விழித்துக் கொள்வான்
நூறு நதிகள் ஆழ்கடல் நோக்கி பிரவாகிக்கும்
ஆயிரம் மலைகள் சிகரம் நோக்கி எழுந்துயரும்

மெளன ஒளி பூரணத்தை அடையும் போது
பாலை நீரினின்று பிரித்து அருந்தும் அன்னம் போலவும்
மதுவைத் தேடும் இடையறாச் சுறுசுறுப்பான தேனீ போலவும்
எனது பிரிவின் அசல் பாரம்பரியத்தை மேற்கொண்டு செல்கிறேன்

இந்த சாதனைக்கு மெளன ஒளி என்று பெயர்
அது அறுதியான ஆழ்நிலையினின்று
துளைத்து ஊடுருவி
ஆகச்சிறந்த உச்சத்தை எட்டும்

சத்யானந்தன்

Series Navigation(78) – நினைவுகளின் சுவட்டில்பிரதியைத் தொலைத்தவன்
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *