—வளவ. துரையன்
வாசனை ஒன்றினால்
கவர்ந்திழுக்கப்பட்டு
வரவேண்டிய
பட்டாம்பூச்சி
வண்ணத்தின் வரவேற்பால்
உள்ளே வந்துவிட்டது.
தொலைக்காட்சியைப் போய்
முகர்ந்து பார்த்து
ஆட்டங்கள் பிடிக்காததால்
அது விலகுகிறது.
காதலர்களின் இறுக்கம்போல்
கலந்து பிணைந்திருக்கும்
சுவர்களின் மூலையில்
சுற்றிவந்து சோர்வடைகிறது.
உயர உயரப் பரந்து
திருவிழாவில் பெற்றோரைத்
தொலைத்த சிறுவனாய்த்
திகைக்கிறது.
எப்படியோ சுழலும்
மின்விசிறிதன்னில்
சிக்கிக் கொள்ளாமல்
சன்னல் வழியாய்த்
தப்பித்துச் சென்றபின்தான்
எனக்கு நிம்மதி